வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் ?......ம.ந.கூ அன் கோ.

மக்கள் நலக் கூட்டணிpwa-caption-1ருபது ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை அ.தி.மு.க.விலிருந்து துரத்தியபோது, அவர்களை உதிர்ந்த ரோமங்கள் எனத் திமிராக வருணித்தார் ஜெயலலிதா. அம்மாவால் கைவிடப்பட்டோர் சங்கம் என்று அழைப்பதற்குத் தகுதியான, விஜயகாந்த், வைகோ, முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அந்த மாதிரியாக ஜெயலலிதாவால் வருணிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம், வரவிருக்கும் தேர்தலில் இந்த மூன்றாவது அணி தன்னைக் காப்பாற்றுவதற்குப் பயன்படும் என்ற கணக்குதான். மக்கள் நலக் கூட்டணி : ஜெயாவால் கைவிடப்பட்ட அட்டை கத்திகள்! “இத்தனை காலம் தி.மு.க.,- அ.தி.மு.க., என்று மாறிமாறிக் கூட்டணி வைத்து விட்டு, இரண்டு பேரும் ஊழல் கட்சிகள் என்று இப்போதுதான் கண்டுபிடித்தது போலச் சொல்கிறீர்களே, இது அடுக்குமா?” என்ற தோரணையில் பத்திரிகையாளர்கள் பலரும் கேட்கவே, அவர்களை வாயடைக்கச் செய்யும் விதத்தில் ஒரு பதிலை எடுத்துவிட்டார் மார்க்சிஸ்டு கட்சியின் செயலர் ராமகிருஷ்ணன். இரண்டு கட்சிகளுடனும் மாறிமாறி கூட்டணி வைத்து அவர்களை எப்படியாவது திருத்த முயன்றார்களாம்.
ஆனால், அவர்கள் திருந்தவில்லையாம். இனி அவர்களைத் திருத்த முடியாது என்ற முடிவுக்கு வந்து விட்ட காரணத்தினால்தான் மூன்றாவது அணியை அமைத்திருக்கிறார்களாம். இந்தப் பதிலைக் கேட்ட பின்னரும் சிரிக்காமல், முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு, அடுத்த கேள்வியைக் கேட்ட பத்திரிகையாளர்களுக்கு தனியே ஏதாவது விருதுதான் கொடுக்க வேண்டும்.
இடது, வலது கம்யூனிஸ்டு கட்சி களும், வைகோவும், திருமாவளவனும் தமிழகத்தில் ஊழலை ஒழிப்பதற்கும், தமிழக மக்களுக்கு நல்லாட்சியைத் தருவதற்காகவும்தான் நாளெல்லாம் சிந்தித்து, அரசியல் நிலைமைகளை அலசி ஆராய்ந்து, அதன் அடிப்படையில் மக்கள் நலக் கூட்டியக்கத்தையும், அதன் பிறகு மக்கள் நலக் கூட்டணியையும் அமைத்திருப்பதாகக் கூறுவது, நாக்கு அழுகிவிடக் கூடிய பொய். ஜெயாவால் கூட்டணியிலிருந்து விரட்டப்பட்ட வைகோவும் போலி கம்யூனிஸ்டுகளும், அ.தி.மு.க. கூட்டணியில் துண்டு போடும் கனவோடு தி.மு.க.விலிருந்து கழண்டு வந்த பிறகு திரிசங்கு நிலையில் நின்ற திருமாவும், தாங்கள் அடைக்கலம் புகுந்த மடத்துக்குச் சூட்டிய பெயரல்லவோ மக்கள் நலக் கூட்டணி! உண்மையைச் சொன்னால், இது ஜெயாவால் கைவிடப்பட்டவர்களின் சங்கம்!
மக்கள் நலக்கூட்டணி மாநாடு
மக்கள் நலக் கூட்டணி மதுரை நகரில் நடத்திய மாற்று அரசியல் எழுச்சி மாநாடு : மாற்றா, ஏமாற்றா?
தமிழகத்தில் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் நடந்த ஊழல், கொள்ளைகளில் அம்மா நடத்திய / நடத்திவரும் கொள்ளைதான் வரலாறு காணாதது. அப்படி ஊழலில் ஒரு புரட்சியே செய்திருக்கும் ஜெயாவோடு 1999 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2001 மற்றும் 2011-களில் நடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களிலும் கூட்டணிக் கட்டிக் கொண்டவர்கள்தான் போலி கம்யூனிஸ்டுகள். 2006 தொடங்கி 2011 வரை ஜெயாவோடு கைகோர்த்திருந்தவர்தான் வைகோ.
2001-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்பொழுது, ஜெயா மீது சொத்துக்குவிப்பு வழக்கு, டான்சி நில ஊழல் வழக்கு உள்ளிட்டு நாற்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் இருந்தன. பிளஸண்ட் ஸ்டே விடுதி வழக்கில் அவர் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்திருந்தார். தான் ஒரு கிரிமினல் வழக்கில் தண்டிக்கப்பட்ட விவரத்தை மறைத்து, அத்தேர்தலில் போட்டியிட முயற்சி செய்தார், ஜெயா. அது முடியாமல் போகவே, தான் பழிவாங்கப்படுவதாகக் காட்டுவதற்காகவே, சட்டத்தை மீறி நான்கு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதி களுக்கு மேல் போட்டியிடக் கூடாது என்ற விதியைக் காட்டி, ஜெயாவின் அனைத்து வேட்பு மனுக்களையும் தேர்தல் கமிசன் ரத்து செய்தது. உடனே, தன்னைத் தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்க தி.மு.க. சதி செய்வதாக அபாண்டமான குற்றச்சாட்டைச் சுமத்தி, பொய்ப் பிரச்சாரத்தை நடத்தினார்.
ஜெயா மீதான ஊழல் வழக்குகளையும், ஊழல் வழக்கில் ஜெயா தண்டிக்கப்பட்டதையும், வேட்பு மனுத்தாக்கலில் அவர் நடத்திய கிரிமினல் சதிகளையும் நியாயப்படுத்திக் கொண்டு, புரட்சித் தலைவியின் ஆசி பெற்ற கம்யூனிஸ்டு வேட்பாளர்களுக்கு ஓட்டுப்போடும்படி கேட்டுத் தமிழகத்தைச் சுற்றி வந்தவர்கள்தான் இன்று ஊழல் ஒழிப்பு அவதாரம் எடுத்திருக்கும் வலது, இடதுகள்.
2001 தேர்தலில் ஆட்சியைப் பிடித்த ஜெயா, ஆர்.எஸ்.எஸ். கும்பலே அசந்துபோகும்படி மதமாற்றத் தடைச் சட்டத்தையும், கிடா வெட்டும் தடைச் சட்டத்தையும் கொண்டு வந்து நடப்பது பார்ப்பன மதவெறி ஆட்சி எனக் காட்டினார். இரண்டு இலட்சம் அரசு ஊழியர்களைச் சிறைக்குள் தள்ளி, அவர்களின் போராட்டத்தை ஒடுக்கி, நானொரு பாப்பாத்தி மட்டுமல்ல, பாசிஸ்டும்கூட என்பதைப் போலி கம்யூனிஸ்டுகளும் புரிந்துகொள்ளும்படி காட்டினார்.
2001 சட்டசபைத் தேர்தலில் ஒரு பார்ப்பன பாசிஸ்டை, ஊழல் பேர்வழியை ஆதரித்து காவடி எடுத்ததற்கு எவ்விதப் பொறுப்பும் ஏற்காத இந்த உத்தமர்கள், 2006 தேர்தலில் மதவாத அபாயம் என்று சொல்லி தி.மு.க.வோடு கூட்டணி கட்டிக் கொண்டனர். 2011 சட்டசபைத் தேர்தலில் ஊழல் எதிர்ப்பு என்ற போர்வையில் தி.மு.க.வைக் கைவிட்டு, மீண்டும் அ.தி.மு.க.வோடு கூட்டணி கட்டிக் கொண்டனர்.
2011 தமிழகச் சட்டமன்றத் தேர்தல் சமயத்தில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கைப் பணத்தாலும், தனது பார்ப்பன சாதி செல்வாக்காலும் ஊத்தி மூடுவதற்கு எல்லாவிதமான கிரிமினல் சதித்தனங்களையும் ஜெயா செய்துவந்தார். அத்தேர்தலில் மார்க்சிஸ்டுகளுக்கு 12 தொகுதிகளும், வலது கம்யூனிஸ்டு கட்சிக்கு 10 தொகுதிகளும் பம்பர் பரிசாகக் கிடைத்ததால், இந்த ஊழல் எதிர்ப்பு போராளிகள் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி மூச்சே விடவில்லை.
pwa-leaders-past-record2011 சட்டசபைத் தேர்தலின்போது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சேர்த்துக் கொள்ளப்பட்டவுடனேயே, ம.தி.மு.க.வைக் கூட்டணியிலிருந்து கழற்றிவிடத் தயாரானார் ஜெயா. அத்தேர்தலில் வைகோ 35 தொகுதிகளைக் கேட்க, ஜெயா-சசி கும்பலோ வெறும் 6 இடங்கள் மட்டுமே தரமுடியும் என முகத்தில் அடித்தாற் போலக் கூறிவிட்டது. இன்னொருபுறம், கடைசி நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்த தே.மு.தி.க.விற்கு 41 இடங்களும், போலி கம்யூனிஸ்டுகளுக்கு 22 தொகுதிகளும் ஒதுக்கி, வைகோவின் தலையில் குட்டு வைத்தார், ஜெயா. 2006 சட்டமன்றத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தல் என ஐந்து வருடங்களாக ஜெயாவிற்குக் கூஜா தூக்கி வந்த வைகோ, மதிப்பிழந்து, அவமானப்படுத்தப்பட்டு அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து துரத்தப்பட்டார். வேறு போக்கிடம் இல்லாத நிலையில், அச்சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார், வைகோ.
வைகோவைக் கழற்றி விட்டு போயஸ் தோட்டத்தில் ஒண்டிய தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் கேவலமான முறையில் அசிங்கப்படுத்தப்பட்டனர். கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதிகளை ஒதுக்குவது தொடர்பாக உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னரே, 160 தொகுதிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலைத் தன்னிச்சையாக வெளியிட்டு இந்தக் கட்சிகளைப் பதற வைத்தார், ஜெயா. அவரது இந்த அதிரடியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் அசடு வழிந்த சி.பி.ஐ., சி.பி.எம்., கட்சிகள், விஜயகாந்தின் கல்யாண மண்டபத்திற்கு ஓடினர். மானம், மரியாதையெல்லாம் பார்த்தால் நாற்காலி கிடைக்காது என்று தெளிந்து, மீண்டும் போயஸ் தோட்டத்தில் சரணடைந்து உடன்பாடு கண்டனர்.
pwa-caption-2போயஸ் தோட்டத்திலிருந்து விரட்டப்பட்டதற்கும், மீண்டும் போயஸ் தோட்டத்தின் கதவு திறக்கப்பட்டதற்கும் இடைப்பட்ட காலத்தில் விஜயகாந்த் கல்யாண மண்டபத்திற்குப் பரிதாபத்துக்குரிய வைகோவை வரவழைத்தார்கள் இடது, வலதுகள். ஊழலுக்கு எதிரான மக்கள் நலக்கூட்டணி உருப்பெற்றுக் கொண்டிருந்த அந்தச் சூழலில், போயஸ் தோட்டத்திலிருந்து அழைப்பு வரவே, வைகோவை அங்கேயே கழற்றி விட்டுவிட்டு, வலது, இடதுகளும் விஜயகாந்தும் போயஸ் தோட்டத்துக்கு ஓடினர். போயஸ் தோட்டத்திலிருந்து மட்டும் அந்த அழைப்பு வந்திருக்கவில்லை என்றால், வரலாற்று சிறப்பு மிக்க இந்த ஊழல் ஒழிப்பு மக்கள் நலக் கூட்டணி அன்றே உருவாகியிருக்கும் என்பதை நாம் மறுக்கவியலாது. அன்று அந்தக் கூட்டணி உருவாகாமல் தடுத்ததில் அம்மாவின் விசுவாசி தா.பா.வின் பங்கு அளப்பரியது.
2011 சட்டசபைத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அடைந்தார் விஜயகாந்த்; போலி கம்யூனிஸ்டு கட்சிகளும் போட்டியிட்ட 22 தொகுதிகளில் 19-இல் வெற்றி பெற்றனர். இந்த வெற்றிக் கூட்டணி தொடரும் என இவர்கள் கனவு கண்டு கொண்டிருந்த வேளையில் தேர்தலோடு கூட்டணி முடிவுக்கு வந்துவிட்டதாக அறிவித்தார், ஜெயா. ஆனாலும், தே.மு.தி.க., சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகளுக்கு அது உறைக்கவில்லை. அக்கட்சிகளுக்கு உணர்த்தும் வாய்ப்பை உள்ளாட்சி தேர்தல் ஜெயாவிற்கு வழங்கியது.
நரேந்திர மோடி - ஜெயா
நரேந்திர மோடி குஜராத் முதல்வராகப் பதவியேற்கும் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவிக்கும் ஜெயா : இயற்கைக் கூட்டாளிகள் (கோப்புப் படம்)
தே.மு.தி.க., தங்களுக்கு 4 மேயர் தொகுதியும், உள்ளாட்சிகளில் 40 சதவீத இடங்களும் ஒதுக்க வேண்டும் எனக் கனவு கண்டுகொண்டிருந்த வேளையில், அ.தி.மு.க., 10 மாநகராட்சிகளுக்கான மேயர் வேட்பாளர்களை அறிவித்து, தே.மு.தி.க.வின் கனவுக்கு முடிவு கட்டியது. இதனையடுத்து, 52 நகராட்சிகளுக்கான தலைவர் வேட்பாளர்களும் அ.தி.மு.க.வால் அறிவிக்கப்பட்டனர். இப்படிக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளாத குறையாக விஜய்காந்தின் தே.மு.தி.க. வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டது.
இதன் பிறகும்கூட சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் அம்மாவின் கடைக்கண் பார்வைக்காகக் காத்திருந்தன. தமிழகத்திலுள்ள 148 நகராட்சிகளில் 52 நகராட்சிகளுக்குத்தானே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவற்றுக்கு அறிவிக்கவில்லையாதலால், நமக்கு நிச்சயமாக சில எலும்புத் துண்டுகள் கிடைக்கும் என நம்பிக்கையோடு காத்திருந்தனர் போலி கம்யூனிஸ்டுகள். ஆனால், ஜெயாவோ அடுத்தடுத்து வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டு, போலி கம்யூனிஸ்டுகளின் மூக்கை அறுத்தார்.
pwa-caption-3அடுத்து வந்தது நாடாளுமன்ற மேலவைத் தேர்தல். தமிழகச் சட்டமன்ற உறுப்பினர்களின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் ஆறு உறுப்பினர்களுள் தனக்கு ஒரு இடம் கிடைக்கும் என எண்ணியிருந்தது, வலது கம்யூனிஸ்டு கட்சி. தங்களுடைய மாநிலங்களவை வேட்பாளருக்கு ஜெயலலிதாவிடம் ஆதரவு கோரி டில்லியிலிருந்து சென்னைக்குக் காவடி எடுத்த வலது கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்களைக் காக்க வைத்து, பார்க்க மறுத்து, திருப்பி அனுப்பினார் ஜெயலலிதா. இதன் பிறகு டெல்லி சென்றிருந்த ஜெயாவைச் சந்தித்து ஆதரவு கேட்பதற்கு வலதுகளின் தேசியத் தலைவர்களான பரதனும் சுதாகர் ரெட்டியும் காவடி எடுத்தனர். தன்னை அவர்கள் சந்திப்பதற்கு முன்னரே, மேலவை தேர்தலுக்கான ஐந்து அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயரையும் அறிவித்தார் ஜெயலலிதா.
அறிவிக்கப்பட்ட ஐந்து வேட்பாளர்களுள் சரவணபெருமாள் ஒரு கிரிமினலென்று அம்பலமானதாலும், மாற்றாக ஒரு வேட்பாளரை அறிவித்து, அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்யுமளவுக்கு வாக்குகளைத் திரட்ட முடியாது என்ற காரணத்தினாலும், பிச்சைக்காரனுக்கு மிச்சம் மீதியை எறிவதைப் போல ஒரு ராஜ்யசபா இடத்தைப் போலிகளுக்கு விட்டெறிந்தார் ஜெயலலிதா. தன்னுடைய ஆசிபெற்ற தா.பாண்டியனுக்குப் பதிலாக டி.ராஜாவை நிறுத்தியதுதான் வலதுகளுக்கு கிடைத்த இந்த சிறப்பு அவமதிப்புக்கு காரணம் என்று பத்திரிகைகள் எழுதின. ஜெயலலதாவின் அவமதிப்புகளை இயல்பாக எடுத்துக் கொள்ளும் பக்குவத்தில் அ.தி.மு.க. அடிமைகளை விஞ்சியவர்களான போலிகள் இதற்கெல்லாம் அசரவில்லை.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயாவை நம்பியிருந்த போலிகள் மீண்டும் மூக்கறுபட்டனர். இத்தேர்தலையொட்டி சி.பி.எம். கட்சியின் அப்போதைய பொதுச் செயலர் பிரகாஷ் காரத்தும், சி.பி.ஐ. கட்சியின் முதுபெரும் தலைவர் ஏ.பி.பரதனும் போயசு தோட்டத்திற்கே வந்து சமூகத்தைப் பார்த்துவிட்டுச் சென்றனர். அதன் பிறகு அக்கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் போயசு தோட்டத்திற்குப் படையெடுத்தனர். போலி கம்யூனிஸ்டு கட்சிகள் இரண்டும் தலைக்கு நான்கு தொகுதிகளைக் கேட்க, அதற்கு ஆளுக்கு ஒரு தொகுதி மட்டுமே தர முடியும் என அ.தி.மு.க. சொன்னதாகப் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருந்த வேளையில், ஜெயா நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் அ.தி.மு.க. வேட்பாளர்களை அறிவித்து இடது, வலதுகளின் ஆசையை நிராசையாக்கினார்.
pwa-caption-4இதற்குப் பிறகும் அம்மாவின் பாதங்களை இவர்கள் விடுவதாக இல்லை. இந்தத் தேர்தலில் மட்டும்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை எனக் கூறி, 2016 சட்டசபை தேர்தலுக்கு அப்பொழுதே துண்டைப் போட்டார், தா.பாண்டியன். ஒருவரால் (ஜெயாவால்) நெருக்கடிக்கு உள்ளாகிவிட்ட நிலையில், அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதற்காக மற்றொருவரிடம் (தி.மு.க.) கைகோர்ப்பது சரியல்ல என்று விளக்கமளித்து, நாங்கள் இன்னமும் அம்மாவின் விசுவாசிகள்தான் என்பதை உறுதிபடுத்தினார் வலது கம்யூனிஸ்டு துணைச் செயலாளர் மகேந்திரன்.
தாழ்ந்து தாழ்ந்து நாயினும் தாழ்ந்து என்பது போல, கடந்த ஐந்தாண்டுகளில் பதவிக்காக ஜெயாவிடம் காலடியில் சுருண்டு கிடந்தவர்கள், இன்று ஊழலை ஒழிப்பதற்காகவும் நல்லாட்சியைத் தருவதற்காகவும்தான் மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கியதாகத் துணிந்து கதையளக்கிறார்கள். இடையில், தி.மு.க. பக்கம் சாயலாமா என்று சி.பி.எம். தடுமாறிக் கொண்டிருந்த நிலையிலும் சி.பி.ஐ.யும், தா.பா.வும் ஜெயா விசுவாசத்தில் உறுதியாக இருந்தனர். கருணாநிதி மீதான உரிமை மீறல் பிரச்சினையில் சி.பி.எம்.கூட சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தபோது, சி.பி.ஐ. கட்சி உறுப்பினர்கள் அதில் கலந்துகொள்ளாமல் தங்களின் ஜெயா விசுவாசத்தை வெளிக்காட்டியது இதனை உறுதிப்படுத்துகிறது.
ஜெயாவோடு கூட்டணி வைத்துக்கொள்ள இவர்கள் தயாராக இருந்தாலும், அதனை ஜெயா விரும்பவில்லை என்பதே உண்மை. ஓட்டுக்கட்சிகளோடு கூட்டணி வைப்பதைவிடத் தேர்தல் கமிசன், அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகியவற்றோடு கூட்டணி வைத்துக் கொள்வதுதான் ஜெயாவின் புதிய கூட்டணி ஃபார்முலா. கூட்டணிக் கட்சிகளுக்குத் தொகுதி ஒதுக்கி, செலவுக்குப் பணமும் கொடுத்து வெற்றி பெற வைப்பதைவிட, பணப் பட்டுவாடா, போலி வாக்காளர்கள் என்ற உத்திரவாதமான வழிமுறைகள் மூலம் அ.தி.மு.க. வேட்பாளர்களை 234 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்து வரலாறு படைக்கலாம் எனக் கணக்குப் போடுகிறார், அ.தி.மு.க. தலைவி.
மதவாத எதிர்ப்பு, ஊழல் எதிர்ப்பு என்ற இரண்டு மயக்கு வார்த்தைகளை மாறிமாறிப் போட்டு, தமது சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை நியாயப்படுத்துவதைப் போலி கம்யூனிஸ்டுகள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். தங்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என்பதையே மாபெரும் தகுதியாக இவர்கள் காட்டிக் கொள்கின்றனர்.
ஆனால், இவர்களால் ஊழல் குற்றம் சாட்டப்படும் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரசு உள்ளிட்ட கட்சிகளின் அருமை பெருமைகளை எடுத்துச் சொல்லி அவர்களுக்கு காவடி எடுத்து, பிரதிபலனாக பதவி எலும்புத் துண்டுகளைப் பெற்றவர்கள் இவர்கள். தான் தனிப்பட்ட முறையில் கற்பு நெறி தவறாதவன் என்று கூறிக்கொள்ளும் ஒரு தரகனுக்கும், இவர்களுக்கும் அதிக வேறுபாடில்லை. விவகாரம் அத்தோடு முடிந்தால் பரவாயில்லை. தாங்கள் நல்லொழுக்கத்தை நிலைநாட்டப் போவதாக இவர்கள் கூறிக்கொள்வதுதான் வேடிக்கை!
அ.தி.மு.க., தி.மு.க.-வின் ஊழலுக்கு இவர்கள் துணை நின்றவர்கள் என்பது மட்டுமல்ல, அதிகார வர்க்கத்துக்கும் போலீசுக்கும் தரகு வேலை செய்வதையே அன்றாடக் கட்சிப்பணியாக கொண்டிருப்பவர்கள்தான் இக்கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள். இவர்கள் தலைமையில் அரசு ஊழியர்கள் மத்தியிலும் மற்றும் வங்கி, காப்பீடு, பொதுத்துறை நிறுவனங்களிலும் செயல்பட்டு வரும் தொழிற்சங்கங்கள், ஊழல் செய்து மாட்டிக்கொண்டுள்ள அதிகாரிகளை, ஊழியர்களைக் காப்பாற்றும் அயோக்கியத்தனத்தைத் தொழிற்சங்கக் கடமையாகவே மாற்றியிருக்கின்றன. இவர்களது ஊழல் ஒழிப்பு நாடகத்தை அம்பலப்படுத்த எண்ணுபவர்கள், இலஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை சங்கத்தை விட்டு நீக்கத்தயாரா? என்ற ஒரு கேள்வியை எழுப்புவதே போதுமானது.
தி.மு.க.வோடு கூட்டணி சேராமல், அக்கட்சியைத் தள்ளி வைத்ததற்கு 2ஜி ஊழலைக் காரணம் காட்டி வரும் யோக்கியர்களான போலி கம்யூனிஸ்டுகள், மேற்கு வங்கத்தில் அந்த ஊழலுக்கு அடிக்கொள்ளியாக இருந்த காங்கிரசோடு தொகுதிப் பங்கீடு செய்து கொள்ளவும், அதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளைத் தீர்த்துக் கொள்ளவும் தயாராகி வருகின்றனர். இந்த இரட்டை அளவுகோல் குறித்து கேள்வி எழுந்தபோது, மேற்கு வங்க நிலைமை வேறு, தமிழக நிலைமை வேறு எனக் கூறி சமாளித்து வருகின்றனர். ஊழல் ஒரு பிரச்சினையே அல்ல எனத் தனது மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கும் சி.பி.எம். கட்சியிடம் அரசியல் நாணயத்தையும் அப்பழுக்கற்ற தன்மையையும் எதிர்பார்ப்பதற்கும் ஜெயா திருந்திவிடுவார் என எதிர்பார்ப்பதற்கும் அதிக வேறுபாடு இல்லை.
தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.- இயற்கையான கூட்டாளி ஜெயாவின் அ.தி.மு.க.தான். பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதை வெளிப்படையாக ஆதரித்துப் பேசியவர் ஜெயா. குஜராத்தில் முசுலீம் படுகொலைகளை நடத்திய மோடியை, அந்தச் சமயத்தில் பெரும்பாலான ஓட்டுக்கட்சிகள் புறக்கணித்தபோது, மோடியோடு நெருக்கமான நட்பு கொண்டு, அதனை இன்றுவரை தொடர்ந்து வருபவர் ஜெயா. அது மட்டுமின்றி, ஜெயா தனது இயல்பிலேயே பார்ப்பன-பாசிஸ்டு. இப்படிப்பட்ட இந்து மதவெறி சக்தியோடு கூட்டணி வைத்துக்கொண்டு, நட்பு பாராட்டிக்கொண்டு மதவாதத்தை எதிர்ப்பதாகப் போலி கம்யூனிஸ்டுகள் கூறுவது எத்தகையதொரு மோசடி, கபடத்தனம்!
மக்கள் நலக் கூட்டணியில் தருமராக உருவகப்படுத்தப்படும் விஜயகாந்தும், அர்ச்சுனனாகக் காட்டப்படும் வைகோவும் இந்து மதவெறியர்களின் பாதந்தாங்கிகள். குஜராத் முசுலீம் படுகொலையை நடத்திய மோடியை ஆர்.எஸ்.எஸ்.-க்கு அடுத்து, வெளிப்படையாகவே, அதுவும் நாடாளுமன்றத்திலேயே ஆதரித்துப் பேசியவர் வைகோ. 2009 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை ஆட்சியில் அமர வைப்பதற்கு ஈழத் தமிழ் மக்களின் உயிரைப் பகடைக்காயாகப் பயன் படுத்தியவர். மீண்டும் 2014-ல் மோடியைப் பதவியில் அமர்த்த வேலை செய்து விட்டு, அவர் ஈழத் தமிழின விரோதி என்ற உண்மையை அவர் பதவியில் அமர்ந்த பின்னர் கண்டுபிடித்தவர்.
விஜயகாந்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், அவர் ஒரு ஆம்பிளை ஜெயா. அ.தி.மு.க.வின் ஜெராக்ஸ் பிரதிதான் தே.மு.தி.க. ஜெயாவின் இடத்தில் விஜயகாந்த், சசியின் இடத்தில் பிரேமலதா, மன்னார்குடி குடும்பத்தின் இடத்தில் பிரேமலதாவின் தம்பி சுதீஷ், அவரது அக்கா கணவர் ராமச்சந்திரன்.
வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு முன்னரே, மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்கு மந்திரி பதவி வழங்கி விட்டார் மச்சான் சுதீஷ். வளர்ப்பு மகனாகத் தத்து எடுக்கப்பட இருப்பது யார் என்பதுதான் விடை தெரியாத புதிராக இருக்கிறது.
– திப்பு  வினவு.கம

கருத்துகள் இல்லை: