செவ்வாய், 17 மார்ச், 2015

வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டம்: திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு

கொடுமை தடுப்பு சட்டத்தை ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் விதத்தில், சட்டத் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வரதட்சிணை தொடர்பான பொய் புகாரினால் கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்திற்கு வந்துள்ளன என்றும் எனவே இந்த வரதட்சணை கொடுமை சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்தன இந்நிலையில், இந்த சட்டத¢தில் சில திருத்தங்களை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த சட்டத் திருத்தம் குறித்த வரையறை சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் அந்த சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. தற்போது உள்ள சட்டப்படி பொய் புகார் கொடுக்கப்பட்டால், அந்த புகாரை கொடுத்த பெண்ணுக்கு ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே அபராதம் விதிக்க முடியும். ஆனால், புதிய சட்டத் திருத்தத்தின்படி அபாரத்தொகையை அதிகரிக்க வகைசெய்யும் என்றும் கூறப்படுகிறது.

கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் டெல்லியில் வரதட்சணை தொடர்பான மரணங்கள் அதிகமானதையடுத்து, இந்த வரதட்சினை கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்படி தற்போது உள்ள வரதட்சணை கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, ஒரு பெண் தனது கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்தால், 498 ஏ, மூலம் காவல்துறையினர் கணவன் அல்லது அவரது உறவினர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உடனடியாக அவர்களை கைதுசெய்ய முடியும்.
இந்த சட்டத்தின்படி கணவன் அல்லது அவரது குடும்பத்தினர் தங்களது தரப்பு நியாயத்தை விசாரணை அதிகாரியிடம் எடுத்து சொல்ல அவகாசம் அளிக்கப்படவில்லை.
நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி குற்றம் சாற்றப்பட்டவர் உடனடியாக கைது செய்ய காவல்துறையினருக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, விசாரணையின்றி கைது செய்வதுடன், 3 ஆண்டு சிறை தண்டனை அளிக்கவும் இடமுண்டு. திருமணம் ஆகும் பெண்களுக்கு கணவன் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமை நேராமல் இருக்கவும், பெண்களின் பாதுகாப்புக்காகவும் உள்ள இந்த சட்டம், பல சமயங்களில், தவறாக பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன.
இந்த சட்டத்தினால் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியதாக புகார் கூறப்பட்ட கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தங்கள்தரப்பு நியாயத்தை கூறமுடியாமல் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகும் நிலையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  /tamil.webdunia.com

கருத்துகள் இல்லை: