புதன், 6 ஜனவரி, 2016

தமிழக வெள்ளம் : தனியார்மயம் உருவாக்கிய அழிவு ! வினவு.com

06-encroached-lakes“நீரின்றி அமையாது உலகு” என்றார் திருவள்ளுவர். இதனை நமது முன்னோர்கள் நன்கு உணர்ந்தும் புரிந்தும் வைத்திருந்ததற்கு ஆதாரமாகத் திகழ்பவைதான் தமிழகத்தின் கிராமம் தொடங்கி நகரம் வரை காணப்படும் கண்மாய்களும், ஏரிகளும், குளங்களும். ஒரு நூற்றாண்டுக்கு முன்பு வரை தமிழகத்தில் ஏறத்தாழ 39,000 ஏரிகளும், 3,000 கோயில் குளங்களும், 5,000 ஊருணிகளும் இருந்ததாகப் பல்வேறு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு தமிழகத்தில் இன்றுள்ள நவீன, பெரிய அணைக்கட்டுகளில் தேக்கப்படும் நீரின் கொள்ளளவைவிட அதிகம் என்று நீரியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், வைகை அணையின் கொள்ளளவு 614 கோடி கன அடி; காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 364 கோடி கனஅடி.

ஏரிகளைப் பூமியின் கண்கள் என நமது முன்னோர்கள் கொண்டாடியிருக்கின்றனர். மேலும்,ரெட்டெரி, பொன்னேரி, நாங்குனேரி என ஏரிகளின்; குருங்குளம், பரம்பிக்குளம் எனக் குளங்களின்; காரைவாய்க்கால், ஆழிவாய்க்கால் என வாய்க்கால்களின்; அடையாறு, கொள்ளிடம், பவானி என ஆறுகளின் பெயர்களையே ஊர்களின் பெயர்களாக இட்டதிலிருந்தே நமது முன்னோர்கள் இவற்றுக்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தை உணர்ந்துகொள்ள முடியும். இதன் மூலம் இவை அழிந்தால் அந்த ஊர்களும் அழியும் என்பதுதான் நமது முன்னோர்கள் மறைபொருளாக உணர்த்தியிருக்கும் செய்தி.
செம்மஞ்சேரி
சென்னையின் செயற்கையான, அராஜக வளர்ச்சி : செம்மஞ்சேரி பகுதியிலுள்ள பிரம்மாண்டமான அடுக்குமாடிக் குடியிருப்புகள்.
நவீன வளர்ச்சியோ இந்தக் கண்களைக் கொத்திக் குதறிக் குருடாக்கிவிட்டு, அவற்றை நரம்புகளைப் போல பிணைத்திருந்த நீர்வழித் தடங்களையும் அறுத்தெறிந்துவிட்டுதான் எழுந்து நிற்கிறது. கடந்த நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே சுமார் 4,000 முதல் 6,000 ஏரிகள் காணாமல் போய்விட்டதையும் பல நூற்றுக்கணக்கான ஏரிகள் தூர்ந்துபோய் அழியும் நிலையில் இருப்பதையும் சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். அதிலும், தனியார்மயம்-தாரளமயம் புகுத்தப்பட்டு, ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி நாட்டின் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டப்பட்ட பிறகு, இந்த அழிவு மிகவும் துரிதமாக நடைபெற்றிருக்கிறது.
“தமிழ்நாட்டில் இருந்த 39,200 கண்மாய்களில் 10% கண்மாய்கள் ஆக்கிரமிப்பு காரணமாகவும், நகரமயமாதல் காரணமாகவும் அழிந்து போய்விட்டன. மொத்தக் கொள்ளளவில் 22% நீரை சேர்த்துவைக்கத் திறனுள்ள தமிழக கண்மாய்கள் தற்போது 30% தூர்ந்து போயுள்ளதால், 15% மட்டுமே தேக்க முடிகிறது” எனக் கூறுகிறார் சர்வதேச நீர் மேலாண்மை மையத்தின் (International Water Management Institute) இயக்குனரான பழனிச்சாமி. சென்னையும், கடலூரும் வெள்ளக்காடானதன் காரணம் இதில்தான் புதைந்திருக்கிறது.

ஏரிகளை அழித்து உருவாக்கப்பட்ட நகர வளர்ச்சி

நீதிமன்றம், பேருந்து நிலையம், குடியிருப்புகள், விரைவுச் சாலைகள், இணைப்புச் சாலைகள் உள்ளிட்ட அரசின் திட்டங்கள்; அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனியார் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப பூங்காக்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட தனியார் துறையின் திட்டங்களுக்கு கண்மாய்களும், நீர்வழித் தடங்களும் மட்டுமல்ல, சதுப்பு நிலக் காடுகளும்கூடப் பலியாகியிருக்கின்றன.
சென்னை விமான நிலையம்
அடையாறின் வெள்ள நீர் வடிநிலத்தை ஆக்கிரமிப்பு உருவாக்கியுள்ள சென்னை புதிய விமான நிலையம்.
நவீன சென்னை நீர்வழித் தடங்கள் மேல் எழுந்து நிற்பதை இவ்விதழில் பல்வேறு ஆதாரங்களோடு சுட்டிக் காட்டியிருக்கிறோம். தமிழகத்தின் மற்ற நகரங்களும்கூட சென்னை சந்திந்திருக்கும் அபாயத்தை இன்றோ அல்லது நாளையோ எதிர்கொள்ள வேண்டிய நிலையில்தான் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
37 கண்மாய்கள் இருந்த மதுரை நகரில் இன்று ஏழு கண்மாய்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. அவ்வூரில் இன்று சென்னை உயர்நீதி மன்றக் கிளை இருக்கும் இடம், முன்பு உலகனேரி கண்மாயாக இருந்தது. தல்லாகுளம் கண்மாயின் அழிவின் மேல்தான் மதுரை மாநகராட்சி, சட்டக்கல்லூரி, வணிக வரி அலுவலகங்கள் அமைந்துள்ளன.
சேலத்தில் இருந்த அச்சுவான் ஏரி அந்நகர புதிய பேருந்து நிலையமாகிவிட்டது. பேராந்தி ஏரி காந்தி விளையாட்டு மைதானமாகிவிட்டது. பூலாவரி ஏரி சாக்கடையாகிவிட்டது. தாதுபாகுட்டை, கொல்லங்குட்டை உள்ளிட்ட சில ஏரிகள் தூர்ந்துபோய் காணாமல் போவிட்டன.
விழுப்புரம் நகரின் புதிய பேருந்து நிலையம், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடங்கள், அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை பழைய விழுப்புரத்தை ஒட்டியிருந்த கண்மாய்களைத் தூர்த்துதான் உருவாக்கப்பட்டுள்ளன.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் வேந்தான் என்ற குளத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஒட்டியுள்ள 1,300 ஏக்கர் பரப்பைக் கொண்ட மிகப் பெரிய குளமான கோரம்பள்ளம் கடந்த 111 ஆண்டுகளாகத் தூர்வாரப்படவில்லை. “அக்குளம் தூர்வாரப்பட்டிருந்தால், அக்குளத்திலிருந்து வெளியேறும் உபரி நீர் செல்லும் பாதையான உப்பாத்து ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டிருந்தால் தூத்துக்குடி வெள்ளத்தில் மூழ்கியிருக்காது” என்கிறார் முன்னாள் மாவட்ட விவசாய சங்கத் தலைவர் அழகு.
1970-க்கு முன்னர் காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்த செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஏரிகளின் மாவட்டம் என்ற சிறப்புப் பெயரே உண்டு. செங்கல்பட்டு மாவட்டத்தை மேலிருந்து பறவை பார்வையில் பார்த்தால், அம்மாவட்டத்திலிருந்த ஏரிகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டு தாமரைத் தடாகம் போலக் காட்சியளித்திருக்கிறது. ஆனால், இன்றைய நிலை வேறு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் சென்னை ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டும் ஏறத்தாழ 2,400 ஏரிகள் காணாமல் போவிட்டதாக செதிகள் வெளிவந்துள்ளன.
06-caption-1இவை எப்படி மாயமாகின? தமிழகத்திலுள்ள மொத்த பொறியியல் கல்லூரிகளுள் பாதிக்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளும், தனியார் பல்கலைக்கழகங்களும் இந்த மூன்று மாவட்டங்களில்தான் அமைந்துள்ளன என்ற உண்மையை இணைத்துப் பார்த்தால், ஏரிகளை ஆக்கிரமித்திருக்கும் முதன்மைக் குற்றவாளிகள் யாரென்று தெரிந்துவிடும். இந்த மழை அந்த உண்மையைப் புட்டுவைத்திருக்கிறது.
காஞ்சிபுரம் மாவட்டம்-காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். பொறியியில் கல்லூரி வளாகத்தில் புகுந்த வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட மாணவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையை அடுத்துள்ள குன்றத்தூரில் அமைந்துள்ள மாதா பொறியியல் கல்லூரியில் நிறுத்தப்பட்டிருந்த கல்லூரி பேருந்துகள் குப்புற கவிழும் அளவிற்கு, அக்கல்லூரி வளாகத்திற்குள் வெள்ளம் பாய்ந்திருக்கிறது. சென்னையை அடுத்துள்ள போரூர் பகுதியில் அமைந்துள்ள ஐந்து நட்சத்திர மியாட் மருத்துவமனையின் முதல் தளம் மூழ்கும் அளவிற்கு வெள்ளம் பாந்திருக்கிறது. இவையெல்லாம் உணர்த்தும் உண்மை என்னவென்றால், இந்த நவீன மருத்துவமனைகளும், பொறியியல் கல்லூரிகளும், அடுக்குமாடி குடியிருப்புகளும் இல்லையென்றால் அம்மூன்று மாவட்டங்களிலும் இந்த அளவிற்கு உயிர்ச் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டிருக்காது என்பதே.

விவசாய நசிவும் ஏரிகளின் அழிவும் – தனியார்மயத்தின் இரு பக்கங்கள்

சென்னை நகரத்திற்கு வேலை தேடி வரும் கிராமப்புற ஏழைகள் கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்வழித் தடங்களில் குடிசைப் போட்டுக் கொண்டு தங்குவதை ஆக்கிரமிப்பு எனச் சாடும் அரசும், கார்ப்பரேட் நிபுணர்களும், நடுத்தர வர்க்க கனவான்களும் கண்மாய்களும் நீர்வழித் தடங்களும் அழிக்கப்பட்டதை, ஆக்கிரமிக்கப்பட்டதை ‘வளர்ச்சி’ எனக் கூசாமல் நியாயப்படுத்துகின்றனர். கடந்த இருபதாண்டுகளில் உருவான நகர வளர்ச்சியில் 47 சதவீதம் நீர்நிலைகளை ஆக்கிரமித்தும் அழித்தும் எழுந்து நிற்பதாகக் கூறுகிறது, ஒரு புள்ளிவிவரம்.
திருமணிமுத்தாறு
ஆற்றைப் பாதுகாக்கும் அரசின் இலட்சணம் : சேலம் நகரின் மத்தியில் ஓடும் திருமணிமுத்தாறின் கரைகளைக் காங்கிரீட் பூசி, அதனைச் சாக்கடையாகவும் குப்பைத் தொட்டியாகவும் மாற்றிவிட்டது சேலம் மாநகராட்சி.
இந்த வளர்ச்சியைச் சாதிப்பதற்கு அரசும், தனியாரும் இயற்கையை மட்டுமல்ல, மனித உயிர்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைக்கூட தயங்காமல் செததை மௌலிவாக்கம் கட்டிடம் சரிந்து விழுந்து, அறுபதுக்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்ட போது கண்டோம். இப்பொழுது இந்த வெள்ளப் பெருக்கின் காரணமாக சென்னையில் மட்டும் பல நூறுக்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகியிருக்கின்றன. சாதாரண உழைக்கும் மக்கள் மட்டுமின்றி, நடுத்தர வர்க்கம்கூட தமது உடைமைகளை இழந்து நிற்கின்றனர். கடலூரிலும், டெல்டா மாவட்டங்களிலும் பல நூறு கோடிக்கணக்கான ரூபாயில் பயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கிறது.
மௌலிவாக்கம் கட்டிட விபத்து குறித்தாவது ஒரு மோசடியான விசாரணைக் கமிசனும், ஆமை வேகத்தில் நகரும் வழக்கும் உள்ளன. ஆனால், இந்த வெள்ளச் சேதத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு, பொருள் இழப்பு குறித்து எந்த விசாரணையும் நடைபெறப் போவதில்லை. இந்தக் குற்றத்திற்குப் பொறுப்பானவர்கள் யார் என்பது நம் கண் முன்னே தெரிந்தும்கூட, இயற்கையின் மீது பழிபோட்டு அவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். அது மட்டுமல்ல, குற்றவாளிகள் – ரியல் எஸ்டேட்-கட்டுமான நிறுவனங்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஓட்டுக்கட்சி பிரமுகர்கள், அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நடுத்தர வர்க்கத்தினர் உள்ளிட்டோர் – அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு நமக்கே தெரியாமல் இப்படி நடந்துவிட்டது போலவும், ஒருவர் இன்னொருவர் மீது பழிபோட்டு தப்பிக்கப் பார்ப்பதும் நம் கண் முன்னே தொலைக்காட்சி விவாதங்களில் நடக்கிறது. அசோசெம் என்ற தரகு முதலாளிகளின் சங்கம் திட்டமிடப்படாத வளர்ச்சிதான் எல்லாவற்றுக்கும் காரணம் என முராரி பாடும் அயோக்கியத்தனத்தையும் ஊடகங்கள் எவ்வித விமர்சனமின்றி பிரசுரிக்கின்றன.
06-caption-2மேலை நாடுகளைப் போல, சிங்கப்பூர், மலேசியா போல இங்கும் திட்டமிட்ட நகர வளர்ச்சி ஏன் ஏற்படவில்லை என்பதற்கு நிபுணர்களும், நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளும் அரசியல்வாதிகளின் இலஞ்சம், ஊழல் மற்றும் அராஜகத்தைக் காரணமாக முன்வைக்கிறார்கள். இது பிரச்சினையின் ஒரு பகுதிதானே தவிர முழுமையல்ல. இந்த திட்டமிடப்படாத, அராஜக வளர்ச்சியின் ஆணிவேர் இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியாதிக்கப் பொருளாதாரப் பாதையில் உள்ளது.
இத்தனியார்மயப் பொருளாதாரக் கொள்கை பொருள் உற்பத்தி சார்ந்த வளர்ச்சியின் இடத்தில் இறக்குமதியையும்; பங்குச் சந்தை சூதாட்டம், சுற்றுலா, வங்கி, காப்பீடு, மூல வளங்களை ஏற்றுமதி செய்வது, கால்சென்டர் மற்றும் மிக முக்கியமாக ரியல் எஸ்டேட் உள்ளிட்ட சேவைத் துறை வளர்ச்சியை முன்னிலைப்படுத்தியது. இது பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிற்துறையைப் பெருமளவு பாதித்தது என்றால், பாரம்பரியமிக்க இந்திய விவசாயத்தை அழிவின் எல்லைக்கே கொண்டு சென்றது. தனியார்மயம்-தாராளமயத்தின் பிறகான கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் மொத்த தேசிய உற்பத்தியில் (ஜி.டி.பி.) விவசாயத்தின் பங்கு அதளபாதாளத்திற்கு சரிந்திருப்பதும் இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதும் இந்த அழிவின் சாட்சியங்களாக உள்ளன.
விவசாயத்திற்கு மானியம் அளிப்பது, விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப ஆதார விலையை நிர்ணயிப்பது, அத்தியாவசிய உணவுப் பொருட்களை அரசே கொள்முதல் செய்வது உள்ளிட்ட அரசின் ஆதரவு நடவடிக்கைகள் படிப்படியாக வெட்டப்பட்டதோடு, விவசாயத்திற்கு ஆதாரமான நீர்நிலைகளைப் பராமரிப்பது, மேம்படுத்துவது, புதிய நீர்நிலைகளை உருவாக்குவது – என விவசாயத் துறையில் இடப்படும் மூலதனம் பெயரளவு நிலைக்குச் சென்றது. கார்கள், வீடுகள் உள்ளிட்ட நுகர்வுப் பொருட்களுக்கு, அதாவது புதுப் பணக்காரர்களாக உருவான நடுத்தர வர்க்கத்திற்குக் குறைந்த வட்டியில் கடன் வழங்கிய பொதுத்துறை வங்கிகள், ஏழை-நடுத்தர விவசாயிகளுக்குக் கடன் வழங்குவதைப் புறக்கணித்தன.
மாதா பொறியியல் கல்லூரி
வெள்ளத்தில் மூழ்கிப் போன மாதா பொறியியல் கல்லூரியிலிருந்து மாணவர்கள் மீட்கப்படுகின்றனர்.
இன்னொருபுறத்தில் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை காங்கிரீட் காடுகளாக மாற்றுவதற்கு ஏற்றவாறு, குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்தராத நீர்நிலைகளை பட்டா போட்டுக் கொடுக்கும் சட்டம் தமிழகத்தில் இயற்றப்பட்டது. இந்த சட்டம் வறட்சியினால் வறண்டு நிற்கும் கண்மாகளை மட்டுமல்ல, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைக்கூட ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் தரகர்களும் ஆக்கிரமித்துக் கொள்ளும் வாய்ப்பை அள்ளி வழங்கியது. கண்மாய்களை அழித்து உருவாக்கப்பட்ட குடியிருப்புகள் லேக் வியூ, ரிவர் வியூ எனக் கவர்ச்சிகரமான முறையில் சந்தைப்படுத்தப்பட்டன. எலி வளையானாலும் சொந்த வளை என்ற ஆசை கொண்ட நடுத்தர வர்க்கத்தினர் இந்த கவர்ச்சி விட்டிலில் மாட்டிக்கொண்ட தோடு, கண்மாய்களை அழித்த குற்றத்திலும் பங்குதாரர்கள் ஆகி, இப்பொழுது செய்த ‘பாவத்திற்கு’த் தண்டனையை அனுபவிக்கின்றனர். சென்னை மாநகரம் வெள்ளத்தால் முற்றிலுமாக சேதாரப்பட்டு நிற்கும் இந்த நிலையில்தான் இந்தச் சட்டத்தை சென்னை உயர்நீதி மன்றம் ரத்து செய்தது.
இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல, பொதுப் பயன்பாடு என்ற பெயரில் விவசாய நிலங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களும் கைப்பற்றிக் கொள்ளுவதற்கு ஏற்ப நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள திருத்தங்கள் விவசாயத்தின் தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக இருக்கிறது.
விவசாயத்தின் நசிவையும் கண்மாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அழிக்கப்படுவதையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாது. அது போல, தனியார்மயம்-தாராளமயம் கொண்டுவந்திருக்கும் இந்த செயற்கையான, அராஜகமான வளர்ச்சியையும், நாடாளுமன்ற அரசியல் மற்றும் ஓட்டுக்கட்சிகளின் சீரழிவையும் பிரித்துப் பார்க்க முடியாது. கட்சி பேதமின்றி அனைத்து ஓட்டுக்கட்சிகளிலும் ரியல் எஸ்டேட் புரோக்கர்களும், ஆற்று மணற் கொள்ளையர்களும் தலைவர்களாக வலம்வருவதன் அடிப்படையை இந்தப் பின்னணியிலிருந்துதான் பார்க்க முடியும்.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் பொது மராமத்து பணிகளைச் செய்வதைக் கைவிட்டதன் மூலம், இருந்ததையும் இழந்து எதையும் பெற முடியாத நிலைக்கு இந்தியாவைத் தள்ளியதாகக் குறிப்பிடுவார், பேராசான் காரல் மார்க்ஸ். காலனி ஆட்சியில் தொடங்கிய இந்த அழிவை தற்பொழுது நடக்கும் மறுகாலனிய ஆதிக்கம் முடித்துவைக்க தீவிரமாக முனைகிறது.

மக்கள் அதிகாரமே மாற்று!

மியாட் மருத்துவமனை
மணப்பாக்கம் ஏரிக்குள் கட்டப்பட்ட மியாட் மருத்துவமனையில் இறந்து போனவர்களின் சடலங்கள்.
தமிழகத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கவும், மழை நீரைச் சேமித்து வைக்கவும் இருக்கின்ற ஏரிகள், குளங்களையாவது பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்பொழுது வலுப்படத் தொடங்கியிருக்கிறது. எனினும், இந்தக் கோரிக்கையை முன்வைக்கும் பலரும் விவசாய நசிவைப் பற்றிப் பேசுவது கிடையாது. ஏரிகளைப் பாதுகாக்கக் கோரும் பெரும்பாலோர் சுற்றுப்புறச் சூழல் அரசியல் கண்ணோட்டத்திலிருந்து அல்லது பாதிப்பால் ஏற்பட்ட அனுபவத்திலிருந்து மட்டுமே இக்கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஏரிகளின், தமிழக ஆறுகளின் பேரழிவுக்குக் காரணமான தனியார்மய வளர்ச்சிப் பாதையை நிராகரிக்காமல், நீர்நிலைகளைப் பாதுகாத்துவிட முடியும் எனக் கருதுவது கனவுகளில்கூட சாத்தியமாகாது.
மேலும், முக்கிய நீர்நிலைகளில் காணப்படும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஒரு பொது விசாரணை நடத்தி, அத்தகைய ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், அரசியல் புரோக்கர்கள் உள்ளிட்ட கும்பல் அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் கோர வேண்டும். கூவம், அடையாறை ஆக்கிரமித்திருக்கும் ஏழைகளின் குடிசைகளை அகற்றுவது நியாயம் எனும்பொழுது, ஏரிகளை ஆக்கிரமித்து எழுந்துள்ள நவீன கட்டுமானங்களையும் அகற்றக் கோருவது எவ்விதத்திலும் அநீதியாகிவிடாது. பாதிக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உரிய, நியாயமான நிவாரணமும் இழப்பீடும் கேட்பதற்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கடமைகள் இவை.
இவற்றுக்கு அப்பால், அரசு இயந்திரமும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதமின்றி அனைத்து ஓட்டுக்கட்சிகளும் தனியார்மயத்தின் அடியாளாக இருப்பதோடு, அவர்களே சொல்லிக்கொள்ளும் கடமைகளை ஆற்ற மறுக்கின்ற எதிர்நிலை சக்திகளாக வளர்ந்து நிற்பதைக் காண்கிறோம். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்துவிடும் முன் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும் என்ற சொரணைகூட இல்லாத அளவிற்கு ஆளுங்கட்சியும், அதிகார வர்க்கமும் மக்கள் விரோதிகளாகச் சீரழிந்து நிற்கின்றனர். சாதாரண நிவாரண நடவடிக்கைகளைக்கூடத் திட்டமிட்டு செய்ய இயலாத திறன் அற்றதாக அதிகார வர்க்கம் இருப்பது அம்பலமாகியிருக்கிறது. நீர்நிலைகளை, மக்களின் உயிரை, உடைமைகளைப் பாதுகாக்க மறுக்கும் அரசிற்கு நம்மை ஆளுவதற்கு அருகதையே கிடையாது என்பதை இந்த அழிவின் வாயிலாக நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.
ஒருபுறம் மக்கள் விரோத தனியார்மயப் பொருளா தார வளர்ச்சிப் பாதை, இன்னொருபுறம் ஆள அருகதையற்றுப் போன அரசு இயந்திரம் என்ற இரண்டு நுகத்தடிகளை நாம் சுமந்துகொண்டு நிற்கிறோம். இவற்றை நிராகரித்து, விவசாயத்தை, சிறுதொழில்களைப் பாதுகாக்கின்ற மக்கள் நலன் சார்ந்த பொருளாதார வளர்ச்சிப் பாதை; நீர்நிலைகள், ஆற்று மணல் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் பேணும், பாதுகாக்கும் அதிகாரம் கொண்ட மக்கள் அமைப்புகள் என்ற மாற்று சமூக-பொருளாதார கட்ட மைவை உருவாக்கப் போராட வேண்டும் என்பதுதான் இந்த வெள்ளம் நமக்கு உணர்த்திவிட்டுச் சென்ற செய்தியாகும்.
– மு செல்வம்

கருத்துகள் இல்லை: