வியாழன், 9 பிப்ரவரி, 2017

நாட்டுமாடுகளை பாதுகாப்போம் ! ஜல்லிகட்டு இளைஞர்கள் உறுதிமொழி !

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று வியாழக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது அதிகாரப்பூர்வ ஜல்லிக்கட்டு. ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 850 காளைகளும் 1607 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பாலமேட்டில் ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்பு மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள், நாட்டு மாட்டினங்களைப் பாதுகாப்போம், ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுகளைத் துன்புறுத்த மாட்டோம் என்று ஒரே குரலி ல் கூறி உறுதி மொழி ஏற்றனர்.
இதையடுத்து பாலமேடு விழா கமிட்டி சார்பாக 7 கோயில் காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன. கோயில் காளைகளை யாரும் பிடிக்கக் கூடாது என்பது மரபு.
ஜல்லிக்கட்டைத் தொடங்கி வைத்த மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், அரசின் விதிமுறைக்குட்பட்டு காளைகளை பிடிக்கும் சிறந்த மாடுபிடி வீரருக்கு அரசு சார்பில் நற்சான்று வழங்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும், ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனங்கள், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. காலை 9 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.
பாலமேட்டில் வாடிவாசல் முன் பார்வையாளர்கள் அமரும் மாடம் மற்றும் இரண்டு அடுக்கு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் 1,500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிகள் முழுவதும் சிசிடிவி கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.தினமணி

கருத்துகள் இல்லை: