புதன், 8 பிப்ரவரி, 2017

ஆளுநர் நியமனம் தாமதம் ஏன்? : கி.வீரமணி

தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநரை நியமிக்க இவ்வளவு தாமதமாவது ஏன்? என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்த தாமதத்துக்குப் பின்னாலும் அரசியல் உள்ளதோ என்று சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு, நிரந்த ஆளுநர் இல்லாததும் ஒரு அடிப்படைக் காரணமாகும். மத்திய அரசு கடந்த பல மாதங்களாக நிரந்தர ஆளுநரை நியமிக்காமல் தள்ளிக்கொண்டே போகிறது. மேலும் பொறுப்பு ஆளுநரை அதுவும் மகாராஷ்டிரத்தின் ஆளுநரை நியமனம் செய்திருக்கிறது. குடியரசு நாளில்கூட அவர் செய்ய வேண்டிய ஆளுநர் பணியை மற்றவர் – முதல்வர் - செய்தார் என்பது ஒரு சிறு எடுத்துக்காட்டு.

அதுபோலவே ஜனநாயகம், தமிழ்நாட்டில் எங்கே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அனுப்பப்பட்டுவிடுமோ என்ற கவலை பல முற்போக்கு ஜனநாயகவாதிகளிடம் இருக்கிறது. இதைப்போக்க உடனடியாக தமிழ்நாட்டுக்கு நிரந்தர ஆளுநரை மேலும் காலம் தாழ்த்தாமல் நியமிக்க வேண்டும்.
மத்திய அரசுக்கு அந்த நியமனம் என்ன அவ்வளவு கடினமான ஒன்றா? பலருக்கும் புரியவில்லை. இதிலும் அரசியல் உள்ளதோ என்று பலரும் அய்யுறும் அவலம் ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: