வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

கடைமடைக்கு நீர் செல்வதைத் தடுக்கும் மணல் கொள்ளை!

கடைமடைக்கு நீர் செல்வதைத் தடுக்கும் மணல் கொள்ளை! மின்னம்பலம்:  மணல் கொள்ளை காரணமாகக் கடைமடை பகுதிகளுக்குக் காவிரி நீர் சென்று சேரவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளா, கர்நாடகாவில் கொட்டித் தீர்த்த பெருமழையால், காவிரி ஆற்றில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெள்ளம் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை இந்த ஆண்டு இரண்டாவது முறையாக நிரம்பி வழிகிறது. அதனால் காவிரியிலிருந்து விநாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அதன்படி காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடினாலும் டெல்டா மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை.
இந்நிலையில் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேராததற்குக் காரணம், இயற்கை அல்ல, மணல் கொள்ளை எனும் மனிதர்களின் பேராசை என்று ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று (ஆகஸ்ட் 17) வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து கடந்த மாதம் 19 ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. தண்ணீர் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு மாதமாகும் நிலையில் இப்போது தான் திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கடைமடைப் பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடையத் தொடங்கியுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட 10 நாட்களில் கடைமடை பாசனப் பகுதிகளை சென்றடைந்திருக்க வேண்டிய தண்ணீர் ஒரு மாதத்திற்குப் பிறகு செல்வதற்குக் காரணம் காவிரியின் கிளை ஆறுகளும், பாசனக் கால்வாய்களும் முறையாகத் தூர்வாரப்படாதது தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டத்தில் உள்ள விளைநிலங்களுக்கு வாங்கல் நெரூர் ராஜ வாய்க்கால், பாப்புலர் முதலியார் வாய்க்கால் உள்ளிட்ட கால்வாய்கள் மூலமாகக் காவிரி நீர் செல்வது வழக்கம்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, காவிரியில் விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்தாலே இந்தக் கால்வாய்கள் மூலம் விவசாயத்திற்குத் தாராளமாக தண்ணீர் கிடைத்தது. இந்த நிலையில் இப்போது விநாடிக்கு 2 லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டும் கால்வாய்கள் மூலம் நிலங்களுக்குத் தண்ணீர் சென்றடையாததற்கு மணல் கொள்ளை தான் காரணம்” என்று சுட்டிக்காட்டியுள்ளார்
3 அடி ஆழத்திற்கும் மேல் மணல் அள்ளக்கூடாது என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ள நிலையில், கரூர் மாவட்டத்தில் 30 அடி முதல் 40 அடி ஆழத்திற்குக் காவிரி ஆற்றில் மணல் வெட்டி எடுக்கப்பட்டிருக்கிறது. இதனால் காவிரியில் எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும் அது கால்வாய்கள் அமைந்துள்ள உயரத்தை எட்ட முடிவதில்லை என்பதால் விளைநிலங்களுக்குத் தண்ணீர் செல்ல வாய்ப்பில்லை.
எனவே கரூர் மாவட்டத்தில் மணல் எடுக்கத் தடை விதிப்பதுடன், தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்குவதன் மூலமாக மட்டுமே பாசனக் கால்வாய்கள் மூலம் நிலங்களுக்கு தண்ணீரைக் கொண்டு செல்ல முடியும். இச்சிக்கலுக்கு இதுதான் சாத்தியமான தீர்வாகும்.
கரூர் மாவட்டத்தில் மட்டும் தான் இந்த நிலை என்று கூற முடியாது. காவிரியிலும்,கொள்ளிடத்திலும் மணல் கொள்ளை நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டுமானால் ஆறுகளில் மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும். அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளும் மூடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டுக்கு மேலாகியும், இதுவரை ஒரு குவாரி கூட மூடப்படவில்லை. மாறாக புதிய குவாரிகள் தான் திறக்கப்பட்டு வருகின்றன.
காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயத்தைக் காக்க வேண்டுமானால் காவிரி,கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் மூட வேண்டும். அத்துடன் இரு ஆறுகளிலும் வாய்ப்புள்ள இடங்களில் தடுப்பணைகளைக் கட்டி விவசாயத்தைப் பாதுகாக்க அரசு முன்வர வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: