வியாழன், 30 நவம்பர், 2017

தீவிரமாகும் செவிலியர்கள் போராட்டம்...நேற்றிரவு நடந்தது என்ன?

செவிலியர்கள்
விகடன் ஜெ.அன்பரசன்'  : பணி நிரந்தரம்' செய்யக்கோரி, கடந்த 16 ஆம் (16-11-2017) தேதி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில்,  ஆர்ப்பாட்டம் செய்த செவிலியர்களை சமாதானம் செய்து கலைந்துபோகச் சொன்னது அரசுத் தரப்பு. ''உடனடியாக எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், இது மாபெரும் போராட்டமாக வலுப்பெறும்'' என்று எச்சரித்துவிட்டு கலைந்து சென்றனர் செவிலியர்கள். அப்போது அரசுத் தரப்பு நினைத்துப் பார்த்திருக்காது, 'இவர்கள் போராட்டமெல்லாம் செய்வார்கள்' என்று. ஆனால், இப்போது மருத்துவத்துறையும், அரசுத்தரப்பும் ஸ்தம்பித்து நிற்கின்றன; காரணம், சென்னையில் நடைபெற்றுவரும் செவிலியர்கள் போராட்டம்!
கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதால், தமிழகம் முழுவதிலுமிருந்து 4,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சென்னை வந்து தங்களின் உரிமைக்கான மாபெரும் போராட்டத்தினை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மருத்துவத் தேர்வாணையத்தின் (MRB - MEDICAL SERVICES RECRUITMENT BOARD) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 11,000 செவிலியர்கள் இன்னும் பணிநிரந்தரம் செய்யப்படாமல் இருக்கிறார்கள். கடந்த 2015 ஆம் ஆண்டு தேர்வு எழுதி பணியில் அமர்த்தப்படும்போது 'இரண்டு ஆண்டு முடிவுக்குள் அனைவருக்கும் பணி நிரந்தரம் செய்யப்படும்' என்று தேர்வாணையம் கூறியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்ட நிலையிலும் அவர்களுக்கு பணிநிரந்தரம் செய்யப்படவில்லை.
இதையடுத்து கடந்த திங்கள் கிழமை (27-11-2017) முதல் சென்னையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர் செவிலியர்கள். ''ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தவர்களுக்கே இன்னும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்வின்போது, 'அவரவர் சொந்த மாவட்டங்களுக்குள் விருப்பப்பட்ட இடங்களில் பணி வழங்கப்படும்' என்று சொல்லிவிட்டு வெளி மாவட்டங்களில் போஸ்டிங் போட்டுள்ளனர். இதையும் மாற்றி எங்கள் சொந்த மாவட்டம் அல்லது பக்கத்து மாவட்டங்களில் பணி வழங்கவேண்டும்'' என்று குமுறுகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்கள்.
செவிலியர்கள்
செவிலியர்களில் பலரும் தங்களின் கைக்குழந்தைகளோடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களைக் கலைப்பதற்காக டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள கழிவறைகளை கடந்த திங்கள் கிழமை மாலை முதலே பூட்டி வைத்துவிட்டது நிர்வாகம். மேலும்,  செவிலியர்களின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் என யாரையும் போராட்டக்களத்தினுள் அனுமதிக்கவில்லை போலீஸார். இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை மாலை (28-11-2017) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செவிலியர்களுடனான பேச்சுவாரத்தைக்குப் பின்னர், "செவிலியர்களின் 90 விழுக்காடு கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன. அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய காலஅவகாசம் தேவைப்படும்'' என்றார்.
இதனிடையே, சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் கேட்டு, போராட்டக்காரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், ‘நாளைக்குள் பணிக்குத் திரும்ப வேண்டும். அவ்வாறு பணிக்குத் திரும்பாதவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து நூற்றுக்கணக்கான ஆண் - பெண் காவலர்கள் டி.எம்.எஸ். வளாகத்தினுள் குவிக்கப்பட்டுள்ளனர். 'அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்...' என்ற பதற்ற சூழ்நிலை அங்கு உருவாகியுள்ளது. செய்தி சேகரிப்பு பணிக்காக டி.எம்.எஸ். வளாகத்தினுள் நுழைய முயன்ற செய்தியாளர்களிடம், '' பத்திரிகையாளர்கள் யாரையும் உள்ளே விடமுடியாது. மீறி நுழைபவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று காவல்துறை உயரதிகாரிகள் மிரட்டினர்.
இந்தநிலையில், காவலர்களின் கண்காணிப்புகளைத் தாண்டி செவிலியர்கள் போராடும் இடத்துக்கு நாம் சென்றோம். அங்கே செவிலியர்களைச் சுற்றி பெண் காவலர்கள் பல நூறு பேர் நின்றிருந்தனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்த சுமார் 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மற்ற செவிலியர்களிடம் போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஆனால், இந்தப் பேச்சுவார்த்தையின்போது அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு எழுந்தது. இதையடுத்து பெரும்பான்மையான செவிலியர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர்.
செவிலியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த செவிலியர்களிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, "எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். நாங்களும் எவ்வளவு முறைதான் அரசுக்கு கோரிக்கை வைக்கிறது? அரசு எங்கள் கோரிக்கைகளை காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. அதனால்தான் இந்தப் போராட்டம். எங்கள் போராட்டத்தை வாபஸ் வாங்கச் செய்வதற்காக அமைச்சர் விஜயபாஸ்கர் எங்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். 20-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். அங்கே, 'போராட்டத்தை வாபஸ் வாங்குங்கள். இல்லையென்றால் வேலை பறிபோய்விடும்' என்று மிரட்டியுள்ளனர். இதனால் அங்கு சென்ற செவிலியர்கள் மட்டும் போராட்டத்தை வாபஸ் வாங்குவதாகச் சொல்லியுள்ளார்கள். அதனால்தான் செவிலியர்களுக்குள் கருத்து வேறுபாடு எழுந்துள்ளது" என்றனர். தொடர்ந்து பேசியவர்கள், "எங்கள் போராட்டத்தைக் கலைக்க டி.எம்.எஸ். நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறது. இங்குள்ள கழிவறைகளை திங்கள் கிழமை மாலையிலிருந்தே பூட்டி வைத்துவிட்டனர். அதனால் அனைவரும் மிகுந்த சிரமப்படுகிறார்கள். வெளியில் எழுந்து செல்லவோ அல்லது வெளியே சென்ற செவிலியர்கள் உள்ளே வரவோ காவலர்கள் அனுமதி அளிக்கவில்லை. இதனை எதிர்த்து நாங்கள் குரல் எழுப்பியதும், இன்று (28-11-2017) மாலை 5 மணிக்கு ஒரே ஒரு கழிப்பறையையை மட்டும் திறந்து வைத்துள்ளார்கள். இதனால், பெண்களும், அவர்களின் குழந்தைகளும் கழிவறை முன்பு நீண்ட வரிசையில், காத்துக்கிடக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கழிவறையில் தண்ணீரும் வரவில்லை.
செவிலியர்கள்
நான்கு சுவற்றுக்குள் அமைச்சர் நடத்திய பேச்சுவார்த்தையை நாங்கள் ஏற்பதாக இல்லை. அவர் இங்கு வந்து எங்கள் அனைவரின் முன்னிலையிலும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அதுவும் உடனடியாகப் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டத்தைக் கைவிடுவோம். இல்லை என்றால், எத்தனை நாட்களானாலும் எங்கள் போராட்டத்தை யாராலும் தடுக்க முடியாது. கழிவறைகளைப் பூட்டி வைப்பதாலும், டி.எம்.எஸ் வளாகத்தை விட்டு வெளியே செல்ல, உள்ளே வர அனுமதி மறுப்பதாலோ எங்கள் போராட்டத்தை  நிறுத்திவிடமுடியாது" என்று ஆவேசமாகினர்.
போராட்டக்காரர்களிடம் நாம் பேசிக்கொண்டிருப்பதைக் கவனித்த காவல்துறை உயரதிகாரி ஒருவர், ''பத்திரிகையாளருக்கு உள்ளே வர அனுமதியில்லையே... எப்படி உள்ளே வந்தீர்கள்? உடனடியாக வெளியேறுங்கள்... இல்லையெனில், உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று எச்சரித்தார்.
''செய்தியாளர்களை உள்ளே அனுமதிக்க மறுப்பது ஏன் சார்? இங்குள்ள அனைத்துக் கழிவறைகளையும் பூட்டி வைத்திருப்பது ஏன்?'' என்று நாம் அந்த அதிகாரியிடம் விளக்கம் கேட்க,  "அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. மேலிடம் என்ன சொல்கிறதோ அதைத்தான் நாங்கள் செய்கிறோம். கழிவறைகளைப் பூட்டி வைத்தது நாங்கள் அல்ல. அதைப்பற்றி நீங்கள் டி.எம்.எஸ் நிர்வாகத்திடம் கேளுங்கள்" என்று பதில் கொடுத்த அந்த அதிகாரி, நம்மை வலுக்கட்டாயமாக டி.எம்.எஸ். வளாகத்தை விட்டு வெளியே அனுப்பிவிட்டு, அங்கே காவலுக்கிருந்த மற்ற காவலர்களையும் கடிந்துகொண்டார்.

கருத்துகள் இல்லை: