திங்கள், 12 பிப்ரவரி, 2018

ஜெ. படம் திறக்க மோடி வராதது ஏன்?

 டிஜிட்டல் திண்ணை: ஜெ. படம் திறக்க மோடி வராதது ஏன்?மின்னம்பலம்: தலைமைச் செயலகம்: . “எதிர்க்கட்சிகள்
எதிர்ப்பை மீறிச் சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்தை திறந்து வைத்துவிட்டார் சபாநாயகர் தனபால். ஜெயலலிதா படத்தைச் சட்டமன்றத்தில் திறந்துவைக்க வேண்டும் என முதலில் பிரதமர் மோடியைத்தான் அழைத்தார்கள். ஆனால், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லையாம். அமைச்சர் ஜெயக்குமார் இது சம்பந்தமாகப் பேசும்போது, ‘பிரதமர் நேரில் வந்து அம்மா படத்தைத் திறந்துவைப்பதாக இருந்தது. வேலை பளு காரணமாக அவரால் இந்த நிகழ்வில் பங்கேற்க முடியவில்லை’ என்றார்.
எடப்பாடி பழனிசாமி கண் அறுவை சிகிச்சை செய்துகொள்வதற்கு முன்பே படத் திறப்பு விழா பற்றித் துணை முதல்வர் பன்னீருடன் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது, ‘அம்மா படத்தைத் திறக்கிறதை இனியும் நாம தள்ளிப்போடுறது சரியாக இருக்காது. உடனே பிரதமரிடம் பேசி அவரை விழாவுக்கு அழைக்கலாம். பிப்ரவரி 24ம் தேதி அம்மா பிறந்தநாள் வருது.
அதுக்குள்ள அம்மா படத்தை திறந்தாகணும். டெல்லியிலிருந்து நமக்கு சப்போர்ட் கிடைக்குமான்னு தெரியலை.முயற்சி செஞ்சு பார்க்கலாம்...’ என சொல்லியிருக்கிறார் எடப்பாடி. உடனடியாக தம்பிதுரை மூலமாக டெல்லியில் உள்ள பிஜேபியின் தலைவர்களுடன் பேசியிருக்கிறார்கள். ஜெயலலிதா படத்தைத் திறந்துவைக்க அழைப்பு வந்திருக்கிறது என்ற தகவல் பிரதமருக்கும் போனதாகச் சொல்கிறார்கள்.
‘தமிழ்நாட்டு அரசியலில் நிறைய குழப்பம் இருக்கு. இந்த சூழ்நிலையில் ஜெயலலிதா படத்தை திறந்து வைக்க நீங்க தமிழ்நாட்டுக்குப் போறது சரியாகத் தெரியவில்லை. அதுவும் இல்லாமல் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஒருவரின் படத்தை நீங்க திறந்து வைக்கப் போனால், அதிலும் சர்ச்சைகள் கிளம்பும். அதிமுகவை வைத்து தமிழகத்தில் நமது இமேஜைத் தூக்கி நிறுத்துவது என்பது இனி சாத்தியமில்லை. அவங்களோடு நாம சேர்ந்தால் நமக்கென இருக்கும் இமேஜும் டேமேஜ் ஆகிடும்...’ என மோடியிடம் சொன்னதாகச் சொல்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்த அழைப்புக்கு அதனால்தான் கடைசிவரை எந்தத் தகவலும் பிரதமர் அலுவலகத்திலிருந்து சொல்லப்படவில்லை எனச் சொல்கிறார்கள் பிஜேபி வட்டாரத்தில்.
அவர்களே இன்னொரு தகவலும் சொல்கிறார்கள். ‘எப்படியும் விழாவுக்கு மாநில கவர்னரை அழைப்பார்கள் என்பது பிஜேபிக்குத் தெரியும். அதனால், அவருக்கு முன்கூட்டியே டெல்லியில் இருந்து, ‘ஜெயலலிதா பட திறப்பு விழாவுக்கு அழைப்புவரும். போக வேண்டாம்..’ என்ற தகவல் சொல்லப்பட்டிருக்கிறது. கவர்னருக்கு அழைப்பு போயிருக்கிறது. ஆனால், அவரும் போகவில்லை. இப்படி டெல்லி ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க, ஜெயலலிதா படம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.
திமுக, கம்யூனிஸ்ட்கள், காங்கிரஸ், தேமுதிக என எதிர்க்கட்சிகள் எல்லாமே ஜெயலலிதா படத்தைச் சட்டமன்றத்தில் திறப்பதற்கு எதிர்ப்பை காட்டினார்கள். காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டினாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. விஜயதரணி சட்டமன்றத்துக்குச் சென்று சபாநாயகருக்குப் பூங்கொத்து கொடுத்து வாழ்த்திவிட்டு வந்தார். ஏற்கெனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பாக டிடிவி தினகரன் வீட்டுக்குப் போய் சர்ச்சையை உண்டாக்கினார் விஜயதரணி. இப்போது காங்கிரஸ் புறக்கணித்த விழாவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இந்தத் தகவல் தெரிந்ததும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கொந்தளித்துவிட்டார். ‘கட்சி ஒரு முடிவெடுத்தால், அதைக் கேட்கவே மாட்டேன்னு கங்கணம் கட்டிட்டு இருக்கிறவங்க எல்லாம் எதுக்கு கட்சியில் இருக்கணும். அவங்க மேல ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தலைமைக்கு பரிந்துரைக்கிறேன். அந்தம்மா பண்றதை எல்லாம் எவ்வளவு நாளைக்கு பொறுத்துட்டு போகுறது?’ என அவர் சொல்லி வருகிறார். விஜயதரணியோ, ‘கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நான் விழாவுக்குச் செல்வதைத் தவிர்த்தேன். ஆனால், எனக்கு ஜெயலலிதாவைப் பிடிக்கும் என்பதால் விழா முடிந்த பிறகு சென்று வாழ்த்து தெரிவித்தேன்’ என கூலாகச் சொல்லிவிட்டாராம். விஜயதரணி மீது நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும் எனத் தீவிரமாக இருக்கிறாராம் திருநாவுக்கரசர்” என்று முடிந்தது

கருத்துகள் இல்லை: