சனி, 11 பிப்ரவரி, 2017

நந்தினியைக் கொன்ற இந்து முன்னணி – ஆவணப்படம்


யாரோ ஒருவர் வெள்ளுடை போர்த்தப்பட்ட அந்த உடலை நீல நிற தார்பாய் ஒன்றினுள் புரட்டிப் போடுகிறார். தலை குப்புற கிடத்தப்பட்டிருக்கும் அந்த உடல் சில நொடிகள் கண்களில் விழுகின்றது. முழு நிர்வாணமான அந்த உடலின் மேல் முதுகு கருத்துப் போய் அதன் மீது வெள்ளைப் புழுக்கள் நெளிந்து கொண்டிருக்கின்றன. இடது கீழ் முதுகில் காயம் பட்ட அடையாளம் தெரிகின்றது. உடலைப் புரட்டிப் போடுகிறார் அந்த மனிதர். கருநீலத் துணி ஒன்றால் அந்தப் பெண்ணின் வாய் கட்டப்பட்டுள்ளது. சற்றே மேடிட்ட வயிறு.. அவளது பெண்ணுறுப்பு சிதைக்கப்பட்டுள்ளது.
ஐயோ ஐயோவென்ற ஓலம் அதிகரிக்க, சட்டென்று அந்த உடல் நீலத் தார்பாயால் மூடப்பட்டு அருகில் நின்று கொண்டிருந்த வெள்ளை ஆம்புலஸ் வேனுக்குள் திணிக்கப்படுகிறது. உணர்ச்சியற்ற முகங்களோடு நின்று கொண்டிருந்த போலீசு அதிகாரிகளிடம் ஒருவர் வாதிட்டுக் கொண்டிருக்கிறார்..
“சார்.. இதே ஒரு எஸ்.சி பையன் வன்னியர் பிள்ளைய அழைச்சிட்டுப் போயிருந்தா நடவடிக்கை எடுக்காம இருந்திருப்பீங்களா?” அந்தக் குரலில் வெளிப்பட்ட ஆற்றாமையின் உள்ளேயும் அவருக்கு முகம் கொடுத்து நின்று கொண்டிருந்த காவலதிகாரியின் கள்ள மௌனத்தின் உள்ளேயும் ஏராளமான அர்த்தங்கள் பொதிந்து கிடக்கின்றன. பதினேழே வயதான ஒரு சிறுமியின் கனவுகளும் அவளது பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளும் ஏமாற்றங்களும் மட்டுமின்றி ஆதிக்க சாதித் திமிரும் இந்து பயங்கரவாத வெறியின் ஆணவமும் அந்தக் காணொளித் துண்டின் ஒவ்வொரு காட்சியிலும் உறைந்து கிடக்கின்றன.அவள்  நந்தினி.  வினவு

கருத்துகள் இல்லை: