சனி, 26 ஆகஸ்ட், 2017

வைகோவிடம் விஜயகாந்த்! கூட்டணி யாரோடு?

மின்னம்பலம் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளை ஒட்டி நேற்று ஆகஸ்டு 25ஆம் தேதி அவரை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை உள்ளிட்ட பலர் நேரில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த மூவருமே ஏற்கெனவே தேமுதிக-வோடு கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தவர்கள்தான். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக-வும், மதிமுக-வும் இடம்பெற்றிருந்தன. கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து விஜயகாந்த்தை முதல்வர் வேட்பாளராக நிறுத்தின விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்டுகள் ஆகிய கட்சிகள்.

இந்த நிலையில் இந்த வருட விஜயகாந்த் பிறந்த நாளைக்கு அவர்கள் விஜயகாந்த்தைச் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
விஜயகாந்த்தைச் சந்தித்த திருமாவளவன், ‘தற்போதைய சூழலில் தமிழகத்தில் மட்டுமன்றி இந்திய அளவிலும் பாஜக-வை எதிர்த்து வலுவான அணி அமைய வேண்டும்’ என்று விஜயகாந்திடம் கருத்துப் பகிர்ந்திருக்கிறார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விஜயகாந்த்தைச் சந்தித்தபோது... ரோஜா மாலை அணிவித்து, பொன்னாடைப் போர்த்தி, “தமிழ்நாட்டு அரசியலுக்கும், கலை உலகுக்கும் உங்கள் பணி தொடர வேண்டும்’ என்று வாழ்த்தினார். மல்லை சத்யா உள்ளிட்ட மதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
நேற்று விநாயகர் சதுர்த்தி என்பதால் வைகோவுக்குச் சுண்டல், கொழுக்கட்டை, சர்க்கரைப் பொங்கல் கொடுத்தார் பிரேமலதா. அப்போது தமிழக அரசியல்பற்றி விஜயகாந்த், பிரேமலதா இருவரிடமும் சில நிமிடங்கள் பேசியிருக்கிறார் வைகோ.
அப்போது, ‘திமுக-வும் அதிமுக-வும் நாட்டில் என்ன நன்மை செய்திருக்கிறது என்பதை இப்போது மக்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். விரைவில் 2ஜி தீர்ப்பு வரும். அப்போ நிலைமை மாறும். இனிமேல் கூட்டணி என்ற ஐடியாவே எனக்கு இல்லை. தனித்துப் போட்டிதான். மக்களோடும் தெய்வத்தோடும்தான் கூட்டணி’ என்று சிரித்துக்கொண்டே சொன்னாராம் விஜயகாந்த்

கருத்துகள் இல்லை: