ஞாயிறு, 10 ஜூலை, 2016

அ.தி.மு.க. கவுன்சிலர் வெட்டி படுகொலை..முல்லை .ஆர்.ஞானசேகர் (58) சென்னை 21 வது வார்டு

சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை ஆர்.ஞானசேகர் மணலியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பலை போலீசார் தேடிவருகிறார்கள். அ.தி.மு.க. கவுன்சிலர் சென்னையை அடுத்த மணலி, ராஜா கார்டன், அண்ணா தெருவில் வசித்துவந்தவர் முல்லை ஆர்.ஞானசேகர்(வயது 58). இவர் சென்னை மாநகராட்சி 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர். மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிலைக்குழு உறுப்பினராகவும் உள்ளார். திருவொற்றியூர் பகுதி அ.தி.மு.க. அவைத் தலைவராகவும் இருந்தார். இவருக்கு யசோதா என்ற மனைவியும், ராஜேஷ் சேகர், ராஷீ சேகர், ரகுசேகர், கிருஷ்ணன்சேகர் என்ற மகன்களும், லீவிதா என்ற மகளும் உள்ளனர். இவர் வழக்கமாக மாலை வேளையில் மணலி பஸ் நிலையம் எதிரே உள்ள அவரது நண்பர் சுந்தாராம் என்பவரது கடையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம்.


வெட்டிக் கொலை

அதுபோல நேற்று மாலையும் ஞானசேகர், சுந்தாராம் கடையில் உட்கார்ந்து அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்துவந்த 3 வாலிபர்கள் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவுன்சிலர் ஞானசேகரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் அவரது தலை மற்றும் முகத்தில் வெட்டு விழுந்தது. தடுக்க முயன்றபோது அவரது கைகளிலும் வெட்டு விழுந்தது.

இதில் தலை மற்றும் உடம்பில் பலத்த காயமடைந்த ஞானசேகர் அதே இடத்தில் துடிதுடித்து சரிந்து விழுந்தார். உடனே கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். அதனைப்பார்த்து மிரண்டுபோன அவரது நண்பர் சுந்தாராம் கூச்சல்போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ஞானசேகரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஞானசேகர் பரிதாபமாக இறந்துபோனார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீஸ் உதவி கமிஷனர் செல்வராஜ் தலைமையில் போலீசார் விரைந்துவந்து சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். சுந்தாராம் கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் கொலையாளிகளின் உருவம் பதிவாகி இருந்தது. அந்த உருவத்தை வைத்து கொலையாளிகளை போலீசார் தேடிவருகின்றனர்.

கவுன்சிலர் ஞானசேகர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்களும், வியாபாரிகளும் அரசியல் கட்சி பிரமுகர்களும் அந்த பகுதியில் திரண்டனர். இதனால் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அந்த பகுதியில் பஸ் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு பதற்றமான சூழ்நிலை உருவானது. அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.

காரணம் என்ன?

கொலை நடந்த கடைக்கு எதிரிலேயே போலீஸ் பூத் உள்ளது. அங்கு காவலுக்கு இருந்த போலீசார் வருவதற்கு முன்பே கொலையாளிகள் தப்பி ஓடிவிட்டனர். எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொலை நடைபெற்றதால் பதற்றம் ஏற்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட ஞானசேகர் இரண்டு முறை பேரூராட்சி தலைவராகவும், ஒருமுறை நகராட்சி தலைவராகவும் பதவி வகித்தவர். ஞானசேகர் ரியல் எஸ்டேட் தொழிலும் செய்துவந்தார். அரசியலிலும் தீவிரமாக செயல்பட்டு வந்தார். எனவே என்ன காரணத்துக்காக அவர் கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர் dailythanthi.com

கருத்துகள் இல்லை: