புதன், 21 டிசம்பர், 2016

வருமான வரிச் சோதனை தலைமைச் செயலாளருடன் மட்டுமல்ல ஆட்சியாளர்களிடமும் ... தலைவர்கள் கருத்து!

தமிழக தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருவது குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்நிலையில், மணல் குவாரி அதிபரும் தமிழகம் முழுவதும் காண்ட்ராக்ட் தொழில் செய்துவரும் சேகர் ரெட்டி வீட்டிலும், அவரது நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் மற்றும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி, நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களும் கிலோக்கணக்கிலாக தங்க நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில், சேகர் ரெட்டியின் செல்போனிலிருந்து தமிழக தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவுக்கு அதிக அழைப்புகள் சென்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் சேகர் ரெட்டியின் சொல்போனிலிருந்து ராம்மோகன் ராவின் மகன், உறவினர்கள், அமைச்சர்கள், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா ஆகியோருக்கு அழைப்புகள் சென்றிருப்பது உறுதியானது.

அதையடுத்து, தலைமைச் செயலருக்கு இந்த வழக்கில் தொடர்புடையது தெரியவந்ததால் இந்த தகவல், உடனடியாக பிரதமர் நரேந்திர மோடிக்குச் சென்றது. ‘கருப்புப் பண ஒழிப்பில் எந்த சமரசமும் வேண்டியதில்லை. யாராக இருந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரதமர் உத்தரவிட்டார். அதன்பேரில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, சேகர் ரெட்டி மற்றும் அவருடன் தொடர்புடையவர்கள்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில்தான், தமிழக தலைமைச்செயலர் ராம்மோகன் ராவின் சென்னை அண்ணாநகர் இல்லத்தில், இன்று காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
ஸ்டாலின்
‘தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத முன்னுதாரணமாக தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். கடந்த சில வாரங்களாகவே, தொழிலதிபர்கள் என்ற பெயரில் ஆளுங்கட்சியினருக்கு நெருக்கமானவர்களுடைய சொந்தமான இடங்களில் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவை பற்றிய முழுமையான உண்மைத் தகவல்களை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்த நிலையில்தான், தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் வீட்டில் இன்று காலை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
அண்மையில், சோதனைகளுக்குள்ளான மணல் வியாபாரியான சேகர் ரெட்டி என்பவரிடம் புது 2000 ரூபாய் நோட்டுகள் உள்பட, கோடிக்கணக்கக்கான ரூபாய் பணமும் கிலோ கணக்கில் தங்கமும் வருமான வரித்துறையினரால் கைப்பற்றப்பட்டநிலையில், அதன் தொடர்ச்சியாக தலைமைச் செயலாளர் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. முதல்வரின் செயலாளராக இருந்த ராமமோகன ராவுக்கு தலைமைச் செயலாளர் பதவியை வழங்கியபோதே சர்ச்சைகள் வெளிப்பட்டன. இந்நிலையில், தலைமைச் செயலாளர் வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை என்பது தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக நலன்களைப் புறக்கணித்து, தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அதிமுக அரசின் அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் முறைகேடுகள்மூலம் லாபம்பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டிவைப்பவர்களும் தப்பிவிடக் கூடாது என வலியுறுத்துகிறேன்’ என்று கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்
ஸ்டாலின் கூறியதைப் போன்று இது, தமிழகத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரிய தலைகுனிவு என திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் :
மத்திய வர்த்தம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பணம் பதுக்கலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளில் வருமான வரி அலுவலர்கள் சோதனையில் ஈடுபடுகின்றனர். இதில் பாரபட்சம் காட்டப்படவில்லை.
புதிய 2000 ரூபாய் நோட்டுகள் மக்களுக்கு கிடைப்பதில் பிரச்னை இருப்பது என்றால், அந்தப் பணம் வேறுவழியில், வேறு யாருக்கோ செல்வதாகத்தான் அர்த்தம். அதைக் கண்டுபிடிக்கவும் தடுக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்று அவர் கூறினார்.
மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:
தமிழக தலைமைச் செயலர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் அரசியல் சூழ்ச்சி ஏதும் இல்லை. வருமான வரித்துறை சோதனையில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. அதிகாரிகள் தங்கள் வேலையைச் செய்து வருகின்றனர் என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார் .
தமிழிசை சவுந்தரராஜன்:
சந்தேகத்தின் அடிப்படையிலேயே சோதனை நடத்தப்பட்டது. முழு விவரம் சேகரித்தபின்பே, இந்தச் சோதனை நடைபெற்று வருகிறது. இதில், எந்த பாரபட்சமுமின்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கருப்புப் பணத்தை பதுக்குகிறவர்கள்மீது எடுக்கும் நடவடிக்கை. இது பொதுமக்களுக்கு ஆதரவான நடவடிக்கையாகும். பழி வாங்கும் நடவடிக்கையல்ல என்று கூறினார்.
பாமக ராமதாஸ்:
வருமான வரிச் சோதனையும், நடவடிக்கையும் தலைமைச் செயலாளருடன் நின்றுவிடக் கூடாது. ஆட்சியாளர்களிடமும் நடத்தப்பட வேண்டும். ஊழல்வாதி ராம்மோகன் ராவே, தமிழகத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையராக இருந்ததுதான் கொடுமை என, பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார் .
தொல். திருமாவளவன்
இந்த வருமான வரி சோதனை பற்றி வெளிப்படையான அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடவில்லை என்றால், இதற்கு அரசியல் சாயம் பூசப்படும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
அதிமுக செய்தித் தொடர்பாளர் ஆவடி குமார்
கருப்புப் பணத்தை அழிக்கிறோம் என்று, மக்களை அச்சுறுத்திக் கொண்டிருந்த மத்திய அரசு, தற்போது மாநிலத்தை அச்சுறுத்த ஆரம்பித்திருக்கிறது. தமிழக அரசியலில் கொந்தளிப்பை ஏற்படுத்தவே இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: