புதன், 13 ஜூலை, 2016

பாலாறு அணை உயர்த்தப்படுகிறது.. ஆந்திராவின் அடாவடியை தடுக்க தவறும் தமிழக அரசு.. கலைஞர் எச்சரிக்கை

பற்றியெரியத் தொடங்கியுள்ளது பாலாற்று உரிமைப் பிரச்னை. இதுகுறித்து, மிகக் காட்டமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் திமுக தலைவர் மு.கருணாநிதி. அதில் தெரிவித்துள்ளதாவது: ‘1892இல், மெட்ராஸ் அரசாங்கத்துக்கும், மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில், பட்டியல் “ஏ” இணைப்பின்படி துங்கபத்ரா, வட பெண்ணை, தென் பெண்ணை, பாலாறு, காவிரி உள்ளிட்ட 15 ஆறுகளின் மேற்பகுதியில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளின் உயரத்தையும், பரப்பளவையும் பராமரிப்பு என்ற பெயரில் அதிகரிக்கக் கூடாது. அதன் பாசன பரப்பளவையும் அதிகரிக்கக் கூடாது. மேலும், கீழ்ப்பகுதியில் பாசனம் பெறும் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் கட்டித் தண்ணீரை வேறுபகுதிக்கு திசை திருப்பக்கூடாது மற்றும் தேக்கிவைப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது. ஆனால், தமிழக அரசின் எந்த முன்அனுமதியும் இல்லாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பல இடங்களில் தடுப்பணை கட்டி, அதைக் கண்டித்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் 2006ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டு, அப்போது அணை கட்ட தடைவிதிக்கப்பட்டது.

கடந்த பத்தாண்டுகாலமாக அமைதியாக இருந்த ஆந்திர அரசு, தமிழக அரசின் எதிர்ப்புகளைச் சமாளிக்க ரகசியமாக தடுப்பணை கட்டுமானப் பணியைத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக, 1892 மெட்ராஸ்-மைசூர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு அப்பட்டமாக மீறியுள்ளது என்று “தி இந்து” விரிவாக எழுதியுள்ளது. கனகநாச்சியம்மன் கோவில்பற்றி தெலுங்குதேசக் கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, “அந்தக் கோவில் எங்களுடைய எல்லையில்தான் உள்ளது, தமிழர்கள் கோயில் கட்டிக்கொள்ள நாங்கள் பெருந்தன்மையாக அனுமதியளித்தோம். ஆனால், எங்களை கனகநாச்சியம்மன் கோவில் பூசாரி புறக்கணித்தார். அந்தக் கோவில் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்றால் அதற்கான ஆவணத்தை காண்பிக்கச் சொல்லுங்கள்” என்றெல்லாம் கூறியிருக்கிறார். வேலூர் மாவட்டப் பாலாறு பாதுகாப்புச் சங்கத்தின் செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் கூறும்போது, “தமிழக அரசு இந்தப் பிரச்னையை சட்டபூர்வமாக எதிர்க்காவிட்டால், பாலாற்றில் நமக்கு உள்ள உரிமையை இழப்பதுடன் பாலாற்றையும் இழக்கவேண்டியதுதான்” என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் எப்போதும்போல ஆந்திர முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதிவிட்டு, அத்துடன் தனது கடமை முடிந்துவிட்டதைப்போல இருக்கிறார். நாட்டின்மீது நாளிதழ்கள் காட்டும் அக்கறையின் அளவுக்கு இணையாக ஆட்சியாளர்களுக்கு அக்கறை இல்லாவிட்டாலும், அதைப் பின்பற்றியாவது செயல்பட வேண்டாமா என்ற வேதனைதான் நமக்கு ஏற்படுகிறது. எனவே, இதற்குப் பிறகாவது தமிழக முதலமைச்சர் உடனடியாக பாலாறு தடுப்பணைகள் குறித்தும், கோயில் ஆக்கிரமிப்பு, அத்துமீறல் குறித்தும் பொதுப் பணித்துறை மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அழைத்து இதுபற்றி விரிவாக விசாரிப்பதோடு, சட்டரீதியாகவோ அல்லது பேச்சுவார்த்தைமூலமாகவோ சுமுகமாக தீர்ப்பதற்கான முயற்சியிலே ஈடுபட வேண்டும்.
மத்திய அரசுக்கும் இதுபற்றி விரிவாக எழுதிட வேண்டும். மாறாக, “சித்தம் போக்கு, சிவன் போக்கு” என்றபோக்கில், “மாதம் மும்மாரி மழை பொழிந்ததா, மந்திரிப் பிரதானியர்களே!” என்ற மனப்பான்மையில் இருந்தால், தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் மிகப்பெரிய உரிமை இழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்!’’  minnambalam.com

கருத்துகள் இல்லை: