செவ்வாய், 14 ஏப்ரல், 2015

தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு internet முன்னுரிமை! பாஜகவின் மற்றுமொரு தாரைவார்ப்பு? ஸ்டாலின் கண்டனம் .


இணையதள சேவையில் தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தியாவில் பல மாற்றங்களுக்கு இணையதளங்கள் பேருதவியாக இருந்து வருகிறது. நாட்டில் உள்ள அனைவரும் தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ளவும், பொருளாதார பயன்களை அனுபவிக்கவும் இந்த இணையதளங்கள் மூலம் முதல்முறையாக ஒரு நல்லவாய்ப்பு கிட்டியிருக்கிறது.ஆனால் அதிலும் இப்போது மத்திய அரசின் தொலைதொடர்பு துறையின் ஒழுங்குமுறை ஆணையமான ‘ட்ராய்’ அமைப்பு முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறது. இணையதள சேவையில் தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு முன்னுரிமை கொடுக்க ‘ட்ராய்’ அமைப்பு முயற்சிக்கிறது. அப்படி அனுமதிக்கப்பட்டால் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ‘வாட்ஸ்அப்’, ‘யூடியூப்’, இணையதளம் மூலம் தொலைபேசி அழைப்பு உள்ளிட்ட பல அப்ளிகேஷன்களுக்கு அந்த கம்பெனிகள் தனியாக கட்டணம் வசூலிக்கும் நிலைமை உருவாகும்.


இதனால் பெரும் தனியார் நிறுவனங்கள் சிறிய இணையதள சேவைமையங்களுக்கு இடையூறு செய்தோ அல்லது அவர்களின் இணையதள சேவையை முடக்கியோ அந்தத் தொழிலை நம்பி வாழும் எண்ணற்ற சிறுதொழில் முனைவோரை கடுமையாக பாதிக்கும் சூழ்நிலையை உருவாக்கலாம்.

அனைத்து இணையதள சேவை மையங்களுக்கும் சம வாய்ப்பு என்ற ரீதியில் தற்போது இருக்கும் இணையதள கொள்கைக்கு எதிராக ‘ட்ராய்’ அமைப்பின் இந்த முயற்சி இருக்கிறது. மக்களுக்கு பயன் கிடைப்பதைதடுத்து, தனியார் டெலிகாம் கம்பெனிகளின் லாபத்தை கூட்ட நினைக்கும் ‘ட்ராய்’ அமைப்பின் இந்த முயற்சிக்கு எனது கடும்கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

தனியார் டெலிகாம் கம்பெனிகளுக்கு இணையதள சேவையில் முன்னுரிமை அளிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையை ‘ட்ராய்’ அமைப்பு உடனடியாக நிராகரிக்க வேண்டும். இணையதள சேவை என்பது சில தனியார் கம்பெனிகளின் கட்டுப்பாட்டிற்குள் மாட்டிக்கொள்ளாமல், நாட்டிற்கும், மக்களுக்கும் பயன்படும் ஒரு நடுநிலையான சேவையாக தொடருவதற்கு வழிவகுக்கவேண்டும் என்று ‘ட்ராய்’ அமைப்பை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். maalaimalar.com

கருத்துகள் இல்லை: