சனி, 2 ஏப்ரல், 2016

2ஜி வழக்கு...ஆர்.ராசா.....ரோஹித் வேமுலா தற்கொலை....JNU.கண்ஹையா குமார் தேசதுரோக சேறு....எல்லாம் ஒன்றுதான்


தவறான கணக்குகளால் சிலர் தற்காலிகமாகத் தப்பித்தனர் - அது பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு. தவறான கணக்குகளால் சிலர் சிறை சென்றனர் - அது 2ஜி வழக்கு! தேவை ஏற்படும் போதெல்லாம் அல்லது தேர்தல் வரும் போதெல்லாம் சிலர் 2ஜி வழக்கு பற்றிப் பேசுவார்கள்.
இப்போது அந்த 'சீசன்' தொடங்கியுள்ளது. 2ஜி வழக்கு பற்றிப் பேசுகின்றவர்கள் மிகுதி. அந்த வழக்கு பற்றிய உண்மைகள் அறிந்தவர்கள் சிலர், மிக மிகச் சிலர். 2ஜி பற்றி நெடு நேரம் பேசுகின்றவர்களிடம் ஒரே ஒரு சின்னக் கேள்வியை முன்வையுங்கள். அவர்களின் அறியாமையை நாம் அறிந்து கொள்ளலாம். வேறொன்றுமில்லை, 1.76 லட்சம் கோடி என்று தொடர்ந்து இந்த வழக்கில் ஒரு தொகை பேசப்படுகிறதே அது எப்படி வந்தது என்று மட்டும் கேளுங்கள்.


அடுத்தததாக, அந்தத் தொகை அந்த வழக்கின் குற்றப் பத்திரிகையில் எங்கும் காணப்பட வில்லையே ஏன் என்று கேளுங்கள். இந்த இரண்டு கேள்விகளுக்கும் விடை தெரியாதவர்கள்தாம் 2ஜி பற்றி நிறையப் பேசிக் கொண்டுள்ளனர். பணிவோடு ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன், 2ஜி குறித்துக் காரசாரமாக மேடைகளில் பேசும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சிலருக்கே கூட இந்த விளக்கம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சரி, அந்த உண்மைகளைச் சின்னக் கணக்குகளின் மூலம் நாம் பார்த்து விடுவோம். ஆ. ராசா அவர்கள் மத்திய அமைச்சராக இருந்தபோது, இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் விற்பனைக்குக் கொடுக்கப்பட்டன. இன்றிருப்பது போல் அன்று பலரிடம் கைத் தொலைபேசி இல்லை. எனவே 52.75 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றைகள் மட்டுமே விலை போயின. ஒரு மெகா ஹெட்ஸ் 276 கோடிக்குப் போயிற்று. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த வருமானம் 14,559 கோடி. தலைமைத் தணிக்கைக் கணக்காளராக அன்று இருந்த வினோத் ராய் கற்பனையில் ஒரு கணக்குப் போட்டார்.

அவர் 2008 முதல் 2013 வரை அப்பதவியில் இருந்தார். 'முதலில் வருபவருக்கு முதலில்' என்று இல்லாமல் அலைக்கற்றைகளை ஏலத்துக்கு விட்டிருந்தால் ஒரு மெகா ஹெட்ஸ் 3350 கோடிக்கு விற்பனையாகி இருக்கும் என்பது அவர் கணக்கு. அது அவருடைய கற்பனைக் கணக்கு. அதன்படி பார்த்தால், 1,76,712 கோடி ரூபாய் வருமானம் வந்திருக்கும் என்றாகிறது. போனால் போகிறது என்று 712 கோடியை விட்டுவிட்டு ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி என்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டுள்ளனர். இப்படித்தான் அந்த 1.76 என்னும் தொகை வந்தது.

இங்கும் கூட இரண்டு செய்திகள் கவனிக்கப்பட வேண்டியவை. வினோத் ராய் கணக்குப் படியும் அது ஊழல் அன்று, அரசுக்கான இழப்புத் தொகை. அவ்வளவே. இரண்டாவது, 1.76 இல் வரப்பெற்ற 14ஆயிரம் கோடியைக் கழிக்க வேண்டும் இல்லையா? அதனைக் கழித்துவிட்டு 1.62 லட்சம் கோடி என்றாவது சொல்லியிருக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஆ. ராசா, 2011 பிப்ரவரி 2 ஆம் நாள் கைது செய்யப்பாட்டார். அதாவது, தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு! 2011 ஏப்ரல் 2 ஆம் தேதி குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1.76 லட்சம் கோடி என்ற தொகை எங்கும் குறிக்கப்படவில்லை. தணிக்கையாளரின் கணக்கை சி.பி.அய் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் ஒரு கணக்குப் போட்டு 32 ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றனர்.

 ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் 2ஜி மற்றும் 3ஜி அலைக்கற்றைகள், அன்று தணிக்கையாளர் கூறியது போல் ஏலத்துக்கே விடப்பட்டன. 2008ஆம் ஆண்டே ஒரு மெகா ஹெட்ஸ் 3350கோடிக்கு விற்றிருக்க வேண்டுமென்றால்,6 ஆண்டுகளுக்குப் பின் எவ்வளவு கோடி ரூபாய் கூடுதலாக விற்பனை ஆகியிருக்க வேண்டும்? ஆனால் 340.2 மெகா ஹெட்ஸ் அலைக்கற்றை ஒரு லட்சத்து ஓராயிரம் கோடி ரூபாய்க்குத்தான் ஏலம் போனது.

அதாவது ஒரு மெகா ஹெட்ஸ் 297 கோடி ரூபாய்.அவ்வளவுதான். ஏலத்துக்கு விட்டும், 6 ஆண்டுகளுக்குப் பின் ஒரு மெகா ஹெட்ஸ் 21 கோடி ரூபாய்தான் கூடுதல் விலைக்குப் போயுள்ளது. வினோத் ராய் கணக்குப்படி 3350 கோடிக்கே விற்பனை ஆகியிருந்தால் கூட, 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வந்திருக்க வேண்டும் ஆனால் வந்ததோ வெறும் ஒரு லட்சத்து ஓர் ஆயிரம் கோடிதான்.

அப்படியானால் இப்போது 10 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று கூறலாமா?மோடி உட்பட எல்லோரையும் கைது செய்யலாமா?

இந்திய அரசமைப்புச் சட்டம் 148(4) விதியின்படி தலைமைத் தணிக்கைக் கணக்காளர் (CAG) போன்ற மிக உயர்ந்த பதவியில் இருந்தவர்கள் ஓய்வு பெற்றபின் வேறு அரசு பதவிகளில் அமர்த்தப்படக் கூடாது.

ஆனால் இப்போது ஓய்வு பெற்றபின், வினோத் ராய், இன்னொரு பெரிய பொறுப்பில் (UN panel of external auditors and honorary advisor to the railways) அமர்த்தப்பட்டுள்ளார். புரிய வேண்டிய கணக்குகள் இப்போது புரிந்திருக்கும்! Posted by சுப.வீரபாண்டியன் a
 இந்த வினோத் ராயிற்கு பதவி மட்டுமல்ல பத்மஸ்ரீ விருதும் கொடுக்கப்பட்டது!!!.... அப்படி என்ன செய்து கிழித்தார்? நேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு இந்த வழக்கை சிபிஐ கையிலடுப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டதென்பது வெளிப்படை.

கருத்துகள் இல்லை: