வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

திமுக ஆதரவு: சுப்புலட்சுமி ஜெகதீசன் சொன்னது ஆழம் பார்க்க? போட்டு வாங்கியது?

thetimestamil : விமர்சனம் என்று வந்துவிட்டால் அதற்கு யாரும் விதிவிலக்கல்ல. நேற்று பத்திரிகையாளரிடம் பேசிய திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், தெளிவான குரலில், பன்னீர்செல்வத்தை சட்டசபையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆதரிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார். வழக்கமாக இதுபோன்ற ஸ்டேட்மெண்டுகளின் முன்னாலும் பின்னாலும் உள்ள கேள்விகளையும் பார்க்க வேண்டும். நடுவில் பேசிய இரண்டு வரிகளை மட்டும் எடுத்துப் போட்டுக் குழப்பியடிக்கவும் செய்வதுண்டு. ஆனால் இந்தப் பேட்டி அப்படியில்லை. தெளிவான பார்வையுடன் தெளிவான வார்த்தை பிரயோகங்களுடன் கொடுக்கப்பட்ட பேட்டி.
திமுகவின் அதிகாரப்பூர்வ குரல் ஒலித்தால் எப்படியிருக்குமோ அந்தத் தொனியில் அந்தப் பேட்டியில் விஷயங்களைச் சொல்லியிருந்தார் அவர். கேள்வி இதுதான். நடக்கிற சர்ச்சையில் எண்ணையை அள்ளிக் கொட்டுவதற்காகவும் ஆழம் பார்ப்பதற்காகவும் தலைமையின் ஆசியுடன் சொல்லப்பட்ட பதிலா என்கிற கேள்வியும் எழுகிறது. சுப்புலட்சுமி அவர்கள் சொன்னதற்கு உடனடியாக மறுப்பு அறிக்கை வெளியிட்டிருக்கிறார் திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலின். தலைமைதான் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் என்றும் அறிவித்திருக்கிறார். தங்களை மீறி தன்னுடைய கட்சியின் மூத்த தலைவர் ஒருத்தர் பேசியிருப்பதாக அந்த அறிக்கை அதிகாரப்பூர்வமாக ஒத்துக் கொள்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவே உற்றுப் பார்க்கும் விவகாரத்தில், பொறுப்பான மூத்த தலைவர் தலைமையைக் கலந்தாலோசிக்காமல் இப்படி ஒரு பெரிய முடிவை அறிவிக்கிறார் என்றால், உண்மையில் கட்சி முழுவதும் செயல் தலைவரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்கிற கேள்வியும் எழுகிறது. தனக்கு அதிகாரமில்லை என்பதுதான் செயல் தலைவரின் முந்தைய ஆதங்கம். ஆனால் முழுக்கவே இப்போது அவரிடம் அதிகாரம் குவிந்திருக்கிற நிலையிலும் இப்படி அவரை மீறி சிலர் பேசுவதை எப்படி எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை. அதிமுக கூடாரம் கலகலத்துக் கொண்டிருப்பதாக கலகலப்பவர்கள் இதையும் பேசியாக வேண்டியிருக்கிறது. அவரது இரும்புப் பிடிக்குள் கட்சி இல்லை என்பதாகவே இதை எடுத்துக் கொள்ள முடிகிறது. ஆனால் ஆழம் பார்க்கத்தான் அப்படி ஒரு குண்டை வீசச் செய்தோம் என்று சொல்வார்களானால், அதற்கு ஒரு மிகப் பெரிய பூங்கொத்து!
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச், ஐந்து முதலைகளின் கதை நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.

கருத்துகள் இல்லை: