புதன், 18 மே, 2016

Trafic ராமசாமி : ரூ.570 கோடி....சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது...கண்டுபிடிக்கும் வரை...

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்றும், அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்றும் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: ரூ.570 கோடி பறிமுதல் சட்டசபை
தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டவிரோதமாக எடுத்து செல்லப்பட்ட சுமார் 100 கோடி ரூபாய் பறிமுதல் செய்துள்ளதாகவும், அதில் 50 சதவீதம் முறையான கணக்கு இல்லாதவை என்றும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார். இந்த நிலையில், கடந்த 14-ந் தேதி திருப்பூர் மாவட்டத்தில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிகள், 3 கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்ட ரூ.570 கோடியை பறிமுதல் செய்துள்ளனர். அந்த வாகனங்களில் பயணம் செய்தவர்களிடம் முறையான ஆவணங்கள் எதுவும் இல்லை. தற்போது இந்த பணம் தங்களுடையது என்று பாரத ஸ்டேட் வங்கி நிர்வாகம் உரிமை கோரியுள்ளது.


ரிசர்வ் வங்கியின் விதிமுறை

ஆனால், வங்கி நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கம், தேர்தல் அதிகாரிகளுக்கு திருப்தி அளிக்காமல் உள்ளன. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பெரும் தொகையை எப்படி எடுத்து செல்வது?, ஒரு வங்கி கிளையில் எவ்வளவு பணம் இருப்பு வைக்கலாம்? என்பது தொடர்பான ரிசர்வ் வங்கி ஏற்கனவே சில விதிமுறைகளை வகுத்துள்ளது.

ஆனால், இந்த விதிமுறைகளை பின்பற்றாமல், பாரத ஸ்டேட் வங்கியின் கோவை கிளை நிர்வாகம் இந்த தொகையை தங்களது கிளையில் இருந்து எடுத்து செல்லப்பட்டது என்று கூறியுள்ளது. ஆனால், ‘இவ்வளவு பெரிய தொகையை ஒரு வங்கி கிளையில் இருந்து மற்றொரு கிளைக்கு எடுத்துச்செல்வது சாத்தியமற்றது’ என்று முன்னாள் நிதி மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.

தேர்தல் பணமா?

எனவே, இது சட்டவிரோதமான பணம் என்று தெரிகிறது. மேலும், இதுவரை ரிசர்வ் வங்கி மண்டல இயக்குனர், அமலாக்கப்பிரிவு மண்டல சிறப்பு இயக்குனர் ஆகியோர் இந்த பணம் குறித்து முறையான விசாரணை நடத்தி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு அறிக்கை தரவில்லை.

எனவே, திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.570 கோடி குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும். இந்த தொகையை தமிழக சட்டசபை தேர்தலுக்காக கொண்டுவரப்பட்டதா? என்பதை கண்டறியவேண்டும். அதுவரை தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று கடந்த 15-ந் தேதி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தேன். இதுவரை மனுபரிசீலிக்கப்படவில்லை.

தேர்தல் முடிவு

எனவே, தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளை வெளியிடக்கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது  dailythanthi.com

கருத்துகள் இல்லை: