புதன், 15 ஏப்ரல், 2015

6 கட்சிகள் இணைந்து புதிய கட்சிக்கு முலாயம் சிங் தலைவராக தேர்வு

பழைய ஜனதா கட்சியில் இருந்து உருவான சமாஜ் வாதி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரீய ஜனதா தளம், தேசிய லோக்தளம் உள்ளிட்ட 6 கட்சிகளும் தற்போது நாடாளுமன்றத்தில் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. தற்போது இந்த கட்சித் தலைவர்களிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளதால், கட்சிகளை இணைத்து தேசிய அளவில் ஒரே கட்சியாக உருவெடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்சிகளின் தலைவர்கள் ஒன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தினர். முலாயம் சிங், லாலுபிரசாத், சரத்யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இதில் பங்கேற்றனர். இந்த ஆலோசனையின் முடிவில் புதிய கட்சிக்கு முலாயம் சிங் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய கட்சியின் பெயரும், கொடியும் பின்னர் அறிவிக்கப்படும் என்று முலாயம் சிங் தெரிவித்துள்ளார். புதிய கட்சியின் பெயர் சமாஜ்வாதி ஜனதா தளம் அல்லது சமாஜ்வாதி ஜனதா கட்சி என்று பெயர் வைக்கப்படலாம் என்றும், சக்கரம் அல்லது சைக்கிள் சின்னம் கோர உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. பீகார் சட்டசபை தேர்தலில் போட்டியிட முதற்கட்டமாக முடிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.தியாகி கூறும்போது, எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. விரைவில் கட்சியின் பெயர், கொடி அறிவிக்கப்படும் என்றார். nakkheeran.in

கருத்துகள் இல்லை: