வியாழன், 24 ஆகஸ்ட், 2017

தமிழகத்தில் முழங்கும் "நீட் " முரசம் இதர மாநிலங்களிலும் எதிரொலிக்கும்

எஸ்.எஸ்.சிவசங்கர். :போர் முடிந்திருக்கிறது. தோற்றிருக்கிறோம். களம் இருக்கிறது. ஆனால் இனி தனி சேனையாக நின்று போராட முடியாது.
நீட் தேர்வில் இத்தனை நாட்கள் போட்ட வேடத்தை நண்பகல் கலைத்து விட்டது நடுவணரசு. தமிழகத்திற்கு மாத்திரம் விதிவிலக்கு அளிப்பது இயலாது என தன் நிலைப்பாட்டை தடாலடியாக மாற்றிக் கொண்டது மோடி அரசு.
இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில் தான் மருத்துவ மாணவர் சேர்க்கை.
எல்லோருக்கும் ஒரே கேள்வி, நீட் தேர்வில் தமிழகத்திற்கு மாத்திரம் என்ன விதிவிலக்கு. உச்ச நீதிமன்றம், நடுவணரசு, உயர்நீதிமன்றம் தொடங்கி நம்மூர் அறிவாளிகள் வரை.
தமிழகம் மாத்திரம் தான் விதிவிலக்கு கேட்கிறது. காரணம், தமிழன் மட்டும் தான் என்றைக்கும் உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடுகிறவன். கொஞ்சம் சொரணையோடு இருக்கிறான்.
ஒரு கட்டபொம்மன் தான், வரியில் பங்கு தர மாட்டேன் என பிரிட்டிஷ் அரசிடம் போராடினான், மற்றோர் அடிபணிந்து நிற்கையிலே. அது தான் பின்னர் விடுதலைப் போர் .
தமிழன் தான், மொழி உரிமையை விட்டு கொடுக்க மாட்டேன் என போராடியவன். இந்தி திணிப்பை, உயிரைக் கொடுத்து எதிர்த்தான். எண்பது ஆண்டுகள் கழித்து கேரளா, கர்நாடகா, வங்காளம், ஒடிசா என வரிசைக் கட்டி வருகிறார்கள் இந்தியை எதிர்த்து இப்போது.
மெட்ராஸை கலைஞர் 'சென்னை' ஆக்கிய பிறகு தான், கல்கத்தா 'கொல்கத்தா' ஆனது. பேங்களூர், பெங்களூரூ ஆனது. ஒரிசா 'ஒடிசா' ஆனது. ஆங்கிலமயப் படுத்தப்பட்ட ஊர் பெயர்கள் சொந்த மொழியில் மாறவே, தமிழகம் தான் வழி காட்டியது.

நீட் தேர்வின் கொடும் விளைவுகளை இன்னும் உணரவில்லை மற்ற மாநிலங்கள். குறிப்பாக தென்னிந்திய மாநிலங்கள். தமிழகம் தான் உணர்த்த வேண்டும்.
நீட் தேர்வால், முதலில் மாநில உரிமை பறி போகிறது. கல்வி மாநில அரசின் பட்டியலில் தான் இருந்தது. சுகாதாரம் மாநில அரசின் பட்டியலில் தான் இருந்தது.
இவற்றை எல்லாம் ஒட்டு மொத்தமாக தன் பிடியில கொண்டு வர நினைக்கிறது மோடி அரசு. மாநில அரசுகளை சவலைப் பிள்ளையாக வைத்துக் கொண்டு ஏகாதிபத்தியம் செய்யப் பார்க்கிறது மத்திய பா.ஜ.க அரசு.
மாநில அரசுகள் காலம்காலமாக சிரமப்பட்டு கட்டமைத்தவை மருத்துவக் கல்லூரிகள். அதன் மூலம் கிடைக்கிற மருத்துவப் படிப்பு இடங்களை கொள்ளை அடித்துப் போகும் திட்டம் இனி படிப்படியாக செயல்படுத்தப்படும், நீட் மூலம்.
இந்த ஆண்டு மருத்துவ உயர் கல்வி, உயர் தனிசிறப்பு மருத்துவக் கல்வி இடங்களில் கொள்ளை துவங்கி விட்டது. இது எதிர்காலத்தில் இளநிலை மருத்துவக் கல்வியிலும் அமல்படுத்தப்படும்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் மூவாயிரத்தை நெருங்கும். தனியார் கல்லூரிகளை சேர்த்தால் அய்யாயிரத்தை தாண்டும்.
தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, மகாராட்டிரா மாநிலங்களில் இருக்கும் மருத்துவக் கல்வி இடங்கள் ஒட்டுமொத்த இந்தியாவின் எண்ணிக்கையில் பாதியைத் தாண்டும்.
இந்த இடங்களை மொத்த இந்தியாவிற்கும் பொங்கல் வைக்கத் தான் நீட் தேர்வு. தன் மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை நிறுவாமல் பின் தங்கிக் கிடக்கும் மாநிலங்களுக்கு இந்த இடம் அள்ளித் தரப்படும். நம் அரிசி, அவர்கள் உமியோடு கலக்கப்பட்டு ஊதி, ஊதி பங்கு பிரிக்கப்படும்.
இந்த உரிமைப் பறி போகக் கூடாது என்று தான் கூச்சலிடுகிறோம்.
கிராமத்து மாணவர்களுக்கு வாய்ப்பு போகிறது, செலவு செய்து நீட் பயிற்சி படிக்க இயலா ஏழை மாணவர்களுக்கு வாய்ப்பு பறி போகிறது, கிராமப்புற ஏழைக்களுக்கான மருத்துவ வசதி பறி போகும், கார்ப்பரேட்கள் கைக்கு மருத்துவத்துறை கை மாறும். இதற்காகவெல்லாம் தான் கதறுகிறோம்.
கிராமப்புறத்தில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு உயர்கல்வியில் இட ஒதுக்கீடு என்பதை காலி செய்தாகி விட்டது. சமூகநீதியான சாதிவாரி இட ஒதுக்கீடும் மெல்ல, மெல்ல பறிபோகும். அதற்கு பெயர் தகுதி என்று சொல்லப்படும்.
நீட் தேர்வு திணிப்பைக் கொண்டு ஒட்டு மொத்தமாக சமூகநீதியின் கழுத்து நெறிக்கப்படும்.
நீட் தேர்வின் மீதான எதிர்காலப் போருக்கு பெரும் படை திரட்டப்பட வேண்டும்.
நீட் தேர்விற்கு ஆதரவாக சர்வ சக்தியும் படைத்த மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும், ஆதிக்க சக்திகளும் அணிவகுத்து நிற்கின்றன.
அதை எதிர்கொள்ள வேண்டிய பெரும் பணி நமக்கிருக்கிறது. நமக்கென்றால், அரசியல் தாண்டி தமிழர்கள் அனைவருக்கும் இருக்கிறது. முதலில் கற்றவர்களை திரட்டுவோம்.
மருத்துவர்களுக்கான சமூக நீதிப் பேரவையின் தலைவர் மருத்துவர் இரவீந்திரநாத், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு போன்றோரை கொண்டு இந்தப் படை அமைய வேண்டும். உயர் அதிகாரிகள், மருத்துவர்கள், மற்றோரும் கைகோர்க்க வேண்டும்.
நீட் தேர்வால் மாநிலங்களுக்கு ஏற்படுகிற இழப்பை கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா, கேரளா மாநில அரசியல்வாதிகளுக்கு, கல்வியாளர்கள், உணர்வாளர்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
நீட் தேர்வுக்காக திரட்டுகிற படை தானாக மாநில உரிமைகளையும் மீட்டெடுக்கும்.
# உரிமைக்குரல் ஒலிக்கட்டும், நீட்டை ஒழிக்கும் வரை !
- எஸ்.எஸ்.சிவசங்கர்.

கருத்துகள் இல்லை: