வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் மோசடி!

தமிழகத்தில் நடைபெற்றுவரும் மருத்துவ கலந்தாய்வில் கேரள மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்தில் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றுவருகிறது..
இதற்கான தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம்(ஆகஸ்ட்-23) வெளியிடப்பட்டது. அதன்படி, முதல் நாளான நேற்று(ஆகஸ்ட்-24) சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது. சென்னை ஒமந்தூர் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெற்ற கலந்தாய்வில், 86 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் இன்று(ஆகஸ்ட்-25) காலை 10 மணி முதல் பொது பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 1,209 வரையிலான இடங்களைப் பெற்றவர்கள் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது அசல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். பொறியியல் படிப்பில் சேர்ந்த மாணவர்கள் கல்லூரியின் அத்தாட்சி கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும். இந்நிலையில் மருத்துவ கலந்தாய்வில் 9 மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழ்களை சமர்ப்பித்து பங்கேற்றுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இவர்கள் அனைவரும் கேரளாவை சேர்ந்தவர்கள் என்பதும், கேரளாவில் நடைபெறும் கலந்தாய்வில் இடம் கிடைப்பது கடினம் என்பதால் மாணவர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டதை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து, மத்திய குற்றபிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்னம்ப்லாம்

கருத்துகள் இல்லை: