ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கலைஞருக்கு நள்ளிரவில் ஸ்கேன் .. ஆரோக்கியமாகவே உள்ளார் !

மின்னம்பலம் ,காம் :காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு, பேச்சு சரியாக வராததையடுத்து நேற்று அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 15ஆம் தேதி வியாழன் அன்று நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவக் குழுவினரால் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் அவருக்கு, குழாய் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கும் டிரக்யாஸ்டமி சிகிச்சையும் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனைக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்து, ஸ்டாலின் மற்றும் கருணாநிதியின் குடும்பத்தினர்களை சந்தித்து அவரது உடல் நலம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
ஆனால், அவர்களிடம் தலைவர் கருணாநிதியால் சரியாக பேச முடியவில்லை. அதனால் சிகிச்சை வழங்கி வருவதில் வேறு ஏதேனும் பிரச்னை இருக்கலாமா என்றும் அவருக்கு ஏன் பேச்சு சரியாக வரவில்லை என்பதை பரிசோதிக்கும் வகையில், நேற்று இரவில் அவரது உடல் முழுவதும் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், கருணாநிதிக்கு புற்று நோய் எதுவும் இருக்க வாய்ப்பிருக்குமா என்றும் சோதனை செய்வதற்காக முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. ஸ்கேன் ரிப்போர்ட்டில் கருணாநிதிக்கு வேறு எதுவும் பாதிப்பில்லை என்று தெரியவந்தது. அவர் நலமாக இருப்பது குறித்து அறிக்கையில் தெரியவந்ததால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதையடுத்து கலைஞரின் உறவினர்கள் அனைவரும் அவருடன் இருந்து அவருக்கு வேண்டிய சிகிச்சைகளை கவனித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: