வெள்ளி, 23 டிசம்பர், 2016

ராம் மோகன் ராவ் .. அவன் இவன் என்று குறிப்பிடும் தினமலர் ..

c0u0drzveaavbd9thetimestamil :இன்றைய தினமலர் நாளிதழில் , வருமான வரித்துறை சோதனையை அடுத்து, பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள  ராம் மோகன் ராவ் பற்றி முதல் பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
“நீக்கம்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியில், தலைமை செயலாளராக பதவி வகித்த ராம் மோகன் ராவை “அவன்” என்று ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது, நாளிதழை வாசித்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தினமலரின் அந்த வரிகளை உங்களுக்காக இங்கே எழுத்து வடிவில் தருகிறோம்.
/வருமான வரித்துறை சோதனையை அடுத்து, தமிழக தலைமை செயலர் பதவியில் இருந்து, ராமமோகன ராவ் நீக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான். புதிய தலைமை செயலராக, நில நிர்வாக கமிஷனர், கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், அரசியல்வாதிகள் அடிமையாக செயல்பட மாட்டார் என, எதிர்பார்க்கப்படுகிறது./
/ தமிழக அரசின் தலைமை செயலராக இருந்த ராமமோகன ராவ், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து உள்ளதாக புகார் எழுந்தது. அவனுக்கு நெருக்கமான சேகர்ரெட்டி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள், சில தினங்களுக்கு முன், திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது, 131 கோடி ரூபாய் ரொக்கம், தங்க நகைகள் மற்றும் ஆவணங்கள், பறிமுதல் செய்யப்பட்டன. /

/ரெட்டி கொடுத்த தகவல்படி, வருமான வரித்துறை அதிகாரிகள், ராமமோகன ராவ் வீட்டி லும், அவனது உறவினர்கள் வீடுகளிலும் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்; இதில், ஏராளமான ஆவணங்கள், ரொக்கம் மற்றும் தங்க நகைகள் சிக்கின. /
 /இதையடுத்து நேற்று, தலைமை செயலர் பொறுப்பில் இருந்து ராம மோகன ராவ் விடுவிக்கப்பட்டான். அவனுக்கு புதிய பணியிடம் எதுவும் வழங்கப்படவில்லை; காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளான்./
இப்படியாக, ராம் மோகன் ராவ் நீக்கப்பட்டு கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளது பற்றிய அந்த கட்டுரை முழுவதும் “அவன், இவன்’ என்றே ஏக வசனத்தில் எழுதப்பட்டுள்ளது.
இதையடுத்து சமூக வலைதளத்தில் இது குறித்து எதிர்ப்பு தெரிவித்து பதிவுகள் எழுதப்பட்டு வருகின்றன.
கடைகோடி தமிழனுக்கும் பத்திரிகையை கொண்டு போக வேண்டும் என்பதற்காக, சில பல எளிய மொழி நடையை அறிமுகப்படுத்தியதாக பெருமை பட்டுக்கொள்ளும் பிரபல நாளிதழான தினமலர், இதழியல் தர்மங்களை காலில் போட்டு மிதித்தே வந்திருக்கிறது இது வரையில். ஆனால், தற்போது பத்திரிகை தர்மங்களை மண்ணுக்குள் போட்டு மூடத் தொடங்கி விட்டதோ என்றும் யோசிக்க தோன்றி இருக்கிறது.

கருத்துகள் இல்லை: