செவ்வாய், 29 மார்ச், 2016

தினமலர்:தேர்தல் பந்தயத்தில் முந்தும் குதிரை எது?

தேர்தல் களத்தில், ஐந்து அணிகள் மோதுவது உறுதியாகி உள்ள நிலையில், அதில் வெற்றிக் கோட்டை நோக்கி முந்திச் செல்லும் அணி, எதுவாக இருக்கும் என்ற விவாதம் கிளம்பி உள்ளது.>தற்போதைய கணக்குபடி, சட்ட சபை தேர்தலில், ஐந்துமுனை போட்டி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகரித்து உள்ளன. ஜெயலலிதா தலைமையில், அ.தி.மு.க., முதல் அணியாகவும், கருணாநிதி தலைமையில், தி.மு.க., -- -காங்., கூட்டணி இரண்டாவது அணியாகவும், தே.மு.தி.க.,- - மக்கள் நலக் கூட்டணி இணைந்துள்ள விஜயகாந்த் அணி, மூன்றாவது அணியாகவும் களத்தில் நிற்கின்றன. தனித்தனி அணிகள்: இந்த மூன்று முக்கிய அணிகள் தவிர்த்து, பா.ஜ., சில உதிரி கட்சிகளுடன் சேர்ந்து, ஒரு அணியாகவும், பா.ம.க., தனி அணியாகவும் களம் காண்கின்றன.சீமான் போன்றவர்கள் தனித்து போட்டியிட்டாலும், இந்த ஐவரை தவிர்த்து, யாரும் களத்தில் போட்டியாளராக கருதப்படவில்லை.
எனவே, ஐந்துமுனை போட்டி என்பது உறுதியாகி விட்டது. சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, கூட்டணி பலம் தான் வெற்றி வாய்ப்பை நிர்ணயிக்கிறது. 2011 சட்டசபை தேர்தலில், ஜெயலலிதா அமைத்த மெகா கூட்டணி, தி.மு.க.,வை தோல்விக்கு தள்ளியது.

அதேபோல, 2006 தேர்தலில், தி.மு.க., வெற்றிக்கு, கூட்டணி கட்சிகளே கைகொடுத்தன. பெரும்பான்மை பலமில்லாத போதிலும், காங்., தயவுடன், ஐந்து ஆண்டுகளை சிரமமின்றி, தி.மு.க., கடத்தியது. தமிழக அரசியலில், தி.மு.க., பெற்ற முதல் வெற்றியே, அண்ணாதுரை அமைத்த முரண்பட்ட கூட்டணியால் தான் கிடைத்தது. எனவே, வெற்றி பெற கூட்டணி பலம் முக்கியம். கூட்டணி பலம் முழுமையாக கிடைக்க,
தலைவர்கள் இடையே ஒற்றுமை ஏற்படுவது மட்டுமல்ல; தொண்டர்களிடையே ஒருங்கிணைப்பு இருக்கவேண்டும்.ஒரு வார்டில் அல்லது, ஒரு பூத்தில் வாக்காளர்களை அழைத்து வந்து, ஓட்டு போட வைக்கும், 'மைக்ரோ' பணியாளர்கள், தொண்டர்களே; அவர்கள் இணைந்து பணியாற்றினால் மட்டுமே, வெற்றி வசப்படும்.

அந்த வகையில், இந்த தேர்தலில், பரவலான பலமில்லாத பா.ம.க.,வால், அவர்களது சொந்த மாவட்டங்களில், சில தொகுதிகளை கைப்பற்ற முடியும். பா.ஜ.,வுக்கு மாநிலம் முழுவதும் கட்சி அமைப்புகள் இருந்தாலும், பழத்தை எக்கிப் பறிக்கும் அளவுக்கு பலம் பத்தாது; ஒரு பழம் கிடைத்தால் கூட, அது பெரிய அதிசயமாக தான் இருக்கும். எனவே, முதல் மூன்று இடத்தில் உள்ள கட்சிகளால் மட்டுமே, இந்த பந்தயத்தில் பங்கேற்க முடியும். இதில், முரண்பாடுகள் நிறைந்த மூன்றாவது அணியில் உள்ள விஜயகாந்த், வைகோ, திருமா மற்றும் கம்யூ., தலைவர்கள், பிரசார பீரங்கிகளாக இருக்க முடியுமே தவிர, எதிரிகளை வீழ்த்தும் போர் வீரர்களாக மாற முடியாது.எனவே, அ.தி.மு.க., -- தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், அ.தி.முக., பெற்ற வெற்றிஅசாதாரணமானது. அதன்படி பார்த்தால், அ.தி.மு.க., 214 சட்டசபை தொகுதிகளில், முதலிடத்தில் உள்ளது. அந்த நம்பிக்கையில், அக்கட்சி, பெரிய கட்சிகளின் துணையின்றி, தேர்தலை சந்திக்க துணிந்துள்ளது. ஆளுங்கட்சி கணக்கு:
லோக்சபா தேர்தல் கணக்கும், சட்டசபை தேர்தல் கணக்கும் மாறுபடும் என்பது அரசியல் வரலாறு. அதனால் தான், தி.மு.க., போன்ற பெரிய கட்சிகள், கூட்டணியை தேடுகின்றன. ஆனால், ஐந்துமுனை போட்டி எப்போதுமே, பலமான கட்சிக்கே வெற்றி வாய்ப்பை தரும்; எதிர்ப்பு ஓட்டுகள் சிதறுவதால், கட்சி ஓட்டுகளை வைத்தே, வெற்றிக் கோட்டை எட்டி விடலாம் என்பது, ஆளும் தரப்பின் அரசியல் கணக்கு.இதற்கு உதாரணமாக, 1989 தேர்தலை கூறலாம். அப்போதும், ஐந்துமுனை போட்டி இருந்தது. அதனால், தி.மு.க., பலனடைந்தது.

எம்.ஜி.ஆர்., மறைவால் ஏற்பட்ட பாதிப்பு, அ.தி.மு.க., ரெண்டானது. 'ஜெ., - ஜா' என, களத்தில் மோதியதன் விளைவு, 13 ஆண்டுகளுக்கு பின், 150 இடங்களில் வெற்றி பெற்று, தி.மு.க., ஆட்சியை பிடித்தது. தி.மு.க.,வின் வெற்றிக்கு, அ.தி.மு.க., ஓட்டுகள் சிதறியதுடன், கட்சியின் ஒன்றுபட்ட பலம் உதவியது. அந்த தேர்தலில், காங்கிரஸ், மூப்பனார் தலைமையில் தனித்து போட்டியிட்டது. ராஜிவ் பிரசாரத்தால், அக்கட்சிக்கு, 26 இடங்களில் வெற்றி கிடைத்தது. இப்பின்னணியில், மீண்டும், ஐந்துமுனை போட்டியை தமிழகம் சந்திக்கவிருக்கிறது. யாருக்கு லாபம் என்பது, போகப் போக தெரியும்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: