வியாழன், 16 ஆகஸ்ட், 2018

சென்னை மழைநீர் கால்வாயில் உடன் பிறந்த குழந்தை ,,, கண்டெடுத்த சின்னத்திரை நடிகை

குழந்தையை மீட்ட சின்னத்திரை நடிகைக்குப் பரிசு!
மின்னம்பலம்: சென்னையில் மழைநீர் கால்வாயில் கிடந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த சின்னத்திரை நடிகை கீதாவைப் பாராட்டி, தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று பரிசு வழங்கினார்.
சென்னை எழும்பூரில் மக்கள் நலவாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை சார்பில் கர்ப்ப கால உயர் ரத்த அழுத்தம் குறித்த விழிப்புணர்வு சிடி வெளியீட்டு விழா இன்று (ஆகஸ்ட் 16) நடைபெற்றது. இந்த விழாவில், மழைநீர் கால்வாயில் இருந்து குழந்தையை மீட்டதற்காகச் சின்னத்திரை நடிகை கீதாவை அழைத்துப் பாராட்டினார் தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவருக்குப் பரிசு வழங்கிக் கவுரவித்தார்.

சென்னை வளசரவாக்கம் எஸ்.வி.எஸ். நகர் 6ஆவது தெருவில் உள்ள மழைநீர் கால்வாயில் நேற்று (ஆகஸ்ட் 15) பச்சிளம் குழந்தை ஒன்று அழுதபடி கிடந்தது. இதே பகுதியில் சின்னத்திரை நடிகை கீதாவின் வீடும் உள்ளது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர்.
குழந்தை கிடந்த மழைநீர் கால்வாயின் மேற்பகுதி சிமெண்ட் பலகையினால் மூடப்பட்டு இருந்தது. இதனால் குழந்தையை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. அப்போது, சின்னத்திரை நடிகை கீதா தரையில் படுத்தபடி கால்வாயில் கிடந்த ஆண் குழந்தையை மீட்டார். அக்குழந்தையை வெந்நீரில் குளிப்பாட்டி முதலுதவி செய்த கீதா, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். குழந்தையின் கழுத்தில் அதன் தொப்புள் கொடி சுற்றியபடி காணப்பட்டதால், பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை பெற்றோர் கால்வாயில் வீசிச் சென்றிருப்பது தெரிந்தது.
சுதந்திரம் தினம் அன்று குழந்தை கிடைத்தால், இந்தக் குழந்தைக்கு "சுதந்திரம்" என்ற பெயரை கீதா சூட்டினார். இதனையடுத்து, கீதாவுக்குப் பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்தக் குழந்தையை நேற்றிரவு நேரில் சென்று பார்த்த அமைச்சர் விஜயபாஸ்கர், குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாகத் தெரிவித்தார். இந்தக் குழந்தையைத் தானே வளர்க்க முடிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார் நடிகை கீதா.

கருத்துகள் இல்லை: