புதன், 20 ஏப்ரல், 2016

அறிவு யுகத்தை ஆளப்போவது இந்தியா தான்

காஷ்மீர் விழாவில் மோடி திட்டவட்டம்.   கட்ரா,: ''அறிவு யுகமான, 21ம் நுாற்றாண்டை, 80 கோடி இளைஞர்களுடன் ஆளப்போவது இந்தியா தான். ஒவ்வொரு இளைஞனின் கனவும், நாட்டின் வளர்ச்சி வரலாறாக முடியும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், கட்ராவில் உள்ள ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி பல்கலையின், ஐந்தாவது பட்டமளிப்பு விழா,நடந்தது. இதில், பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை:
இந்தியா, 21ம் நுாற்றாண்டை வழிநடத்திச்
செல்லும். ஏனென்றால், இந்த நுாற்றாண்டுக்கு தேவையான அறிவு சக்தி இந்தியாவிடம் உள்ளது.


80 கோடி இளைஞர் சக்தியைப் பெற்றிருக்கிறது இந்தியா. இந்த இளைஞர் சக்தியின் மூலம், நம் நாடுபுது உச்சத்தை தொடலாம். இந்த தருணத்தில் மாணவர்கள், தங்கள் பெற்றோரை நினைத்து பார்க்க வேண்டும்; உங்களுக்காக அவர்கள், தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்துள்ளனர். மற்ற பல்கலைகள், வரி செலுத்துவோரின் பணத்தில் கட்டப்பட்டவை.

ஆனால், இந்த பல்கலை, வைஷ்ணவ தேவி கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும், லட்சக் கணக்கான ஏழை பக்தர்களின் பணத்தால் கட்டப்பட்டது. அதனால், ஏழைகளுக்கு உதவி செய்யஉறுதி ஏற்றுக் கொள்ளுங்கள்.

இந்த பல்கலைக்கு அடிக்கல் நாட்டியவர், ஏவுகணை மனிதர் என அறியப்பட்ட, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம். ஒரு காலத்தில் அவர், பத்திரிகைகள் விற்பனை செய்தவர். பட்டமளிப்பு விழாவுக்கு, ஆயிரம் ஆண்டு வரலாறு உள்ளது. இது, ராமர் காலமான, 'திரேதாயுகம்' முதல் உள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

மருத்துவமனை துவக்கம்:ஜம்மு - காஷ்மீரின் கட்ராவில் புதிதாக கட்டப்பட்ட, ஸ்ரீ மாதா வைஷ்ணவதேவி நாராயண சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை, பிரதமர் நரேந்திர மோடி, நாட்டுக்கு அர்ப்பணித்தார். dinamalar.com

கருத்துகள் இல்லை: