திங்கள், 27 நவம்பர், 2017

ஆர் கே நகரில் பாமக போட்டியிடாது எவருக்கும் ஆதரவும் இல்லை!

போட்டியும் இல்லை; ஆதரவும் இல்லை!மின்னம்பலம் :ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாமக போட்டியிடாது என்று அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (நவம்பர் 27) நடைபெற்றது. இதில், இடைத்தேர்தலில் பாமக போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது. பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், “ ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் என்பது எங்களைப் பொறுத்தவரை ’எடை’ தேர்தல். கடந்த தேர்தல்களில் எடைக்கு எடை பணம் கொடுத்தார்கள். கடந்த முறை, பணம் கொடுத்ததாக தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்தி வைத்தது. ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, தற்போது நடைபெறவுள்ள தேர்தலிலும் ஓட்டுக்கு பணம் தருவது அரங்கேறும். கடந்த இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடாத நிலையில், தற்போதைய தேர்தலிலும் போட்டியிட வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், “ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் நேர்மையாக நடக்கும் என்ற நம்பிக்கை இல்லை” என்று குறிப்பிட்ட அவர், இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: