ஞாயிறு, 26 நவம்பர், 2017

என் காதலன் வெட்டப்பட்டபோது .. வெடித்த கவுசல்யா சங்கர்.. தீண்டாமை ஒழிப்பு கருத்தரங்கம்

நக்கீரன் :சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். இராதா அரங்கத்தில் நேற்று (25.11.2017) இரவு ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. எழுத்தாளர் பழ. கருப்பையா, "தமிழில் வழிபாட்டு உரிமை" எனும் தலைப்பில் அவர் கூறியதாவது: வாழ் நாளிலேயே தனது கொள்கைகளை வென்றெடுத்தவர் தந்தை பெரியார். பெரியாரின் தேவை இன்னும் இருக்கிறது. கடவுள் இல்லை என்பது தந்தை பெரியார் அவர்களின் இறுதி இலக்கு - அதுவரை அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை, தமிழில் வழிபாட்டு உரிமை என்பது அவரின் இடைக்கால இலக்கு என்று பளிச்சென்று பழ. கருப்பையா சொன்னபோது, அதற்கு மன்றத்தில் பெரும் ஆரவாரக் கை தட்டல் கிடைத்தது. பக்தி இயக்கம் என்பது ஜாதி எதிர்ப்பை உள்ளடக்கமாகக் கொண்டது என்றாலும் பவுத்த, சமண எதிர்ப்பைக் கொள்கையாகக் கொண்டது. பார்ப்பனர்களையும் அதன் உள்ளுக்குள் கொண்டு வந்தது. அதன் விளைவு கோயில்கள் எல்லாம் பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடாரமாக ஆனதுதான் மிச்சம்.
அந்தப் பார்ப்பனர்களை அதிலிருந்து வெளியேற்ற அடுத்த பணியைத்தான் தந்தை பெரியார் செய்தார். அந்தப் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் என்ற நிலை ஏற்பட்டால் தந்தை பெரியாரின் அந்த நோக்கமும் நிறைவேறிடும் என்றார். கவுசல்யா சங்கர் "ஜாதி வெறியும், ஆணவப் படுகொலையும்" என்ற தலைப்பில் அவர் கூறியதாவது: ஜாதி ஆணவம் என்ற பெயரில் படுகொலை செய்யப்பட்ட சங்கரின் வாழ்விணையர் கவுசல்யா சங்கரின் உரை அவர் தெரிவித்த முறை நெஞ்சை உருக்குவதாக இருந்தது.


 தன்னால் காதலிக்கப்பட்ட சங்கர் தாழ்த்தப்பட்டவர் என்ற ஒரே காரணத்தால், தன் கண் எதிரே தனது பெற்றோர்களின் தூண்டுதலால் படுகொலை செய்யப்பட்ட அந்தக் கொடுமையைக் குமுறும் நெஞ்சோடு அக்னிச் சொற்களைக் கொட்டினார். தானும் எவ்வாறெல்லாம் சித்திரவதை செய்யப்பட்டார் என்பதை எல்லாம் விவரித்தார்.

நான் இன்னும் உயிர் வாழ்வதற்கே காரணம் இந்த ஜாதி ஆணவப் படுகொலையை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே - அதற்குத் தந்தை பெரியார் என் தந்தையாக, தலைவராக, தோழராக, காதலராக இருக்கிறார் என்று நெஞ்சின் உணர்வுகளைக் கொட்டினார்.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, கற்பு என்ற அயோக்கியத்தனங்கள் பெண்கள்மீது திணிக்கப்பட்ட ஆண் ஆதிக்க கயமையையும் கடுமையாகச் சாடினார் வீராங்கனை கவுசல்யா. சங்கர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றாலும், சங்கர் நினைவோடு, காதலோடுதான் நான் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்றது முத்தாய்ப்பான ஒன்றாகும். ஜாதி ஒழிப்புதான் என் காதலன் வெட்டப்பட்டபோது பீறிட்ட ரத்தத்திற்கு, நான் காட்டக் கூடிய கைம் மாறாகவும் இருக்க முடியும் என்னும் கொதி கலனாய் வெடித்தார்.

 ’’கவுதமப் புத்தர் அரசை விட்டு வெளிவந்தார் என்றால், தந்தை பெரியாரோ அரசியலை விட்டு வெளியே வந்தார். ஆனாலும் இருவரும் சமூகப் பொருளாதார மாற்றத்திற்கான சிந்தனைகளை மக்கள் மத்தியில் வாரி இறைத்தவர்களே என்று தொடக்கத்திலேயே அழகாக விண்டுரைத்தார். புத்தர் ஒன்றும் போதி மரத்தில் ஞானம் பெறவில்லை. மக்களைச் சந்தித்துச் சந்தித்து நாடெங்கும் அலைந்து திரிந்து திரிந்து பெற்ற அனுபவமே அவர் பெற்ற ஞானமாகும். தந்தை பெரியாரும் அதே நிலையினரே.

19ஆம் நூற்றாண்டினை மூன்று கட்டங்களாகப் பிரித்துக் கொள்ளலாம். ஒன்று வள்ளலார் அருளிய மனிதநேயமே அவருக்கு அடிப்படை. இரண்டாவது மறைமலை அடிகளாரின் கருத்துகள் அவர் சமஸ்கிருதத்தை எதிர்த்தார். மூன்றாவது நீதிக்கட்சியின் பார்ப்பனர் அல்லாதார் கல்வி, உத்தியோகம், பதவிகளில் உரிமை என்பதுதான் அதன் நிலைப்பாடு. நீதிக் கட்சியின் நீட்சிதான் திராவிட இயக்கம் என்று சொல்லக் கூடாது என்பதுதான் என் கருத்து. நீதிக்கட்சியிலிருந்து மிகப் பெரிய பாய்ச்சல்தான் திராவிட இயக்கம்.

நீதிக்கட்சி பார்ப்பனர் அல்லாதாரிடம் இருந்த ஜாதி நிலையைக் கண்டு கொள்ளவில்லை. அவையெல்லாம் அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். பார்ப்பனர்களிடமிருந்து கல்வியையும், உத்தியோகத்தையும், பதவியையும் பெற்றுக் கொண்டால் மட்டும் போதும் என்கிற எல்லையோடு அவர்கள் நின்றனர். ஆனால் தந்தை பெரியார் அவர்களோ பார்ப்பனர்அல்லாதாரில் இருந்த ஜாதிகளின் பாகுபாடுகள் ஒழிக்கப்பட்டு அவர்கள் ஓரினம் என்ற கோட்பாட்டை நிலை நிறுத்தினார். சுயமரியாதை என்னும் தத்துவத்தை, அடிப்படையை தமிழர்கள் மத்தியில் ஊன்றினார்.

பார்ப்பனீயத்தால் நம்மினத்திற்கு ஏற்பட்ட தாழ்நிலையை, கீழ் நிலையை ஒழித்திட சுயமரியாதைத் தத்துவத்தைப் போதித்த தந்தை பெரியார், அத்தோடு நில்லாமல் நம்மிடையே உள்ள பாகுபாடு பேதங்கள், உயர் ஜாதி, தாழ்ஜாதி என்ற நிலை கூடாது என்பதை நிலை நிறுத்த பகுத்தறிவுச் சிந்தனையைப் புகுத்தினார்’’ என்று மிக நேர்த்தியாக தந்தை பெரியாரியலைப் படம் பிடித்துக் காட்டினார். "சமூகவியலும் தந்தை பெரியாரும்" என்று அவருக்கு கொடுக்கப்பட்ட தலைப்பின் கீழ் மேலும் பல எடுத்துக் காட்டுகளை எடுத்துக் கூறி விவரித்தார் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் துணைத் தலைவருமான முனைவர் பெ. ஜெகதீசன்.

 ’’இதே தேதியில் இன்றைக்கு 67 ஆண்டுகளுக்கு முன் அண்ணல் அம்பேத்கர் நாடாளுமன்றத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிறைவை முடித்து வைத்து ஆற்றிய உரை ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்றாகும். தமிழில் வெளிவந்த அம்பேத்கர் அவர்களின் 30ஆம் தொகுதியில் அந்தவுரை வெளிவந்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து இருக்கிறது. ஒருவருக்கு ஒரு ஒட்டு என்ற உரிமை கிடைத்திருக்கிறது என்றாலும் ஜனாநயகம் இல்லாத ஒரு முரண்பாட்டு வாழ்க்கையில் நாம் நுழைகிறோம் என்று சொன்னார் - இன்று வரை அதே நிலைதான்.

2000 ஆண்டுகளாகவே மனுதர்மம் இங்கு கோலோச்சுகிறது. இடையில் முஸ்லிம்கள் வந்தனர், வெள்ளைக்காரர்கள் வந்தனர் என்றாலும் மனுதர்மம் ஒழிந்து போய்விடவில்லை. இன்னும் பிறவிப் பேதம் ஒழிந்து போய்விடவில்லை இன்னும் ஜாதி ஆணவக் கொலைகள் - 18 நிமிடத்திற்கு ஒரு தலித்துக்கு வன்கொடுமை இழைக்கப்படுகிறது. சட்டம் கூறும் சகோதரத்துவம் எங்கே இருக்கிறது? அதனால்தான் அண்ணல் அம்பேத்கரும், தந்தை பெரியாரும் இந்து மதத்தின்மீது நெருப்பு மழை பெய்விக்கப்பட வேண்டும் என்றனர்.

தந்தை பெரியார் மில்லியன் டாலர் கேள்வி ஒன்றை முன் வைத்தார். வைக்கம் தீண்டாமை ஒழிப்புப் போராட்டத்தை முன்னெடுத்தபோது அவர் எழுப்பிய வினாதான் அது. அய்ந்தறிவு உள்ள நாயும், பன்றியும் அந்தத் தெருக்களில் செல்லலாம். ஆனால் ஆறறிவுள்ள ஒரு தாழ்த்தப்பட்ட தோழர் ஏன் நடந்து செல்லக் கூடாது என்றார். கோயில் கருவறைக்குள் பல்லி செல்லலாம்; கரப்பான் பூச்சி செல்லலாம் -மனிதன் செல்லக் கூடாதா என்று கேட்டாரே!

நம் பயணம் பிரச்சாரம் தொடர்ந்தே தீர வேண்டும் - மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டாக வேண்டும்’’ என்ற அரிய உரையை நிகழ்த்தினார் 'தலித் முரசு' ஆசிரியர் புனித பாண்டியன்.

கருத்தரங்கத் தலைவர் நீதிபதி து. அரிபரந்தாமன்: 1925ஆம் ஆண்டில் தெருக்களில் தலித்துகள் நுழைவுப் போராட்டம், 1939இல் கோயிலுக்குள் நுழையும் போராட்டம், இப்பொழுது கோயில் கருவறைக்குள் நுழையும் போராட்டம் இந்த வளர்ச்சியைத் தடுக்க யாருக்கும் உரிமை இல்லை. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், புதிய அரசமைப்புச் சட்டம் செயல்பாட்டுக்கு வருவதற்குமுன் சொன்ன தீர்ப்புகளை எடுத்துக்காட்டி உச்சநீதிமன்றம் தீர்ப்புக் கூறியது யோக்கியமானதல்ல என்ற கருத்தையும் நீதிபதி அரிபரந்தாமன் அவர்கள் குறிப்பாக எடுத்துக்காட்டினார்

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளிரணி செயலாளர் ச. இன்பக்கனி நன்றி கூறினார். திராவிடர் கழக சட்டத்துறை அமைப்பாளர் ஆ. வீரமர்த்தினி இணைப்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் தருமபுரி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மாதன், தந்தை பெரியார் பிறந்த நாள் விடுதலை மலரை அளித்தார்.

கருத்துகள் இல்லை: