செவ்வாய், 17 மார்ச், 2015

பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திர : அவர்களை மன்னித்துவிடுங்கள் !

என் இதயம் நொறுங்கி விட்டது.. அவர்களை மன்னித்து விடுங்கள். என் கவலை எல்லாம் பள்ளி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்துதான். இப்படித்தான் கூறியிருக்கிறார் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரி. மேற்குவங்க மாநிலம் நாடியா மாவட்டம் ரனாகட், ஜீசஸ் மேரி கான்வென்ட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட 72 வயது கன்னியாஸ்திரி தற்போது உடல்நலம் தேறி வருகிறார். ரனாகட் மருத்துவமனையில் வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் அவரைப் பார்க்க ஏராளமானோர் வந்து செல்கின்றனர். அவர் முகத்தில் சோகம் இல்லை. அமைதியாக இருக்கிறார். ஆனால், மிகவும் சோர்வாக இருக்கிறார். என் இதயம் நொறுங்கி விட்டது. அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் என்று குற்றவாளிகளுக்காக பிரார்த்தனை செய்தார் கன்னியாஸ்திரி. பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டதை விட, அவருடைய கவலை எல்லாம் பள்ளி, பள்ளி மாணவர்களை சுற்றியே இருக்கிறது என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் ஆதிந்தரநாத் மோன்டல் கூறுகிறார்.
கன்னியாஸ்திரியின் பிரார்த்தனையைக் கேட்டு, அவரை பார்க்க வந்தவர்கள் துக்கத்தை அடக்க முடியாமல் கண்ணீர் விட்டனர்.
‘இதுதாங்க உண்மையான ஆன்ம பலம். இவரைப் போல உண்மையாக ஆன்மிகத்தில் ஈடுபடுபவர்களின் சிறப்பு இதுதான்’’ என்று கான்வென்ட் பள்ளியில் படிக்கும் மாணவனின் தந்தை ஒருவர் உணர்ச்சிப் பொங்க கூறினார். ஆனால், இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆவேசமாகிறார்.
பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு மனநல மருத்துவர்களும் கவுன்சலிங் கொடுத்தனர். தற்போது அவர் உடலளவிலும் மனதளவிலும் நன்றாக இருக்கிறார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போர் நடக்கும் நாடுகளில்கூட இப்படி நடக்கவில்லை
கன்னியாஸ்திரி பலாத்காரம் செய்யப்பட்ட தகவல் அடுத்த நாள் காலையில் (கடந்த ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் பரவியது.
ஜீசஸ் மேரி கான்வென்ட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஐரீன் மற்றும் மதர் ஜெனரல் ஆகியோர் ரோம் நகரில் இருந்தனர். அதிகாலை 5 மணிக்குத் தகவல் அறிந்ததும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக விமானத்தில் மேற்குவங்கம் திரும்பினர். மருத்துவமனையில் இருந்த பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியைச் சந்தித்தனர்.
இதுகுறித்து ஐரீன் கூறுகையில், ‘‘என்னுடைய வாழ்நாளில் மூத்த கன்னியாஸ்திரி மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடந்ததாகக் கேட்டதில்லை. போர் நடக்கும் பல இடங்களில் நாங்கள் சேவை செய்திருக்கிறோம். அந்த இடங்களில் கூட இப்படிப்பட்ட கொடூரம் நடக்கவில்லை’’ என்றார்.tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: