புதன், 18 மார்ச், 2015

ஜேம்ஸ் போன்ட் நடிகையை மாற்றியதால் ரூ.120 கோடி சலுகை

துப்பறியும் கதைகளுடன் வரிசையாக வெளியாகும் ஜேம்ஸ்பாண்டு படங்களுக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த வரிசையில் 24-வது ஜேம்ஸ்பாண்டு படமாக ‘ஸ்பெக்டர்’ என்ற படம் தயாராகி வருகிறது. ஆஸ்திரியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தை, தங்கள் நாட்டில் எடுக்குமாறு மெக்சிகோ வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்காக 20 மில்லியன் டாலர் (சுமார் ரூ.120 கோடி) வரிவிலக்கு அளிக்க முன் வந்துள்ளதுடன், சில நிபந்தனைகளும் விதித்துள்ளது. அதன்படி, படத்தில் எஸ்ட்ரெல்லா என்ற கதாபாத்திரத்தில் ஜேம்ஸ்பாண்டின் ஜோடியாக நடிப்பதற்கு மெக்சிகோவை சேர்ந்த நடிகையை தேர்வு செய்ய வேண்டும். படத்தின் வில்லனை மெக்சிகோவை சேர்ந்தவராக சித்தரிக்கக்கூடாது.
மேலும் படத்தில் மெக்சிகோ நகர மேயர் கடத்தப்படுவதாக காட்டுவதை மாற்றி, சர்வதேச தலைவர் ஒருவரை கடத்துவதாக காட்ட வேண்டும். அத்துடன் படத்தில் வரும் மெக்சிகோ போலீசாருக்கு பதிலாக வேறொரு நாட்டு போலீசாரை காட்ட வேண்டும் என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

300 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1800 கோடி) மதிப்பில் தயாரிக்க திட்டமிட்டுள்ள ‘ஸ்பெக்டர்’ படத்தின் தயாரிப்பு செலவை 250 மில்லியன் டாலராக (சுமார் ரூ.1500 கோடி) குறைக்க படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எனவே மெக்சிகோ நாடு அளிக்க முன் வந்துள்ள வரிச்சலுகையை ஏற்கவும், அதற்காக அவர்கள் கேட்கும் நிபந்தனைகளை ஒத்துக் கொள்ளவும் முடிவு செய்துள்ளது.

இதில் முதல் நடவடிக்கையாக ‘ஸ்பெக்டர்’ படத்தில் எஸ்ட்ரெல்லா கதாபாத்திரத்தில் நடிக்க இத்தாலி நாட்டு நடிகைக்கு பதிலாக மெக்சிகோ நடிகையான ஸ்டெபானி சிக்மன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். dinamani.com

கருத்துகள் இல்லை: