வியாழன், 31 மார்ச், 2016

பி.ஆர்.பழனிசாமியை விடுதலை செய்த மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு

மதுரை மாவட்டம் மேலூர், ஒத்தக்கடை, கீழவளவு, மேலவளவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கிரானைட் முறைகேட்டில் ஈடுபட்டதாக கிரானைட் அதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட சிலர் மீது 85–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த வழக்குகள் மாவட்ட நிர்வாகம் மூலம் தொடரப்பட்டு மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான வழக்குகளில் விசாரணை நடத்தி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி கிரானைட் தொடர்பான சில வழக்குகளை மட்டும் விசாரணைக்கு ஏற்பதாக புகார் எழுந்தது. குறிப்பாக குறைந்தபட்ச தண்டனை வழங்கக்கூடிய வகையில் இருக்கும் வழக்குகளை மட்டுமே அவர் விசாரிப்பதாக கூறப்பட்டது.

அதிகபட்ச தண்டனை வழங்கக்கூடிய கிரானைட் வழக்குகளை அவர் விசாரிக்க மறுப்பதாகவும் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அரசு மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் தரப்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில் சில வழக்குகளில் மட்டும் மாஜிஸ்திரேட்டு தனிக்கவனம் செலுத்தி விசாரிக்கிறார். அவர் விசாரிக்கும் வழக்குகள் மிகச்சிறிய தண்டனைக்குரிய வழக்காகும். ஆனால் அனைத்து வழக்குகளையும் விசாரித்தால் தான் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க முடியும்.
எனவே அனைத்து மனுக்களையும் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்த மனு மதுரை ஐகோர்ட்டு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே அனைத்து வழக்குகளையும் விசாரிக்க மேலூர் மாஜிஸ்திரேட்டுக்கு ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இருப்பினும் அவரது நடவடிக்கைகள் ஏற்கத்தக்கதல்ல. எனவே அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி பிரகாஷ், ஐகோர்ட்டு உத்தரவை பின்பற்றாத மேலூர் மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதிவாளருக்கு உத்தர விட்டார்.
இதனை ஏற்ற ஐகோர்ட்டு பதிவாளர், சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரையை அனுப்பி வைத்தார். இதையடுத்து மாஜிஸ்திரேட்டு மகேந்திர பூபதி கிரானைட் தொடர்பான அனைத்து வழக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கிரானைட் கற்களை அரசுடமையாக்கக் கோரி அரசு தரப்பில் முதன் முதலில் தாக்கல் செய்த 2 வழக்குகளை தள்ளுபடி செய்தும் அந்த வழக்கில் தொடர்புடைய பி.ஆர்.பழனிச்சாமி, சகாதேவன் ஆகியோரை விடுதலை செய்தும் நேற்று முன்தினம் மேலூர் நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மகேந்திரபூபதி உத்தரவிட்டார்.
மேலும் அந்த வழக்கை தாக்கல் செய்த அப்போதைய மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல்மிஸ்ரா, அரசு வக்கீல்கள் ஞானகிரி, ஷீலா ஆகியோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவனத்துக்கும் கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து, 2 நீதிபதிகளை, மேலூர் கோர்ட்டுக்கு சென்று வழக்கு ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி பஷீர் அகமது, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு சரவணன் ஆகியோர் இன்று காலை மேலூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு சென்றனர். அங்கு மாஜிஸ்திரேட்டு மகேந்திரபூபதியிடம் தனி அறையில் அவர்கள் விசாரணை நடத்தினர்.
கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்குகள் போலீஸ் தரப்பு தாக்கல் செய்ய வழக்கின் குற்றப்பத்திரிகை விளக்கங்கள், மாஜிஸ்திரேட்டு விசாரித்து வந்த வழக்குகள் போன்றவை குறித்து 2 நீதிபதிகளும் விசாரணை நடத்தியதாக தெரிகிறது. இந்த விசாரணை 3 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் இந்த வழக்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.   maalaimalar.com

கருத்துகள் இல்லை: