சனி, 31 ஜனவரி, 2015

சட்டசபை தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி? மனிஷங்கர் அய்யர் கலைஞர் சந்திப்பு ......

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரசின் மூத்த தலைவருமான மணிசங்கர் அய்யர், நேற்று காலை, திடீர் என, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசியது, 'மீண்டும் தி.மு.க., - காங்., உறவு மலருவதற்கான துவக்கம்' என, இரு கட்சிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை, தமிழகத்தின் அனைத்து கட்சியினரும் ஆதரிக்க வேண்டும் என, அக்கட்சித் தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்த பின்னும், காங்., 'ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடவும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை' என்ற நிலைப்பாட்டை எடுத்து அறிவித்தது.
முன்னதாக, தி.மு.க., மகளிர் அணி செயலரான கனிமொழி, காங்., மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தை சந்தித்து, இது தொடர்பாக வலியுறுத்தியதையும், காங்., தரப்பில் புறக்கணித்தனர்.இதனால், காங்., மீது ஒட்டுமொத்த தி.மு.க.,விலும் கடும் அதிருப்தி நிலவுகிறது.இந்நிலையில், தி.மு.க.,வை சமாதானப்படுத்துவது போல, காங்., மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், கருணாநிதியை சந்தித்து பேசியிருக்கிறார். இதனால், இரு கட்சிகளுக்கும் இடையில், புதிய உறவு ஏற்பட்டிருப்பதாக, இரு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, காங்., வட்டாரத்தினர் கூறியதாவது:தமிழகத்தில், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்., போட்டியிடாதது குறித்து, கடுமையான விமர்சனங்களுடன், கட்சித் தலைவி சோனியாவுக்கு, காங்., தொண்டர்களிடம் இருந்து, ஏகப்பட்ட கடிதம் போயிருக்கிறது.'தமிழகத்தில், காங்கிரசுக்கு கூட்டணி வாய்ப்பு இல்லாமல் போனது, பெரும் குறை தான். அதற்கு மிக முக்கிய காரணம், தமிழகத்தில் இருக்கும் ஒருசில தலைவர்களின் இறுமாப்பு தான். அவர்கள் செய்த சிற்சில காரியங்கள் தான், தி.மு.க., என்னும் சக்தி, நம்மிடம் இருந்து பிரிந்து விட்டது.தமிழகத்தை பொறுத்த அளவில், இரு திராவிட கட்சிகள் தான் பிரதானமானவை. அதில், அ.தி.மு.க.,வுடன் இனிமேல் நாம் நெருங்க வாய்ப்பே இல்லை. ஆனால், தி.மு.க.,வுடன் இன்றைக்கும் நாம் நெருங்கலாம். மதச்சார்பற்ற கொள்கையில், அக்கட்சியும் உறுதியாக இருப்பது போல, கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானமே போட்டிருக்கின்றனர்.


நெகிழ்ந்தார்:

தன் கட்சியின் ஸ்ரீரங்கம் வேட்பாளருக்காக, அனைத்து கட்சியினரிடமும் தி.மு.க., தலைவர் கருணாநிதி ஆதரவு கேட்ட போதே, காங்., அதை செய்திருக்கலாம். அதை செய்யாததோடு, காங்., சார்பில் வேட்பாளர் நிறுத்தவில்லை என்ற அறிவிப்பின் போது, யாருக்கும் ஆதரவில்லை என்றும் அறிவித்திருப்பது, தி.மு.க.,வுடனும் நெருங்க முடியாத சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் பாதிப்பு, காங்கிரசுக்குத் தானே தவிர, தி.மு.க.,வுக்கு அல்ல' என்றெல்லாம், எழுதப்பட்ட கடிதங்களைப் பார்த்த சோனியா, இதுகுறித்து, மணிசங்கர் அய்யரை அழைத்து விசாரித்தார்.அதன்பின் தான், தி.மு.க.,வை சமாதானப்படுத்தும் விதமாக, மணிசங்கர் அய்யரை அனுப்பி, கருணாநிதியை, சோனியா சந்திக்க வைத்திருக்கிறார்.

சோனியாவின் கருத்துக்களை, கருணாநிதியிடம், மணிசங்கர் சொல்ல, அவரும் நெகிழ்ந்து போயிருக்கிறார். ஸ்ரீரங்கம் தேர்தலுக்கு பின், அடுத்தடுத்த அரசியல் நிகழ்வுகளை பார்த்து, இரு கட்சிகளும், சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும்.இவ்வாறு, அக்கட்சி வட்டாரத்தினர் தெரிவித்தனர்.

- நமது சிறப்பு நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: