புதன், 23 ஆகஸ்ட், 2017

தினகரனுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்: திவாகரன் பேட்டி

தினகரனுக்கு 37 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு எடப்பாடி பழனிசாமி அரசு பதவி விலக வேண்டும்: திவாகரன் பேட்டி தமிழக அரசு மைனாரிட்டி அரசாக மாறியதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி விலக வேண்டுமென சசிகலா சகோதரர் திவாகரன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்: டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கான ஆதரவை விலக்கி கொள்கிறோம்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இழந்துடோம் என தமிழக கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதனால் பழனிசாமி முதல்வர் பதவியில் நீடிக்க தார்மீக உரிமையை இழந்துவிட்டார்.
இந்நேரம் அவர் பதவி விலகியிருக்க வேண்டும். கவர்னரை சந்தித்த 19 எம்எல்ஏக்களை தவிர எங்கள் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் டி.டி.வி.தினகரன் வீட்டுக்கு சென்று தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். கூடுதலாக 8 எம்எல்ஏக்கள், என்னிடம் ஆதரவு தெரிவித்துள்ள 7 எம்எல்ஏக்களையும் சேர்த்து எங்களுக்கு ஆதரவாக 37 எம்எல்ஏக்கள் உள்ளனர். இது மேலும் அதிகரிக்கும். எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் இந்த அரசுக்கு மெஜாரிட்டி இல்லையென கூறியுள்ளார்.

எனவே அரசியல் சட்டத்தில் வரையறுத்துள்ள காலக்கெடுவுக்குள் பெரும்பான்மை உள்ளதா என சட்டமன்றத்தை கூட்டி நிரூபிக்க கவர்னர் உத்தரவிடுவார் என நம்புகிறோம். தற்போதைய பிரச்னைக்கு தீர்வு ஏற்பட வேண்டுமானால் சட்டமன்ற சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும். அந்த அமைச்சரவையில் ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமி இடம் பெறக்கூடாது. தற்போதைய அமைச்சரவையில் பலர் ஊழல் பெருச்சாளிகளாக உள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்து இந்த ஊழல் அமைச்சரவையை மாற்றி புதிய அமைச்சரவையை உருவாக்கினால்தான் எதிர்கால சந்ததியினருக்கு நல்லது என கூறினார்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை: