செவ்வாய், 12 ஜூலை, 2016

ஒழிவு திவச களி... சின்னஞ்சிறு பட்ஜெட்டில் பிரமாண்ட சாதனை .. எஸ்கேப் திரையரங்கில் இரவு 10.05 காட்சி

Sruti Harihara Subramanian : ஒழிவு திவஸதேக் களி (Ozhivu Divasaththe Kali)
மலையாளத்திலும், கன்னடத்திலும் சினிமா ஒரு முதலீட்டைக் கோரும் கலை என்பதை தாண்டி, அந்த முதலீட்டை தாண்டி சினிமா எப்படிக் கலையாக மாறுகிறது என்பதை தொடர்ந்து நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள். அண்மையில் கன்னடத்தில் வெளியான திதி படமும், தற்போது மலையாளத்தில் வெளியாகியிருக்கும் ஒழிவு திவஸதேக் களி படமும் அதற்கு சான்று. தமிழில் பெரும் முதலீடு இருந்தாலேயன்றி ஒரு படம் எடுத்து அதனை வெளியிட முடியாது என்கிற சூழலில் ஐந்து லட்சம், பத்து லட்சம், பதினைந்து லட்சம் என சொற்ப லட்சங்களில் ஒரு படத்தை எடுத்து, அதனை வெற்றிகரமாக மக்களிடமும் கொண்டு போய் சேர்க்க முடியும் என்பதற்கு இந்த இரண்டு படங்களும் நிகழ்கால சாட்சிகளாக இருக்கிறது. 

திதியை விட, ஒழிவு திவசத்தேக் களி ஒருவகையில் நாடக பாணியில் இருந்தாலும், அதனை நாடக பாணியில் இருந்து நல்ல சினிமாவாக மாற்ற இயக்குனர் பெரும் முயற்சி மேற்கொண்டிருக்கிறார் என்பதை பல காட்சிகளில் உணர முடிகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஷாட்டின் நீளமும் குறைந்தது ஐந்து முதல் இரு்பது நிமிடங்கள் வரை நீள்கிறது. ஒரு பரிச்சர்த்த படத்தில் இத்தகைய முயற்சிகள் இன்றியமையாதவை. இடைவேளைக்கு பின்னர் வரும் முதல் காட்சியில் குடித்துவிட்டு நண்பர்களில் இருவர் வார்த்தைகளால் சண்டைப்போட்டு பின்னர் இணையும் அந்த காட்சியும், இறுதிக்கு காட்சியும் படத்தை நாடக பாணியில் இருந்து சினிமாவாக மாற்றும் போராட்டத்தில் பெரும் வெற்றி பெற்ற காட்சியமைப்புகள் என்றே சொல்வேன். 106 நிமிட படத்தில் கிட்டத்தட்ட 103 நிமிடங்கள் படத்தின் இறுதிக்கு காட்சியை கணிக்க முடியாமல் பார்வையாளர்கள் படத்தோடு ஒன்றி அடுத்து என்ன நடக்கும் என்று கதாபாத்திரங்களை போலவே எதிர்பார்த்துக் காத்திருக்கும் உன்னத நிலையை இந்த படத்தில் கண்டுணர முடியும். ஆனால் அந்த இறுதி மூன்று நிமிடங்கள் படத்தின் ஒட்டுமொத்த பார்வைக்கு கோணத்தையே மாற்றியமைத்துவிடுகிறது. ஆரம்பத்தில் இருந்தே அரசியலை பேசும் கதாபாத்திரங்கள் என்றாலும், இறுதி முடிவை நாம் சிறுவயதில் விளையாடும் ராஜா ராணி விளையாட்டை முன்வைத்து பேசியிருக்கிறார்கள்.
இருப்பது லட்சம்தான் படத்தின் மொத்த பட்ஜெட். அதில் சாதி அரசியலை அத்துணை நுட்பமாக பேசியிருக்கிறார்கள். குடிகாரர்கள் அரசியலை பேசுகிறார்கள், குடித்த வெவ்வேறு சாதியை சேர்ந்த நண்பர்களிடையே நடக்கும் உரையாடல், இவர்கள் குடித்துவிட்டு பொழுதுபோக்காக சாதி அரசியலை பேசுகிறார்கள் என்றெல்லாம் நகர்ந்துவிட முடியாது. குடியிலும் சாதி எப்படி மனிதர்களை பிரித்து வைத்திருக்கிறது என்று இன்னொரு கோணத்திலும் அணுகலாம். ஆரம்பத்தில் கோழியை கொல்ல ஒவ்வொரு நபரும் மறுத்து, பின்னர் இறுதியாக ஒரு நபர் கொல்கிறார். இறுதியில் அந்த நபரே கோழி போல கொல்லப்படுகிறார். நண்பர்களே அண்மையில் இத்துணை பரிசிச்சார்த்த முயற்சிகளோடு ஒரு படத்தை பார்த்ததில்லை. இந்த திரைப்படம் எக்ஸ்பிரஸ் அவெனியூவில் உள்ள எஸ்கேப் திரையரங்கில் இரவு 10.05 காட்சிக்கு திரையிட்டிருக்கிறார்கள். புதன்கிழமை வரை படம் திரையரங்கில் திரையிடப்பட்டிருக்கும். அதற்குள் அவசியம் ஒருமுறை பார்த்துவிடுங்கள். படத்தை சென்னையில் திரையிட ஏற்பாடு செய்த ஸ்ருதி அவர்களுக்கும், அவரது நிறுவனத்திற்கும் எனது பிரத்யேக நன்றி.

கருத்துகள் இல்லை: