எங்கள் மீதான தாக்குதலை ஒருவேளை மக்கள் குறைந்தபட்சம் ஒரு கல்லை எடுத்து
வீசி எதிர்ப்பு தெரிவித்திருந்தால்கூட என் கணவர் காப்பாற்றப்பட்டிருப்பார்
என உடுமலையில் ஆணவக்கொலை செய்யப்பட்டட சங்கரின் மனைவி கெளசல்யா
தெரிவித்துள்ளார்.
உடுமலையில் நடந்த ஆணவக்கொலையில் சங்கர் கொல்லப்பட்டார். அவரது மனைவி
கௌசல்யா படுகாயம் அடைந்தார். 15 நாட்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
எடுத்துக்கொண்டு நேற்று தன் கணவர் சங்கர் வீட்டுக்கேத் திரும்பினார். சாதி
மாறி காதலித்து திருமணம் செய்ததால் தன் கணவரை கொன்றுவிட்ட தாக தன்
பெற்றோர், உறவினர்கள் மீது புகார் கூறி அவர்கள் கைதாக காரணமான கெளசல்யா
அதோடு குற்றவாளிகளையும் அடையாளம் காட்டி, தன் பெற்றோருக்கு எதிராக
நீதிமன்றத்தில் ரகசிய வாக்குமூலமும் அளித்திருக்கிறார்.சங்கரின் வீட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பில் உள்ள கெளசல்யாவை சந்தித்தோம். கணவரை கொன்ற பெற்றோர் உறவினர்கள் மீதான கெளசல்யாவின் கோபம் இப்போது சங்கரின் கொலையை வேடிக்கை பார்த்த மக்கள் மீது திரும்பியுள்ளது.
"எங்க அப்பா, அம்மா இந்த மாதிரி யோசிப்பாங்கனு நான் நினைச்சு கூட பாக்கலை. ஆனா அதை விட என் வருத்தம் இந்த சம்பவத்தை தடுக்காம வேடிக்கை பார்த்த மக்கள் மீதுதான். ரோட்டில் யாரோயோ அடிக்கறாங்கனு வேடிக்கை பார்க்கமா யரோ ஒருத்தர், அவங்க மேல கல் எடுத்து வீசியிருந்தாலும் கூட அவரை காப்பாத்தியிருக்கலாம். அதிர்ச்சியோட வேடிக்கை பார்த்தார்களே தவிர யாரும் பக்கத்துல கூட வரலை. யாராவது எதிர்த்து ஒரு கல்லை எடுத்து அவங்க மீது வீசியிருந்தால் கூட எதிர்ப்பை பார்த்து அவனுங்க பயந்து ஓடியிருப்பாங்க. பொதுமக்கள் அவனை காப்பாத்த கொஞ்சம் முயற்சி எடுத்திருக்கலாம்," என்று கண்ணீர் விட்டவர், கண்ணீரை துடைத்தபடி மீண்டும் பேசினார்.
- ச.ஜெ.ரவி விகடன்.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக