சனி, 21 மே, 2016

கலைஞர் : தொண்டர்கள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவேண்டாம்.

தி.மு.க., சட்டசபை தலைவராக, தி.மு.க., தலைவர் கருணாநிதியும், துணை தலைவராக பொருளாளர் ஸ்டாலினும், கொறடாவாக, முன்னாள் அமைச்சர் துரைமுருகனும், தேர்வு செய்யப்பட உள்ளனர். இதன் மூலம், சட்டசபையின் பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி கருணாநிதிக்கும், துணைத் தலைவர் பதவி ஸ்டாலினுக்கும் கிடைக்கும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போது, மூத்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், எதிர்க்கட்சி தலைவராக, நீங்கள் செயல்பட வேண்டும்' என, கருணாநிதியிடம் வலியுறுத்தினர். அதை, அவர் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். ஜெயலலிதா, முதல்வர் பதவி ஏற்கும், 23ம் தேதி, அறிவாலயத்தில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்த முடிவுசெய்யப்பட்டு உள்ளது.


சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக கருணாநிதி பொறுப்பேற்றால், அவர் சக்கர நாற்காலியுடன் வந்து செல்வதற்கு ஏற்ப, சட்டசபையில் இருக்கை வசதி செய்து கொடுக்க வேண்டிய கட்டாயம், ஆளுங்கட்சிக்கு ஏற்படும்.

கடந்த, 2006 தி.மு.க., ஆட்சியில், ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். சட்டசபையின் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்று, பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். அதே போல், கருணாநிதியும், இப்போது செயல்பட வேண்டும் என, கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.

தற்கொலை செய்ய
வேண்டாம்!* கருணாநிதி வேண்டுகோள்:'தி.மு.க., ஆளுங் கட்சியாக வர முடியாத காரணத்திற்காக, தொண்டர்கள் தற்கொலை செயலில் ஈடுபடக் கூடாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஈரோடு வடக்கு மாவட்டம், சுண்டக்காம்பாளையம் என்ற ஊரில், இளைஞர் அணி அமைப்பாளராக பணியாற்றிய சண்முகம், சட்டசபை தேர்தல் முடிவுகளை, 'டிவி'யில் பார்த்து, தி.மு.க., ஆளுங்கட்சியாக வர முடியாத நிலையை எண்ணி அதிர்ச்சிக்குள்ளானார்.

அவர் கடிதம் எழுதி வைத்து, தற்கொலை செய்து கொண்டார். சண்முகம் குடும்பத்தினர் அனைவருக்கும், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு மிகவும் சோகத்தை ஏற்படுத்தும், இது போன்ற நடவடிக்கையில் யாரும் இனியும் ஈடுபடக்கூடாது.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: