புதன், 13 ஜூலை, 2016

நாம் தமிழர் கட்சியின் கொள்கை, தத்துவம், அரசியல், இசம், ஜனநாயகம் புடலங்காய் அனைத்தும் அண்ணனே தீர்மானிப்பார்

நாம் தமிழர் கட்சி சிமான
கட்அவுட் நடிகர்களுக்கு பீராலும், பாலாலும் அபிஷேகம் செய்த தமிழ் மண்ணில் சீமான் எனும் ‘இலட்சியப் போராளியின்’ ‘தமிழர் தத்துவ’ அரசியலுக்கு சில இளைஞர்களாவது செல்வது ஆரோக்கியமல்லவா என்றார் ஒரு நாம் தமிழர் தம்பி! அந்த ஆரோக்கியத்தை ஆய்வக சோதனைக்கு அனுப்பிப் பார்ப்போமா?

நாம் தமிழர் கட்சி சிமானுக்கு சொந்தமா, தம்பிகளுக்கு சொந்தமா ?
சி.பி.எம் கட்சியின் அருணனுடன் சீமான் நடத்திய “யார் லூசு” எனும் ‘வரலாற்றுச் சிறப்பு’மிக்க நிகழ்ச்சியை நினைவுபடுத்துங்கள்! பாண்டேவின் கள்ளச்சிரிப்புக்கிடையில் சீமான் சவால் விடுகிறார், “மக்கள் நலக்கூட்டணி எங்களை விட அதிக வாக்குகளைப் பெற்றால் நாம் தமிழர் கட்சியை கலைத்து விட்டு சி.பி.எம்-இல் சேருகிறேன்” என்றார்! தேர்தல் முடிந்ததும் யாரும் இந்த சவாலை முன்னிட்டு சீமானை துன்புறுத்தவில்லை, பாவம் பிழைத்து போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். சீமானின் தம்பிகளோ அண்ணன் ஒரு ஃபுளோவுல பொங்கிட்டார், இதெல்லாம் ஒரு மேட்டரா என்று ஜகா வாங்கினார்கள்.

நமது கேள்வி இந்த சவால் குறித்து அல்ல. மாறாக இந்த சபதத்தில் அண்ணன் தன்னை மட்டும் பணயம் வைக்காமல் தருமர் போல தம்பிகளையும் சேர்த்தல்லவா பணயம் வைத்திருக்கிறார். நாம் தமிழர் கட்சி அவரால் ஆரம்பிக்கப்பட்டாலும் அதன் வாழ்வு சாவு மகிழ்ச்சி இகழ்ச்சி பொங்கல் பூரி சவால் சவடால் அனைத்தும் இன்னும் அண்ணனாலேயே தீர்மானிக்ப்படுகின்றது. அதாவது அந்தக் கட்சியில் துளியும் ஜனநாயகம் இல்லை. இருந்திருந்தால் வைகோ கூட்டணி அதிக வாக்கு வாங்கினால் நான் மட்டும் நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி உங்களிடம் சேருகிறேன் என்று சபதம் போட்டிருப்பார்.
தனது ஈகோ பொங்கலுக்காக கட்சியையே கலைப்பேன் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் முட்டாள் மற்றும் அடிமைகள்தானே? தந்தி டி.வி பாண்டேயின் சதுரங்க ஆட்டத்தில் தனது கட்சியையும் தம்பிகளையும் வைகோ கூட்டணிக்கு எழுதிக் கொடுத்திருக்கும் அண்ணனது செயல் செப்புவது என்ன?
நாம் தமிழர் கட்சியின் கொள்கை, தத்துவம், அரசியல், இசம், ஜனநாயகம் அனைத்தும் அண்ணனே தீர்மானிப்பார். தம்பிகள் அனைவரும் அதை வழிமொழிய வேண்டும். இப்படி அண்ணனது வாய் ஃபுளோவில்தான் தமிழனது விடுதலை சிக்கியிருக்கிறது என்றால் இதை விட பெரிய அபாயம் என்ன வேண்டும்? உள்கட்சி ஜனநாயகம் இல்லாத ஒரு கட்சி எப்படி பெரும்பான்மை மக்களின் ஜனநாயகத்திற்குகாக போராட முடியும்? எல்லாவற்றையும் நானே செய்வேன் என்று ஜெயா கூறுவதற்கும், உனக்கு கார் வேண்டுமா நான் ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்கிறேன் என்று சீமான் கூறுவதற்கும் என்ன வேறுபாடு?
இல்லை உலகிலேயே அண்ணன் தம்பி உறவில் தமிழனைப் போல யாரும் கட்டிப் பிடித்து அழ முடியாது என்பதால் அண்ணனுக்கு அந்த உரிமை இருப்பதாக தம்பிகள் புது விளக்கம் கூறுவார்களா? அண்ணன் தம்பி உறவு என்பதே ஒரு நிலவுடமை குடும்ப ஆதிக்க உறவு. இதை தமிழன் உறவு என்று கூறினாலும் அடிப்படையில் இது ஜனநாயகத்தை மறுக்கும் நாட்டமை உறவே! இறுதியாக தம்பிகளே இப்படி அண்ணனிடம் அடிமையாக இருக்கும் போது தமிழர்களை விடுதலை செய்வது எப்படி?
வினவு பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள். வினவு.காம்

கருத்துகள் இல்லை: