வியாழன், 24 ஆகஸ்ட், 2017

சிறையில் சசிகலாவும் தினகரனும்... அடுத்த கட்ட அதிரடி திட்டம் ,,

பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்த தினகரன், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இணைப்பு பற்றி சொன்னார். அதுபற்றி சசிகலாவின் முதல் ரியாக்ஷன் ஒரு டெக்னிக்கலான கேள்வியாக இருந்தது என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம். அன்று ஓ.பி.எஸ்., பொன்னையன், பி.ஹெச்.பாண்டியன், கே.பி.முனுசாமி, வ.நீலகண்டன், முத்துச்செல்வி உட்பட, 20 பேரை அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கி, நான் உத்தரவு பிறப்பித்தேன்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதற்காக அவர்கள் எந்த நீதிமன்றத்திலும் வழக்கு போடவில்லை.
இந்த நிலைமையில் அவர்கள் அடிப்படை உறுப்பினர்கள் இல்லை. அவர்களை மறுபடியும் கட்சி உறுப்பினர்களாக, பொதுச்செயலாளர் என்கிற அடிப்படையில் நான்தான் சேர்க்க முடியும். அப்படியே அவர்கள் சேர்க்கப்பட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களுக்கு எந்த பொறுப்புக்கும் வர முடியாது. "டி.டி.வி. தினகரனுக்கு கட்சியில் சேர்ந்தவுடன் பதவி கொடுத்தார்கள். அவர் வகிக்கும் துணைப் பொதுச்செயலாளர் பதவி செல்லாது' என தீர்மானம் போட்ட எடப்பாடி, என்னை கேட்காமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை எப்படி சேர்க்கிறார்?' என ஆவேசமாக சசிகலா பேசினார்'' என்கிறது சிறைத்துறை வட்டாரம்.


""இரு அணிகளின் இணைப்போடு உங்களை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கும் ஒரு தீர்மானத்தையும் கொண்டு வர திட்டமிட்டிருக்கிறார்கள்' என தினகரன் சொல்ல, கோபத்தின் உச்சிக்கே சென்ற சசிகலா, "என்னை நீக்குகிறார்களா? நீக்கட்டும். அப்படி ஒரு தீர்மானத்தை அவர்கள் நிறைவேற்றினால் அதற்கு மேல் நாம் பொறுமை காட்டத் தேவையில்லை. நான் யாருன்னு காட்டுறேன். நமக்கு ஆதரவு தெரிவிக்கும் எம்.எல்.ஏ.க்களை திரட்டுங்கள். எடப்பாடி எப்படி ஆட்சி செய்கிறார் என்பதை பார்த்துவிடுவோம்' என சத்தம் போட... அவரை தினகரனுடன் சசிகலாவை பார்க்கச் சென்ற தினகரனின் மனைவி அனுராதாதான் சமாதானப்படுத்தியிருக்கிறார்.தொடர்ந்து கோபத்துடன் பேசிய சசிகலா, "போயஸ் கார்டனை அரசுடைமை ஆக்குவதாக அறிவித்ததும் நம்மை கேட்காமல் எடுத்த முடிவு. அங்கிருக்கும் ஜெ. மற்றும் எனது உடைமைகளை எப்படி வெளியே எடுப்பார்கள்?' என எகிறியிருக்கிறார். "ஓ.பி.எஸ்.ஸுக்கு மட்டும்தான் இரட்டை இலை சின்னத்தை முடக்க தெரியுமா? அந்த வித்தை எனக்குத் தெரியாதா? எந்தச் சூழ்நிலையிலும் மத்தியில் ஆளும் பா.ஜ.க.வை பகைத்துக் கொள்ள வேண்டாம். ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் நம்மை அடக்க பா.ஜ.க.வைத்தான் பயன்படுத்துவார்கள். அதற்கு இடம் கொடுக்காமல் நடந்து கொள்ளுங்கள்' என கூறியுள்ளார். 

ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இணைந்தால் என்ன செய்வது என சட்டரீதியான ஆலோசனைகளை வழக்கறிஞர்களிடம் பேசினார். சசிகலாவின் சந்தேகங்களுக்கு தங்களுக்குத் தெரிந்த விளக்கங்களை அளித்த வழக்கறிஞர்களின் பதிலில் திருப்தி அடையாமல் மேலும் பல விளக்கங்களை பெற்றுத் தருமாறு வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டார்'' என்கிறது பெங்களூரு சிறை வட்டாரம். 

சசிகலாவை சந்தித்தபிறகு திவாகரனுடன் நெடிய ஆலோசனையில் தினகரன் ஈடுபட்டார். அதற்குப் பிறகு பல்வேறு ரகசிய போன்களில் தங்களது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தினகரன் தொடர்பு கொண்டார். அதேபோல் திவாகரனும் களத்தில் குதித்தார். மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தின் போது அமைச்சர் உதயகுமாரால் கடத்திச் செல்லப்பட்டதாக தினகரனால் குற்றம் சாட்டப்பட்ட திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. ஏ.கே.போஸ் திவாகரனுக்கு ஆதரவு தெரிவித்தார். அமைச்சர்களாக இருக்கும் ஓ.எஸ்.மணியன், திருவாரூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை நடத்திய அமைச்சர் காமராஜ் ஆகியோரிடம் "சசிகலாவை அ.தி.மு.க.விலிருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்ற எடப்பாடி முடிவு செய்திருப்பது நியாயமா?' என திவாகரன் கேட்ட கேள்விக்கு சசிகலாவுக்கு ஆதரவாக பதிலளித்தார்கள் என்கிறது மன்னார்குடி வட்டாரம். 

இப்படி எம்.எல்.ஏ.க்கள், மந்திரிகள் என அனைத்து தரப்பிலும் தொடர்பு கொண்டு தொலைபேசியிலும் நேரடியாகவும் ஆதரவு திரட்ட ஒரு பெரிய டீமே இறக்கப்பட்டுள்ளது. அவர்கள் திரட்டிய தகவல்களை வைத்து தினகரன் ஒரு கருத்துக் கணிப்பை நடத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளார். 

குறிப்பாக, ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மற்றும் அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகள் மத்தியில் ஓ.பி.எஸ். -இ.பி.எஸ். அணி இணைப்பு பற்றி கேட்டு வருகிறார் தினகரன். அடுத்த கட்டமாக, இணைப்பு நடந்தால் என்ன செய்வது என சசிகலா சொன்ன கட்டளைப்படி சட்டரீதியான ஆலோசனைகளிலும் தினகரன் இறங்கியுள்ளார். முதல்கட்டமாக, தன்னை நீக்கியது சட்டப்படி செல்லாது என எடப்பாடி பழனிச்சாமிக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளார் தினகரன். 

""சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து லட்சக்கணக்கான பிரமாணப் பத்திரங்களை திரட்டி தேர்தல் கமிஷனிலும் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடர தினகரனின் வீட்டில் வழக்கறிஞர்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஓ.பி.எஸ். அணி இ.பி.எஸ்.ஸுடன் இணைவதை ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள்தான் கடுமையாக எதிர்க்கிறார்கள். அதையும் மீறி ஓ.பி., இ.பி.எஸ்.ஸுடன் இணைவதற்கு காரணம், துபாயில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ்.ஸுக்கு கொடுத்த 500 கோடி ரூபாய்தான்'' என்கிறார் தினகரன் ஆதரவாளரான வெற்றிவேல் எம்.எல்.ஏ.

 ""இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இணைப்புக்கான தேதி இன்னமும் முடிவாகவில்லை'' என்கிறார் ஓ.பி.எஸ். அணி நிர்வாகியான மைத்ரேயன். "மேலும் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும் செயல்பாடுகளே தொடர்கின்றன' என்கிறார்கள் உள்விவகாரங்களை அறிந்த அ.தி.மு.க. தலைவர்கள்.

-தாமோதரன் பிரகாஷ் விகடன் 

கருத்துகள் இல்லை: