வியாழன், 9 பிப்ரவரி, 2017

கருத்துக்கணிப்பில் புரட்டி அடிக்கும் பன்னீர் புயல்!

ஓ.பன்னீர்செல்வம் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும், காபந்து முதல்வராக இருக்கிறார். அவர் பதவி விலகல் குறித்து ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியிருந்தாலும், சசிகலா முதல்வராகப் பொறுப்பேற்கும்வரையில் பன்னீர்செல்வம் முதல்வராகச் செயல்படுவார். இந்நிலையில் நேற்று சசிகலா மற்றும் அவரது குடும்பத்துக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த பன்னீர், தேவைப்பட்டால் தனது ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவேன் என்று கூறியிருந்தார். மக்களும் பன்னீர்செல்வம் முதல்வராக நீடிக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளனர். அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.


பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடரலாமா என்பது குறித்த கருத்துக் கணிப்புகளிலும், அவருக்கு ஆதரவாகவே முடிவுகள் வந்துகொண்டிருக்கின்றன. முதல்வர் பன்னீர்செல்வத்தின் ட்விட்டர் பக்கத்தில் “நான் முதலமைச்சராக பதவியைத் தொடரலாமா? வேண்டாமா? என்ற கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் மாலை நிலவரப்படி சுமார் 1951 வாக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பெரும்பான்மையாக 99 சதவிகித வாக்குகள் பன்னீர் முதல்வராகத் தொடர வேண்டும் என்றே பதிவு செய்யப்பட்டுள்ளன. 1 சதவிகிதத்தினர் மட்டுமே பன்னீர் முதல்வராகத் தொடர வேண்டாம் என்று ட்விட்டரில் வாக்களித்துள்ளனர்.
இதேபோல, விகடன் இணையதளத்தில் ஓ.பன்னீர்செல்வமா? சசிகலாவா? மக்கள் யார் பக்கம்? என்ற தலைப்பில் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில்,
*முதல்வராக பன்னீர்செல்வத்தின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்ற கேள்விக்கு 76.5 சதவிகிதத்தினர் திருப்தியளிப்பதாக உள்ளது என்றும், 22 சதவிகிதத்தினர் பரவாயில்லை என்றும், 1.5 சதவிகிதத்தினர் எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர்.
* தன்னை அவமானப்படுத்தினார்கள் என்று பன்னீர் கூறுவது எவ்வாறானது? என்ற கேள்விக்கு, நியாயமான ஆதங்கம்தான் என்று 83.6 சதவிகிதத்தினரும், காலதாமதமாக தெரிவித்துள்ளார் என்று 15.8 சதவிகிதத்தினரும், 0.6 சதவிகிதத்தினர் இது கட்சிக்குள் குழப்பம் உண்டாக்கும் முயற்சி என்றும் தெரிவித்துள்ளனர்.
* மக்கள் விரும்பினால் ராஜினாமா கடிதத்தை திரும்பப் பெறுவேன் என்று பன்னீர் கூறுவது, வரவேற்கத்தக்கது என்று 87.8 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
* அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் என நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, 75.5 சதவிகிதத்தினர் பன்னீர்செல்வத்துக்கும், 21.4 சதவிகிதத்தினர் சசிகலாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் 2.1 சதவிகிதத்தினர் கட்சி இரண்டாக உடையும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
ட்விட்டரில் ’Trends Polls’ மேற்கொண்ட வாக்கெடுப்பில், பன்னீர்செல்வம் புதிய கட்சியைத் தொங்கலாமா? அல்லது அதிமுக-வை நிர்வகிக்கலாமா? என்ற கேள்விக்கு, 70 சதவிகிதத்தினர் அதிமுக-வை வழிநடத்த வேண்டும் என்றும், 30 சதவிகிதத்தினர் புதிய கட்சி தொடங்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: