வியாழன், 15 பிப்ரவரி, 2018

குஷ்பூ :தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர்!

தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர்!மின்னம்பலம்:  தமிழச்சிக்கு ஸ்கூட்டர் தமிழனுக்கு குவாட்டர் இதுதான் தமிழகத்திற்கு எடப்பாடி அரசு கொண்டுவந்திருக்கும் திட்டம் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் திமுக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மறியல் போராட்டத்தை நடத்தின. அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பொதுக்கூட்டம் நடத்தி வருகின்றனர். அந்தவகையில் நேற்று(பிப்ரவரி 13) திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி சார்பாக கரூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ கலந்து கொண்டார்.

அந்த பொதுக்கூட்டத்தில் பேசிய குஷ்பூ, "தமிழச்சிக்கு ஸ்கூட்டர், தமிழனுக்கு குவாட்டர் இதுதான் எடப்பாடி அரசு கொண்டுவந்திருக்கும் திட்டம், ஸ்கூட்டரும் குவாட்டரும் கொடுக்கத் தான் தமிழக மக்கள் உங்களை தேர்ந்தெடுத்தார்களா ? மக்களை முன்னேற்றுவதற்காக ஸ்கூட்டர் வழங்கப்படவில்லை, ஸ்கூட்டர் கொடுப்பதற்கான காரணமே, கணவன்மார்கள் குடித்துவிட்டு டாஸ்மாக் கடைகளில் விழுந்து கிடைக்கும்போது அவர்களை தூக்கி வருவதற்குத்தான்" என்று கடுமையாக தமிழக அரசை விமர்சனம் செய்தார்.
தொடர்ந்து பேசும்போது, "பொங்கல் பண்டிகைக்கு மட்டும் ஒரே நாளில் ரூ. 240 கோடிக்கு விற்பனையாகி அரசிற்கு வருமானம் கிடைத்திருக்கிறது. 500 டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாக பொய் சொல்லுகிறார்கள். பேருந்து கட்டணத்தை அரசு உயர்த்தியது ஏன்? முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பஸ்சில் பயணம் செய்கிறார்களா? போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பஸ்சில் பயணம் செய்வாரா? அப்போதுதான் பேருந்து கட்டணம் எவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது என தெரியும்" என்று குஷ்பூ குற்றம் சாட்டியுள்ளார். மேலும் ராகுல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் போது காவிரியிலிருந்து தமிழகத்திற்கு நிச்சயம் தண்ணீர் வரும் என்றும் குஷ்பூ கூறினார்.
மேலும் பேசுகையில், "நாடு முழுவதும் ஒரே மதம், காவிக்கொடி என கொண்டு செல்ல பாஜக அரசு துடிக்கிறது. 2019 பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரும். ராகுல்காந்தி பிரதமராக அமர்வார். தமிழகத்தின் முதல்வராக திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பார். தமிழர்களின் ஒரே நிறம் சுயமரியாதை மட்டும்தான். அடுத்து வருகிற தேர்தலில் மக்கள் பணத்தை வாங்கி கொண்டு அவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். நாட்டின் நலன் கருதி வருங்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள்" என்று குஷ்பூ வலியுறுத்தினார்.

கருத்துகள் இல்லை: