செவ்வாய், 27 ஜனவரி, 2015

ராமஜெயத்தை கொன்றவர்கள் விமானத்தில் வந்தார்களா? பெரம்பலூர் கிடைக்கும் என நம்பியபோது நெப்போலின் பெரம்பலூரில் .....

ராமஜெயம் கொலை செய்யப்பட்ட விதம் இலங்கையில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் நடக்கும் கொலைகள் பாணி என்றும், மலேசியா ஸ்டைல் என்றும் சொல்லப்பட்டது. காரணம், கட்டுக் கம்பிக் குவியலில் இருந்து கம்பிகளை எடுத்து ராமஜெயத்தின் கை, கால்களைக் கட்டி, வேனின் ரெக்சின் ஸீட் மீது போர்த்தப்பட்டு இருக்கும் துணியைக் கிழித்து வாயில் வைத்து அடைத்து இருந்தார்கள். தலையின் பின்பக்கம் கனமான ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டு இருந்தது.
இவை எல்லாம் வெளிநாட்டு பாணி, இவ்வளவு கொடூரமாக  ராமஜெயத்தை கொலை செய்யும் அளவுக்கு யாரும் இங்கு இல்லை. காரணம் ராமஜெயம் உயிரோடு இருந்தவரை அவரை ஸ்கெட்ச் போட்ட பலரை தன்வயப்படுத்துவதில் வல்லவர் அவர் என்கிறார்கள்.
இதனால், திருச்சி மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகள் ராமஜெயத்துடன் நல்ல லிங்க்கில் இருந்தார்களாம். எனவேதான், தனிப்படைப் போலீஸார், ராமஜெயம் கொலை செய்யப்பட்ட 2012 மார்ச் 29ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு சென்றவர்கள், வந்தவர்கள் என அனைவரின் பெயர் பட்டியலையும் கையோடு வைத்துக்கொண்டு விசாரணை நடத்தினார்கள்.

சவால் விட்ட ரவுடி குணா

திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி மண்ணச்சநல்லூர் குணா. முட்டை ரவி கோஷ்டியைச் சேர்ந்தவர் இந்த குணா. முட்டை ரவி என்கவுண்டரில் கொல்லப்பட, அந்த என்கவுண்டருக்குப் பின்புலமாக இருந்தவர் ராமஜெயம் என கருதினான் குணா. எனவே, முட்டை ரவியின் மரணத்துக்குக் காரணமான ராமஜெயத்தைப் போடுவேன் என சவால் விட்டதாக பரபர தகவல் ஒன்று அந்த சமயத்தில் உலா வந்தது. 'ராமஜெயத்தைக் கொலை செய்ய ஒரு வி.ஐ.பி. என்னை அணுகினார்’ என்று  சொன்னதாகவும், கொலை நடந்தபோது  சொல்லப்பட்டது. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட போது குணா சிறையில் இருந்தான். ஆனாலும், அவனை தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள் போலீஸார்.

ராமஜெயத்தின் நிறைவேறாத ஆசை

தேர்தலில் நின்று ஜெயித்துவிட வேண்டும் என்பது ராமஜெயத்தின் ஆசையாக இருந்தது. குறிப்பாக, எம்.பி. ஆகிவிட வேண்டும் என்பது அவரின் ஆசையாக இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் பெரம்பலூர் தொகுதியில் நிற்க ஆசைப்பட்டு, அதற்கான வேலையும் செய்தார். ஆனால், மெலிடத்து சப்போர்ட் காரணமாக அவருடைய உறவினரான நடிகர் நெப்போலியனுக்கு ஸீட் கிடைத்தது. இதனால், சென்னை அண்ணா அறிவாலயம் வாசலில் ராமஜெயத்துக்கும் - நெப்போலியனுக்கும் நேரடி மோதல் வெடித்து, கைகலப்பு வரை சென்றது. இந்நிலையில், பெரம்பலூர் தொகுதியில் போட்டியிட்ட நெப்போலியன் மத்திய இணை அமைச்சரானார். பிறகு அமைதியானார். இப்போது பி.ஜே.பி.யில் சேர்ந்துவிட்டார். அது தனிக்கதை.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் நிச்சயம் ஸீட் ராமஜெயத்துக்குதான் என்று அவருடைய ஆதரவாளர்கள் சொல்லிக் கொண்டிருந்த வேளையில்தான் படுகொலை செய்யப்பட்டார் ராமஜெயம்!

மர்மம் விலகுமா?

ஆரம்பத்தில் நடத்தப்பட்ட திருச்சி மாநகர போலீஸாரின் விசாரணையும் சரி, சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் விசாரணையும் சரி, ராமஜெயத்தின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சுற்றி சுற்றியே வந்தது. இதில் கடுப்பான நேரு குடும்பத்தினர், 'திருச்சியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் கொலை நடந்ததில் இருந்து இப்போது வரை இங்கேயே இருக்கிறார்கள். அதனால், இந்தக் கொலை வழக்கு நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை' என்று சொல்லி வந்தார்.

குறிப்பாக திருச்சி மாநகர காவல்துறை கமிஷனராக இருந்த சைலேஷ்குமார் யாதவ், மூன்றாண்டுகளுக்கும் மேலாக அதே பொறுப்பில் நீடித்தார். இந்த அதிகாரிகள் அதே இடத்தில் தொடர்ந்து பணி புரிவதற்கும், இந்தக் கொலை வழக்கு துப்பறியாமல் கிடப்பதற்கும் தொடர்பிருப்பதாக ராமஜெயத்தின் குடும்பத்தினர் சந்தேகப்பட்டனர். இப்போது இடைத்தேர்தலை காரணம் காட்டி சைலேஷ் குமார் யாதவை மதுரைக்கு மாற்றியுள்ளார்கள். இனி  ஏதாவது துப்பு துலங்க வாய்ப்புள்ளது என்று ராமஜெயம் தரப்பில் சொல்லப்படுகிறது.

ராமஜெயம் நல்லவரா கெட்டவரா என விவாதம் பல நடக்கலாம். ஒரு மனிதனை கொடூரமாகக் கொன்றதற்கான காரணத்தைக்கூட நம்மூர் போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதுதான் வேதனை!

-முற்றும்-
விகடன்.com
-சி.ஆனந்தகுமார்

கருத்துகள் இல்லை: