சனி, 11 ஆகஸ்ட், 2018

விஸ்வரூபம் 2 தோல்வி ..தயாரிப்பாளர் கடும் அதிர்ச்சி !

வினவு :மெரினாவில் கருணாதியை புதைச்சுண்டாளாமே, இனி எப்படி அங்கே காத்தாடறது என்று மயிலாப்பூர் ஆத்துல ‘மகா ஜனங்கள்’ சீதபேதியில் அலைந்து கொண்டிருக்கின்றனர். இந்நேரம் பார்த்து ஆழ்வார்பேட்டை ‘ஆண்டவனுக்கு’ சோதனை மேல் சோதனை!< விஸ்வரூபம் 2 படத்தின் வசூல் எப்படி இருக்கும் என்று இந்திய வெண் திரை வர்த்தக நிபுணர்களிடம் கேட்ட போது பலரும் உதட்டை பிதுக்குகிறார்களாம். கலைஞரின் மரணத்தை ஒட்டி தென்னிந்தியாவில் வசூல் எப்படியிருக்கும்? கணிக்க முடியாது என்கிறார்கள். இந்தி மொழியில் ஏதோ முதல் நாள் ஓரிரண்டு கோடி ரூபாய் வந்தால் அதிகம் என்கிறார்கள்.
கடைசியில் கருணாநிதியின் மரணம் இந்திய அரசு உளவுத் துறையான “ரா”-வில் பணிபுரியும் ஒரு தேசபக்தனான புலனாய்வு ஏஜெண்டை இப்படி சோதிக்க வேண்டுமா? ஒருவேளை இதுவும் திராவிட – பாகிஸ்தான் சதியாக இருக்குமோ?
மும்பை – இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை உண்மையிலேயே எக்ஸ்பிரஸ் வேகத்தில் “விஸ்வரூபம் – 2” விமர்சனத்தை இன்று மங்களகரமான வெள்ளிக்கிழமை ஆகஸ்டு 10 காலை 9:55:32-க்கு வெளியிட்டு விட்டது. என்னவென்று பார்த்தால் அது வெளியே – உள்ளே மற்றும் உள்ளுள்ளே எங்கு சொன்னாலும் கிசுகிசுத்தாலும் வெட்கக் கேடு!

“கமலஹாசனது படம் சம்பந்தமே இல்லாமல் ஒரு குழப்பம்” என்று சுப்ரா குப்தா நன்னா சுப்ரபாதம் போல தலைப்பு போட்டு எழுதியிருக்கிறார். குழப்பம் என்பதே பொருளற்றது என்றால் சம்பந்தமே இல்லாத ஒரு குழப்பம் என்றால் அது எப்பேற்பட்ட உலகமகாக் குழப்பமாக இருக்கும்?
இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் என்று உலகளவில் பயணிக்கும் இப்படத்தில் கமலஹாசன், பூஜா குமார், ஆன்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், அனந்த் மகாதேவன், வகீதா ரஹ்மான், ஜெய்தீப் அகல்வாத் ஆகியோர் நடித்திருக்க, சாருஹாசனது தம்பிதான் இயக்கியிருக்கிறார். இந்த மரணமொக்கைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏதோ பாவம் பார்த்து அளித்திருக்கும் ரேட்டிங் ஒன்றரை நட்சத்திரம்!
“விஸ்வரூபம்” பாகம் ஒன்றிலாவது ரா எஜெண்டான மேஜர் விஸம் அகமத் காஷ்மீரி, விஸ்வநாதன் என்ற பெயரில் கதக் நடனம் போட்டு ஏதோ கொஞ்சம் பொழுதை போக்க வைத்தாராம். இதை ஃபர்ஸ்ட் போஸ்ட் இணையதளத்தின் விமர்சகர் முன்தேதியிட்ட போனசாக ஆற்றுப்படுத்துகிறார். இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகரோ முதல் பாகத்தை ஏதோ ஒரு பொழுது போக்கு காமிக்ஸ் புத்தகம் போலவாவது எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.
ஏன் இந்த ஃபிளாஷ்பேக் சீராட்டுக்கள்? கமலஹாசன் போன்ற ஞானிகளை, வணிக பொழுதுபோக்கு வி.ஐ.பி-களை முற்றிலும் வறுக்க முடியாதில்லையா? இருப்பினும் இரண்டாம் பாகத்தை அப்படி வணிகத்தின் பொருட்டும் இப்பத்திரிகைகள் சுமக்க முடியவில்லை! இது யதார்த்தம்! பிறகு இப்பத்திரிகை படிப்பவர்கள் அடுத்த இந்திப் பட விமர்சனங்களுக்கு இங்கு வராவிட்டால் சினிமா எக்ஸ்பிரஸ் சினிமா நகரப் பேருந்தாகி விடுமல்லவா?
ஆகவே, பாகம் இரண்டு ஒரு சோகமான சம்பந்தமே இல்லாத குழப்பம் என்கிறார் சுப்ரா குப்தா, இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.
ஓபனிங் சீனீல் ஒட்டு போட்ட தியாக விழுப்புண்களுடன் கமல் விமானத்தில் ஏற்றப்படுகிறார். கூடவே மனைவியான நிருபமாவும், அழகான உதவியாளரான அஷ்மிதாவும். முன்னவர் தன்னை அணுசக்தி விஞ்ஞானியாக கூறிக் கொண்டாலும், பெண் என்ற முறையில் ஆண்களை வீழ்த்தி உளவு பார்க்கவே விரும்புகிறாராம்.
பின்னவர் புத்திசாலித்தனமாக உளவாளியாக டமாரம் அடித்தாலும் அதை ஐந்து நட்சத்திர விடுதிகளில் ஒரு மாடலிங் நடிகர் போல தேடுகிறாராம். இந்த அவியல் கூட்டணியில் பாத்திர வார்ப்பு எனும் சமையல் பொருத்தம் சகிக்கவே முடியவில்லையாம்.
ஆக இந்தக குழப்பக் கூட்டணி கதைக்களமான நம்பிக்கையற்று இருக்கும் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் பயணிக்கிறது. படத்தின் பாத்திரங்கள், உளவாளிகள், சதிகாரர்கள், மறந்து போகக் கூடிய அம்மாக்கள், சென்டிமெண்ட் மகன்கள், உள்ரூமில் உத்தரவு போடும் திறமையான உளவுத்துறை மேலதிகாரிகளுக்காக உருவாக்கப்பட்ட அழகான பெண்கள் – இவர்கள் ஒருவருக்கொருவர் கொல்லாமல், கைச் சண்டை, கத்திச் சண்டை போடுகிறார்கள். கத்திகள், துப்பாக்கிகளை கொண்டு செல்வதிலும், லோடிங் அன்லோடிங் செய்வதிலும் பிசியாக இருக்கிறார்கள்.
ஹெலிகாப்டர்கள் விண்ணில் பாய்கின்றன, ஏவுகணைகள் மண்ணில் சீறுகின்றன, கையெறி குண்டுகள் தூக்கி எறியப்படுகின்றன. (என்ன ஒரு உலகமகா கண்டுபிடிப்பு!) கடைசியில் கமல்ஹாசன் தரித்திருக்கும் பேராயுதங்களோடு அபாயகரமான முறையில் கிராபிக்ஸ் உதவியுடனும், சிறப்பு ஒலி மிக்சிங் தயவிலும் சண்டையிட்டு இந்திய தலைநகராம் புது தில்லி குண்டு போட்டு அழிக்கப்படும் அபாயத்திலிருந்ந்து காக்கிறார்.
சிறந்த வகை உளவுத்துறை புலனாய்வு படங்களில் இருக்கும் எனர்ஜி நிறைந்த அதிரடிக் காட்சிகள், வண்ணமயமான பாத்திரங்கள் – அதாவது நாயகன் – வில்லனுக்கு இடையே மங்கிய கோடுதான் இருக்கும், தடகள வீரனைப் போன்ற ஆண்கள், அவர்களுக்கு சமமாக இருக்கும் பெண்கள்…… இவை எவையும் எதுவும் விஸ்வரூபத்தில் லேது என புலம்புகிறார் எக்ஸ்பிரஸ் விமர்சகர்.
கமலின் வயதான தாயாக நடித்திருக்கும் வகீதா ரஹ்மான் படத்தில் அல்சைமர் எனப்படும் மறதி நோய் கொண்டவராக வருகிறார். இவரது பாத்திரத்தை தவிர ரா-வின் உயர் அதிகாரிகளாக அறைக்குள் டெக்னிக்கல் உத்தரவு போடும் சேகர் கபூர், ஆனந்த் மகாதேவன், அல்கைதா ராகுல் போஸ், துப்பாக்கியை விட்டுப் பிரியாத கைகளைக் கொண்ட ஜெய்தீப் அஹல்வாத் அனைவரும் தெண்டமாக வந்து போகிறார்களாம். ஆக மறதியாக நடிக்கும் ஒரு பாத்திரத்தை தவிர மற்றவை அனைத்தும் மறந்தும் கூட குறிப்பிடும்படியானவர்கள் அல்லவாம்.
charuhasanஇதற்காக கமல்ஹாசன் யாரைக் குற்றம் சாட்ட முடியும்? சாருஹாசனின் தம்பியைத் தவிர! ஏனெனில் இந்தக் குப்பையை எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்தவர் அந்தத் தம்பியேதான். நேரமும், பவுடரும் இருப்பதால் தசாவாதாரம் போட்டு விட்டு “தஸ்” பைசா கூட வசூலாகவில்லையே என்று எந்த அவதாரத்திடம் கேட்பது?
இவ்வளவிற்கும் இந்தப்படம் “இஸ்லாம் ஃபோபியா” எனப்படும் முசுலீம்களை அவதூறுடன் கருதும் உலகப் பொதுக் கருத்தில் எடுக்கப்பட்ட படம் என்பதை ஆங்கில விமர்சகர்கள் போகிற போக்கில் சொல்கிறார்கள். அதை முதல் பாகத்திலேயே பார்த்து விட்டோம்.
முதல் பாகம் எடுக்கும் போது கமலுக்கு தோன்றியிருக்கும் – மூன்று நாடுகளில் எடுக்கிறோம், தெரிவு செய்யப்பட்ட ஷாட் போக கனதியான அடிகள் மீதியிருக்கின்றன, அதை வைத்து ஒட்டுப் போட்டு இன்னொரு பாகம் போட்டால் என்ன என்று……….!
முதல் விஸ்வரூபம் வரும் போது அம்மா காப்பாற்றினார். இரண்டாவதில் அய்யா கெடுத்து விட்டார்! இருப்பினும் இரண்டாவதில்தான் உலக நாயகன் அது ஏதோ மய்யமாமே, கட்சி ஆரம்பித்திருக்கிறார். பிக்பாஸ், பிக்பாஸ் சீசன் 2, விஸ்வரூபம் 2 ஆகியவற்றில் கமல்ஹாசனுக்கு கிடைக்கும் பெரும் பணத்திற்கான இலவசமான விளம்பரமே அவரது அரசியல் பில்டப்புகள்!
இந்தி விஸ்வரூப பிரமோஷனோடு என்.டி.டிவி.யில் பேட்டியளித்தவர், நீங்கள் மோடி ஆதரவா, எதிர்ப்பா? எனும் மாபெரும் கேள்விக்கு பதிலளித்திருக்கிறார். அதை பதில் என்று சொன்னால் பல்லியே நம்மிடம் பிராது பறையும்!
அதாவது அவர் மோடி ஆதரவோ அல்லது மோடி எதிர்ப்போ இல்லையாம். தனிநபர்களை எப்போதும் ஆதரித்தோ, எதிர்த்தோ பேசமாட்டாராம். சித்தாந்தத்தோடுதான் அவர் எப்போதும் உறவு கொள்வாராம்? இந்த உளறல்களை சகித்துக் கொள்கிறார்களே அந்த நெறியாளர்கள், அவர்களின் பொறுமை உண்மையிலேயே வேர்க்க் வைக்கிறது. சரிங்க கமல் ஆபிசர், அது என்ன சித்தாந்தம்? வறுமைக்குதான் அவர் எதிரே அன்றி, கட்சிகள் அல்லவாம். இந்தியா வளரவேண்டும் என்பதைத் தாண்டி அவருக்கு வேறு கொள்கையே இல்லையாம்? இதைத்தானய்யா மோடி முதல் நமது மக்கள் கட்சி கார்த்திக் வரை சொல்கிறார்கள்?
சரி இந்த எழவையெல்லாம் விட்டுத் தொலைப்போம். சகித்துக் கொள்வோம். ஆனா பாருங்க, இவரது அண்ணன் சாருஹாசன் அப்பைக்கப்ப ஒன்று சொல்வாரே, அதை மட்டும் எப்போது நினைத்தாலும் கிட்னி பதறுகிறது!
ரஜினிக்குத்தான் தமிழகத்தில் செல்வாக்கு, அவருக்குத்தான் மக்கள் வாக்கு அளிப்பார்கள், கமலுக்கு வாக்கு போட மாட்டார்கள் என்று எல்லா தொலைக்காட்சியிலும் சாருஹாசன் பேசித் தீர்த்து விட்டார். சரி இப்படி வெளிப்படையாக தம்பியை தரைமட்டமாக்குகிறாரே என்று பார்த்தால் அடுத்து ஒரு பன்ஞ் நைசாக வரும்.
அதாவது புத்திசாலிகளை தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள், அதனால்தான் கமலை மறுத்து, ரஜினியை ஏற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு ஒரு தினுசாக பார்ப்பார் இந்த பெரியவர்! பிக்பாசில் கூட தம்பியும் ஏதாவது பன்ஞ் மாதிரி சொல்லிவிட்டு ஆடியன்சை பார்ப்பார். பல நேரம் கை தட்டல்களில் டைமிங் தாமதமாகும். என்ன இருந்தாலும் செட்டப் செய்த கைகளிடம் செட்டப் செல்லப்பாவே இருந்தாலும் டக்கு டக்குனு கை தட்டல் வருமா என்ன?
காரியவாதம், பிழைப்புவாதம், சந்தர்ப்பவாதம் இன்ன பிற வாதங்களுக்காக கட்சியும், காட்சியும் நடத்தி வரும் கமல்ஹாசனை ஏதோ மாபெரும் புத்திசாலி, நல்லவர் வல்லவர் என்று போடுகிறாரே, சாருஹாசன்… இப்படி நாலு பேர் இருக்கும் போது ஏன் விஸ்வரூபம் 2 வெளிவராது?
– வேல்ராசன்

1 கருத்து:

Thayalini சொன்னது…

Very interesting. Well said.