புதன், 18 மே, 2016

தொடர் மழை.. அரக்கோணம், நெல்லூரில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் சென்னை வருகை

 சென்னையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அரக்கோணம், நெல்லூரில் இருந்து பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 270 பேர் சென்னை வந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னைக்கு தென்கிழக்கே 120 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலம், இன்று காலை 5.30 மணிக்கு சென்னை கடற்கரையை ஒட்டி கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் ஈக்காட்டுதாங்கல், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம், தியாகராய நகர், பல்லாவரம், குரோம்பேட்டை, மயிலாப்பூர், பாரிமுனை, கிண்டி, ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது. கிழக்கு கடற்கரை சாலை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சென்ட்ரல், பாரிமுனை, திருவல்லிக்கேணி, அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே மயிலாப்பூரில் வி.எஸ்.வி., கோவில் தெருவில் மரம் சாய்ந்து மின்மாற்றியில் விழுந்தது. இதனையடுத்து மயிலாப்பூரின் சில பகுதிகளில் மின்சாரம் தடைபட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்களும், மாநகராட்சி பணியாளர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், மழை பாதிப்புகள் தொடர்பாக 1913 என்ற அவசர எண்ணை தொடர்பு கொண்டு சென்னை மக்கள் தகவல் தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி வெளி்யிட்டுள்ள அறிக்கையில் தேவையான முன்னெசசரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் ஒரு ஐ.ஏ.எஸ்.அதிகாரி பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற பம்பு செட்டுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், அரக்கோணம், நெல்லூரில் இருந்து பேரிடர் மீட்பு குழுவைச் சேர்ந்த 270 பேர் சென்னை வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு குழுவுக்கு 45 பேர் வீதம் மணப்பாக்கம், ஜாபர்கான் பேட்டை, வேளச்சேரி கோட்டூர்புரம், நந்தனம், மணலி உள்ளிட்ட 6 இடங்களில் படகுகளுடன் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அதிக மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. மேலும் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து தகவல் தெரிவிக்க அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அவசர உதவி எண்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27237424, 27237425, 27237107, 2742692 தொடர்பு கொள்ளலாம். 044-27222000 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி அறிவித்துள்ளார்.

Read more at://tamil.oneindia.com

கருத்துகள் இல்லை: