சனி, 2 ஏப்ரல், 2016

நத்தம் விஸ்வநாதன் கோஷ்டியிடம் ஒரே நாளில் ரூ.1,200 கோடியை கைப்பற்றியும் கோபம் தணியாத ஜெயலலிதா

விகடன்,com :ஓ.பி.எஸ், நத்தம் விஸ்வநாதன் மீதான கார்டனின் கோபம் இன்னமும் தணிந்ததாகத் தெரியவில்லை. தொடரும் ரெய்டுகளால் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள் சீனியர் அமைச்சர்களின் உறவினர்கள்.

'நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோரிடம் இருந்து மட்டும் 30000 கோடி ரூபாய் பணத்தை கார்டன் வட்டாரம் பறிமுதல் செய்ததாக' அறிக்கை வெளியிட்டார் கருணாநிதி. இதுதவிர, 'இவர்கள் இருவரும் எங்கெங்கே பணத்தை முதலீடு செய்தார்கள்' என்பதைப் பற்றியும் அந்த அறிக்கையில் விவரித்திருந்தார் கலைஞர். ஓ.பி.எஸ், நத்தம் மீதான விசாரணையை முடிவுக்குக் கொண்டு வந்த கார்டன், இவர்களின் பினாமிகளின் மீது தற்போது பார்வையைத் திருப்பியுள்ளது.
இதன்பின்னணியில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார் உளவுத்துறையின் முன்னாள் உயரதிகாரி ஒருவர். ஜெயலலிதாவின் குட்புக்கில் இருக்கும் இந்த அதிகாரியின் பெயரைச் சொன்னாலே, நெஞ்சுவலி வராத குறையாக தவிக்கிறார்கள் அமைச்சர்கள். தற்போது, பூசாரி ஒருவர் தற்கொலை செய்த வழக்கில் ஓ.பி.எஸ் தம்பியை கிடுக்குப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது போலீஸ். 'தூரத்து சொந்தக்காரங்களைக் கூட விடாம துருவி துருவி விசாரிக்கறாங்களே...' என நொந்து போய் புலம்பி வருகிறார் ஓ.பி.எஸ்.  வருஷக்கணக்கா ஒழுங்கா கமிஷன் கணக்கு காட்டினானே இன்னைக்கு இப்படி கள்ளக் கணக்கு  காட்டுவான்னு நான் ஒருகாலும் நெனைக்கலையே....நெனக்கலையே....சிவாஜி ரேஞ்சுக்கு போயசுல தேம்பல் கேக்குதம்மா  

இந்நிலையில், நேற்று காலை முதல் மாலை வரை நத்தம் விஸ்வநாதன் உதவியாளர்கள் இருவரின் வீடுகளில் நடந்த ரெய்டுகள் கோட்டை வட்டாரத்தை அதிர வைத்தது. முன்னாள் உளவுத்துறை சீனியர் தலைமையிலான டீம் திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில், உதவியாளர்களின் கஜானாவைத் தேடி வலைவிரித்தது. இதில், நத்தம் விஸ்வநாதனின் உதவியாளரும், உறவினருமான கோபியை வளையத்தில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.
இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க நிர்வாகி ஒருவர், "கடந்த மூன்று நாட்களாக அமைச்சரின் இரண்டு உதவியாளர்களையும் தங்களது கஸ்டடிக்குள் வைத்திருக்கிறது கார்டன் டீம். ஆரம்பத்தில், 'தங்களுக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அமைச்சருக்கு மட்டுமே தெரியும். அவர் சொல்லும் வேலையை மட்டும் செய்து வந்தோம்' எனச் சொல்ல, தங்களுக்கே உரிய பாணியில் அதிரடி விசாரணையைத் தொடங்கியது கார்டன் டீம். இதையடுத்து, ஸ்டார் ஓட்டல்களுக்குக் கொடுக்கப்படும் எஃப்1 பார் லைசென்ஸ் எப்படியெல்லாம் முறைகேடாகக் கொடுக்கப்பட்டது?, இதில் பரிமாறிய பணம், புதிய வேலைகளுக்கு போஸ்டிங் போட்டதில் வசூலான தொகை, டாஸ்மாக் கடைகளில் வசூலாகும் தொகை, டாஸ்மாக் பார் முறைகேடு, மின்துறையில் வசூலான தொகை, புதிய திட்டங்களில் கிடைத்த கமிஷன், தனியார் மின் நிறுவனங்கள் கொடுத்த தொகைகள், வெளிநாட்டு முதலீடு, நத்தம் விஸ்வநாதனின் வரவு, செலவுகள் என அனைத்தையும் ஒப்புவித்தார்களாம்.

இதையடுத்து, நேற்று ஒருநாளில் மட்டும் இந்த இரண்டு உதவியாளர்களிடம் இருந்து பணமாக மட்டும் 300 கோடி ரூபாயும், 900 கோடிக்கும் மேல் சொத்து ஆவணங்கள், பங்கு முதலீடுகள், வாங்கிக் குவித்த நிலங்கள் என அனைத்தையும் கார்டன் டீம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாரணை இன்னமும் முடியவில்லை. ஐந்தாண்டுகளில் கொள்ளையடித்த பணத்தை, 48 மணிநேரத்தில் கார்டன் டீம் வளைத்துக் கொண்டு போகும் எனவும் அவர்கள் நினைக்கவில்லை. உளவுத்துறை சீனியரின் விசாரணை வளையம் இன்னும் சிலர் பக்கம் நீண்டுள்ளது. ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் தொடங்குவதற்குள், அனைத்து சொத்துக்களையும் கார்டன் காலில் சமர்ப்பித்துவிட வேண்டும் என துடியாய் துடிக்கிறார் அந்த அதிகாரி" என ஆப்ரேஷன் நடத்தப்படும் விதத்தை விவரித்தார் அந்த நிர்வாகி.

அம்மா பிரசார வாகனம் டாப்-கியரில் பறப்பதற்குள், இன்னும் எத்தனை பேரின் டாப் கழண்டு போகுமோ? என அதிர்ந்து போயிருக்கிறார்கள் அமைச்சர்கள்.

- ஆ.விஜயானந்த்

கருத்துகள் இல்லை: