திங்கள், 16 மே, 2016

உஜ்ஜைனில் மகா கும்பமேளா: பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பங்கேற்றார்

மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் நகரின் அருகே இன்று நடைபெற்ற மகா கும்பமேளா விழாவில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பங்கேற்று விழா மலரை வெளியிட்டார். இந்தூர்: மத்தியப்பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் நகரின் அருகே இன்று நடைபெற்ற மகா கும்பமேளா விழாவில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா பங்கேற்று விழா மலரை வெளியிட்டார்.முன்னதாக, இருநாள் அரசுமுறை பயணமாக நேற்று இந்தியாவுக்கு வந்த மைத்ரிபாலா சிறிசேனா நேற்றிரவு பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்தார். அப்போது, அவருக்கு மோடி விருந்து அளித்தார்.
அப்போது, இந்தியா-இலங்கை இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சிறிசேனாவிடம் பிரதமர் மோடி, தமிழக மீனவர் பிரச்சனையை எழுப்பினார். அப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், இலங்கையில் நல்லிணக்க நடவடிக்கைகளை சிறிசேனா எடுத்து வருவதாக மோடி பாராட்டு தெரிவித்தார். இதன்மூலம், இலங்கையின் அனைத்து சமூகத்தினரும் சமஅந்தஸ்துடனும், கண்ணியமாகவும் வாழ முடியும் என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையில் இந்தியா நிறைவேற்றி வரும் பொருளாதார திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து பிரதமர் மோடியும், அதிபர் சிறிசேனாவும் ஆலோசனை நடத்தினர். இலங்கையின் வளர்ச்சி திட்டங்களுக்கு இந்தியா அளித்து வரும் உதவிக்கு சிறிசேனா நன்றி தெரிவித்துக்கொண்டார். இரு நாடுகளிடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை பெருக்குவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது பற்றியும் இருவரும் விவாதித்தனர்.

இதையடுத்து, இன்று பிற்பகல் மத்தியப் பிரதேசம் மாநகர தலைநகரான இந்தூருக்கு விமானம் மூலம்வந்த மைத்ரிபாலா சிறிசேனாவை பிரதமர் மோடி மலர்கொத்து அளித்து வரவேற்றார். உஜ்ஜைன் நகரின் அருகேயுள்ள நினோரா கிராமத்தில் இன்று நடைபெற்ற மகா கும்பமேளா நிறைவு விழாவை பிரதமர் மோடியுடன் மைத்ரிபாலா சிறிசேனா தனிமேடையில் அமர்ந்து கண்டுகளித்தார்.

அப்போது பக்தர்களிடையே பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இதைப்போன்ற மிகப்பெரிய கும்பமேளா விழாக்களை நடத்துவதன் மூலம் பெரும்விழாக்களை ஏற்பாடு செய்யும் திட்டமிடல் மற்றும் செயல்பாடு தொடர்பான நமது ஆற்றலை நாம் உலகுக்கு வெளிப்படுத்துகிறோம் என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நமது தேர்தல்களை பார்த்து இந்த உலகமே ஆச்சரியப்படுகிறது. இவ்வளவு பெரிய நாட்டில் இத்தனை கோடி வாக்காளர்கள் பங்கேற்கும் தேர்தல்களை நமது தேர்தல் கமிஷன் மிக திறமையாக நடத்திவருவதை கண்டு உலகமே வியந்து, திரும்பிப் பார்க்கிறது என அவர் தெரிவித்தார்.

ஆண்டுதோறும் இதுபோன்ற கும்பமேளா விழாக்களை நடத்துவதன் மூலம் மரங்களை வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும், பெண் குழந்தைகளுக்கு கல்வியறிவை வழங்க வேண்டிய முக்கியத்துவத்தையும் மக்களுக்கு உணர்த்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இதே விழாவில் பேசிய இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா, நான் இலங்கையின் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவுக்குதான் வந்தேன். அதன்பின்னர், சிலவாரங்களுக்கு பிறகு உங்கள் பிரதமர் எங்கள் நாட்டுக்கு வந்தார் என குறிப்பிட்டார்.

இன்றுமாலை, இங்குள்ள இலங்கை மகாபோதி சொசைட்டி சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்காரிகா தர்மபாலா சிலையை திறந்து வைக்கும் மைத்ரிபாலா சிறிசேனா இன்றிரவு கொழும்பு நகருக்கு புறப்பட்டு செல்கிறார்.  dailythanthi.com

கருத்துகள் இல்லை: