செவ்வாய், 12 ஜூலை, 2016

எம்.ஆர்.ராதா - கலக்காரனின் கதை - ஒரு பகுத்தறிவு கலைஞரின் கதை ..முகில்

பொதுவாக தனிமனிதர்கள், தொழில் முனைந்து வெற்றிபெற்ற பெரும் வியாபாரிகள், பெரும் வெற்றி என்று நிர்ணயிக்கப்பட்ட பொது வெற்றி பெற்ற நபர்கள் சார்ந்து வெளிவரும் புத்தகங்கள் ஒருவகையில் சுயமுன்னேற்ற புத்தக வகைமையில்தான் வரும். ஆனால் கலைஞர்கள் வாழ்க்கை தொடர்பாக வெளிவரும் புத்தகங்களை அவ்வகையில் நாம் சேர்த்துவிட முடியாது. சிஸ்த்சென்ஸ் பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கும் எம்.ஆர். ராதா - கலகக்காரனின் கதை எனும் நூலை முதல் வகைப்பாட்டில் சேர்த்துவிட முடியாது. பொதுவாக ஒரு கலைஞன் தன்னுடைய பால்ய வயதிலேயே பெரும் பக்குவப்பட்டு பொதுப்புத்தி சமன்பாடுகளை உதறித் தள்ளி சமூகத்தின் பழமைவாதங்களில் விடுபட்டு, சமூக முன்னேற்றத்தை கோரும் வாழ்க்கைமுறையை பெற்றுவிடுகிறான்.
எம். ஆர். ராதாவின் வாழ்க்கையில் நடந்த பல்வேறு சம்பவங்களை, மிகுந்த வெகுஜன வார்த்தை பயன்பாடுகளோடு முகில் இந்த புத்தகத்தில் விவரித்துள்ளார். ஒரு கலைஞனை வாசிப்பதன் மூலம், நாம் உளவியல் ரீதியாக பல்வேறு மாற்றமடைந்து இறுதியில் சுயமறிந்து செயல்படும் பக்குவத்தை அடைகிறோம். மற்றவர்களின் வாழ்க்கை சம்பவங்களை படிப்பதைப் போல, இது அறுதியிட்டு ஒரு முடிவை நோக்கி செல்லும் என்கிற பிம்பத்தை முதலில் உடைக்கிறது. அதாவது கலைஞனின் வாழ்க்கை எப்போதும் இறங்கு முகத்தில் இருந்துக் கொண்டே இருக்கும். வியாபாரிகள், நிறுவன முதலாளிகளின் வாழ்க்கை இறுதியில் பெரும் வெற்றியை அவர்கள் அடைந்தார்கள் என்கிற விதத்தில் நகர்ந்து, உணர்ச்சிப்பூர்வமாக நம்மை சிலாகிக்க வைத்துவிடும்.
ஆனால் கலைஞர்களின் வாழ்க்கையை படிப்பதன் வாயிலாக நாம் அறுதியிட்ட முடிவை நோக்கி நகரமுடியாது. அது எப்போது எங்கே முடியும், என்ன ஆனது, எப்படி இவன் இப்படியே வாழத் துணிந்தான் என்கிற பல்வேறு கேள்விகளை நமக்குள் எழுப்பிக் கொண்டே இருக்கும். இந்த கேள்விகளே நமக்குள் பெரும் விவாதங்களை எழுப்பும். அந்த விவாதங்களின் வழியே நாம் பெரும் தேடலை நோக்கி நம்மை நகர்த்தி செல்வோம்.
எம்.ஆர். ராதா என்கிற நடிகன் தாண்டி, எம்.ஆர். ராதா என்கிற பகுத்தறிவுக்கு கலைஞனை நாம் இந்த நூலின் மூலம் அறிந்துணரலாம். இந்த புத்தகம் பியூர் சினிமா புத்தகக் கடையில் விற்பனைக்கு கிடைக்கிறது. வாய்ப்பிருந்தால் ஒருமுறை படித்துவிடுங்கள். விலை 150 ரூபாய்.
Mugil Siva

கருத்துகள் இல்லை: