திங்கள், 21 ஆகஸ்ட், 2017

தினகரன் அணியில் 17 எம் எல் ஏக்கள்

சென்னை ஜெயலலிதா இருந்தால் அமைச்சர்கள் இப்படி செய்வார்களா என்று அதிமுக அம்மா அணியின் துணை பொதுச் செயலாளரான சசிகலாவின் சகோதரரர் திவாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
diwagaranபலகட்ட காத்திருப்புகளுக்குப் பிறகு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக இரு அணிகளின் இணைப்பு நிகழ்வானது, ராயப்பேட்டையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இருவரும் பேசிய பிறகு கட்சி பதவிகள் தொடர்பாகவும், தமிழக அமைச்சரவையிலும் சில மாற்றங்கள் அறிவிக்கப்பட்டன. அதன்படி தமிழகத்தின் துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளார்.
அதே நேரத்தில் சசிகலாவை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார். இந்நிலையில் சசிகலாவின் சகோதரரான திவாகரன் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி விபரம் வருமாறு:
அதிமுகவில் இரு அணிகளின் இணைப்பானது எந்த வித சேதாரமும் இல்லாமல் நடைபெற வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் தங்களை மட்டும் காப்பாற்றிக் கொள்ளும் விதமாக அமைச்சர்கள் இத்தகைய நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ளனர். வெறுமனே பதவியை காப்பாற்றிக் கொள்வதே இந்த இணைப்பின் நோக்கமாகும். இந்த இணைப்புக்கான நிபந்தனைகள் கட்சியின் அனைத்து எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஏற்புடையதுதானா? கட்சியின் அணைத்து நிர்வாகிகளும் இன்றைய இணைப்பு நிகழ்வில் கலந்து கொண்டார்களா?  என்னோடு தொடர்பு கொண்ட எம்.எல்.ஏக்கள்  சிலர் தங்களுக்கு இதில் முழு விருப்பம் இல்லை என்று தெரிவித்தனர்.
பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்குவதை பொறுத்த வரை பொதுக்குழுவினை கூட்டுவதற்கு  பொதுச் செயலாளருக்கு மட்டும்தான் அதிகாரம் உள்ளது.  மூத்த தலைவர்கள் என்று அவர்கள் யாரை சொல்லிக் கொள்கிறார்கள் என்று தெரியவில்லை.
டிடி வி தினகரனுக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். என்னிடம் 8 எம்.எல்.ஏக்கள் தொடர்பில் உள்ளனர். கட்சியில் நடப்பது என்ன என்று தொண்டர்களும் பொதுமக்களும் பார்த்துக் கொண்டுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தால் அமைச்சர்கள், நிர்வாகிகள் இப்படி செய்வார்களா?
ஜெயலலிதாவின் ஆன்மா தங்களை இணைத்ததாக அவர்கள் கூறுகின்றனர். அதனையே கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது. சசிகலாவினை ஒதுக்கி வைக்குமாறு ஜெயலலிதாவின் ஆன்மா ஒரு பொழுதும் கூறாது.
இந்த இணைப்பு கண்டிப்பாக சரியாக வராது. கட்சியினையும் ஆட்சியையும் சீரழிக்கும் ஒரு நிகழ்வாக இது மாறி விடும். முக்கியமாக இது தொண்டர்களுக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும். இதற்கு பிண்ணனியில் ஓ.பன்னீர்செல்வம், கே.பி.முனிசாமி மற்றும் மனோஜ் பாண்டியன் ஆகியோரே உள்ளனர்.
வரும் 27-ஆம் தேதி குருபெயர்ச்சி நடைபெற உள்ளது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்று பாருங்கள். வெறும் 8 எம்.எல்.ஏக்கள் உள்ள பன்னீர்செல்வத்தினை ஒரு அணி என்று நீங்கள் கூறினால், தினகரன் வசம் 24 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
இவர்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். விரைவில் தேர்தலைச் சந்தித்து மக்கள் முன்னால் செல்ல வேண்டும். அரசினைக் காப்பதே எங்கள் பிரதான நோக்கம். இந்த பிரச்சினை தொடரும். ஒரு நாளில் முடியப் போவதில்லை   
இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.  தினமணி

கருத்துகள் இல்லை: