சனி, 18 ஆகஸ்ட், 2018

கருத்துரிமை காத்த கலைஞர் கூட்டத்தில் இந்து பத்திரிகையின் சமஸ் .. கலைஞரை .. கருணாநிதி என்று .. தொண்டர்கள் கொதிப்பு

கருத்துரிமை கூட்டத்தில் ‘கருணாநிதி’மின்னம்பலம்: கலைஞரின் பெருமைகள் குறித்து அரசியல், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறையினர் கலந்துகொண்டு பேசும் கூட்டங்கள் தமிழகத்தில் 5 இடங்களில் நடைபெறும் என்று திமுகவின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
கருத்துரிமை காத்தவர் கலைஞர் என்னும் தலைப்பில் ஊடக வல்லுநர்கள் கலந்துகொண்டு பேசிய முதல் கூட்டம் நேற்று (ஆகஸ்ட் 17) திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. திருச்சி மாவட்ட திமுக செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரையாற்றினார்.
இந்து குழும தலைவர் என்.ராம், நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன், நியூஸ் 7 உள்ளடக்க ஆசிரியர் ஆர்.முத்துகுமார், கலைஞர் செய்திகள் ஆசிரியர் ப.திருமாவேலன், சன் டிவி சிறப்பு செய்தியாளர் ராஜா திருவேங்கடம், நக்கீரன் ஆசிரியர் கோபால் ஆகியோர் கலந்துகொண்டனர். பார்வையாளர் பகுதியில் திமுக செயல்தலைவர் தலைவர் ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர்.

மூத்த பத்திரிகையாளர் கலைஞருக்கு புகழ் வணக்கம் செலுத்தும் இந்நிகழ்வில் நன்றியோடு கலந்துகொள்ள வந்திருக்கிறேன் என்று கூறி ஆர்.முத்துகுமார் பேசுகையில், “நான் கல்கி இதழில் பணி செய்துகொண்டிருந்தபோது கலைஞரை பேட்டியெடுக்க முயற்சித்தோம். ஐந்து முறை முயற்சித்தும் கலைஞர் மனது வைக்கவில்லை. அவருக்கு கேட்க தயாரிக்கப்பட்ட கேள்விகளை கோபாலபுரம் அனுப்பியும் அவர் மனம் இறங்கவில்லை. அந்த சமயத்தில் ஆனந்த விகடனில் அவரது பேட்டி வெளியாகிறது.
உடனே நான் கலைஞரிடம் கேட்க நினைத்த கேள்விகளை கடுமையான சொல்லாடல்களுடன் “கலைஞரிடம் கேட்கக்கூடாத 10 கேள்விகள்” என்ற தலைப்பில் பரமு என்ற பெயரில் கல்கியில் எழுதினேன். அது மஞ்சள் துண்டு போட்ட கலைஞரின் கார்டூனுடன் பிரசுரமும் ஆகிவிட்டது. மறுநாள் முரசொலியில் கல்கியின் பரமுவுக்கு முரசொலியின் தரமு பதில்கள் என்ற தலைப்பில் நான் கேட்ட 10 கேள்விகளுக்கும் அரைப் பக்கத்தில் பதிலளித்திருந்தார். அவருக்கே உரிய பாணியில் நறுக்கென இருந்தன அந்த பதில்கள். எனது கருத்துரிமையை அங்கீகரித்தவர் கலைஞர்” என்று தனது நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
கலைஞர் செய்திகள் ஆசிரியர் திருமாவேலன் பேசும்போது, “1949க்கு பிறகுதான் திமுகவினர் கலைஞரை சொந்தம் கொண்டாட முடியும். மு.க.ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் பிறந்த வருடத்திற்குப் பிறகுதான் சொந்தம் கொண்டாட முடியும். ஆனால் திருமணமாவதற்கு முன்பே 1938 லேயே அவர் பத்திரிகையாளர். எனவே மேடையிலிருக்கும் நாங்கள்தான் அவரை முதலில் சொந்தம் கொண்டாட முடியும். கலைஞர் கருத்துரிமை காவலன் என்பதற்கு நானே சாட்சி, ஒரே ஒரு கட்டுரைக்காக ஜெயலலிதா என் மீது 11 வழக்குகளைப் போட்டார். கலைஞரை விமர்சித்து 16 கட்டுரைகள் எழுதினேன். என் மீது ஒரு வழக்கு கூட போடவில்லை. கண்ணதாசனுக்கு அடுத்து கலைஞரை அதிகமாக விமர்சித்தவர் ஜெயகாந்தன். அவருடைய இறுதிக் காலத்தில் அவருடைய மருத்துவத்துக்கான முழுச் செலவையும் பார்த்தவர் கலைஞர் ” என்று குறிப்பிட்டார்.
தி இந்து தமிழ் திசை நடுப்பக்க ஆசிரியர் சமஸ் பேசுகையில், “கடைசி காலம் வரை விடாமல் எழுதிய ஆட்சியாளர் கருணாநிதி ” என்று குறிப்பிட்டார். சமஸ் தன்னுடைய உரையில் ‘கருணாநிதி’ என்று குறிப்பிட்டு பேசி வந்த நிலையில், பார்வையாளர் பகுதியில் இருந்த திமுக தொண்டர்கள், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கு விளக்கம் கொடுத்த சமஸ், “கருணாநிதி அவர்கள் உயிருடன் இருக்கும்போது ‘உங்களால்தான் முடியும் கருணாநிதி’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியதற்காக என்னை அழைத்து பேசியவர். அவரிடத்தில் எனக்கு நெருக்கமான தொடர்பு உண்டு. என்னுடைய தீவிரமான வாசகர் அவர். 30 வயது இளைஞன் 90 வயது பெரியவரை பெயரிட்டு அழைக்கும் உரிமை இருந்தது என்பது அவருக்கான பெருமை. அதனைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்று தெரிவித்தார்.
மேலும் தி இந்து குழுமத் தலைவர் இந்து ராம், நியூஸ் 18 ஆசிரியர் குணசேகரன், சன் நியூஸ் சிறப்பு செய்தியாளர் ராஜா திருவேங்கடம், நக்கீரன் ஆசிரியர் கோபால், டைம்ஸ் ஆப் இந்தியா ஆசிரியர் அருண் ராம், டெக்கான் கிரானிக்கல் ஆசிரியர் பகவான் சிங், ஊடகவியலாளர் அருணன் ஆகியோரும் கூட்டத்தில் உரையாற்றினர்.

கருத்துகள் இல்லை: