புதன், 18 மார்ச், 2015

EVKS இளங்கோவன்: தி.மு.க.,வுடன் இணைந்து போராடுவோம்

மத்திய, மாநில அரசுகளின், மக்கள் விரோத போக்கை கண்டித்து, எதிர்காலத்தில், தி.மு.க.,வுடன் இணைந்து போராடுவோம்'' என, தமிழக காங்., தலைவர் இளங்கோவன் கூறினார். அவரது பேட்டி:மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், விவசாயிகளின் அடிப்படை உரிமையை பாதிக்கும். இந்த சட்டம், தொழில் அதிபர்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாக இருக்கும். எனவே, இந்த சட்டத்தை எதிர்த்து, காங்., போராடி வருகிறது. நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில், சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு, அரசு போதிய ஒத்துழைப்பு தரவில்லை. மாநில அரசு உண்மையை மூடி மறைக்கிறது.இதனால், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, வரும் 23ம் தேதி, அனைத்து மாவட்டங்களிலும், காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ராகுல் இல்லாத நேரத்தில், அவரது வீட்டில் உளவுத் துறையினர் வேவு பார்த்துள்ளனர். இந்த செயல், தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. சமூக ஆர்வலர், 'டிராபிக்' ராமசாமி, ஐகோர்ட்டில் ஒரு உத்தரவு பெற்று, விதிமுறைகளை மீறி வைக்கப்பட்ட பேனர்களை அகற்றி வருகிறார். இந்நிலையில், அவரை போலீசார் கைது செய்து, துன்புறுத்தியிருப்பதும், தனிமனித சுதந்திரத்தை பாதிக்கும் செயல் தான்.
பல்வேறு பிரச்னைகளுக்காக, விவசாயிகள் ஏற்பாடு செய்துள்ள அனைத்து கட்சி கூட்டத்தில், காங்., பங்கேற்கும்.

இப்படிப்பட்ட பிரச்னைகளுக்காக, தி.மு.க., சார்பில் போராட்டம் முன்கூட்டியே அறிவித்து விட்டனர். அதனால், இணைந்து போராட்டம் நடத்தாமல், தனித்தனியாக அறிவித்து உள்ளோம்; எதிர்காலத்தில், இணைந்து போராடும் சூழ்நிலை வரும். தமிழக மீனவர்களை சுடுவோம் என, இலங்கை பிரதமர் கூறியுள்ளார். அவர்கள் வைத்திருப்பது பொம்மை துப்பாக்கி; திருப்பிச் சுட்டால் என்ன செய்வார்கள்? இவ்வாறு, இளங்கோவன் கூறினார்.

திருச்சியில் குஷ்பு :சென்னையில் இளங்கோவனும், திருச்சியில் நடிகை குஷ்புவும், திருநெல்வேலியில் தனுஷ்கோடி ஆதித்தனும், சேலத்தில் தங்கபாலுவும், கோவையில் பிரபுவும், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நடக்கும் ஆர்ப்பாட் டத் தில், 3,000 பேர் பங்கேற்க திட்டமிட்டு உள்ளனர்.

- நமது நிருபர் - dinamani.com

கருத்துகள் இல்லை: