ஞாயிறு, 25 ஜனவரி, 2015

ஜெயலலிதாவுக்கு சவால்விட்ட ராமஜெயம்! ராமஜெயம் கொலை வழக்கு... திகில் ஃப்ளாஷ்பேக்! (மினி தொடர் -5)

ஜெயலலிதாவின் வாக்குகள் வித்தியாசம் 50 ஆயிரத்தைக்கூட தாண்டாதற்கு ராமஜெயம் தடைக்கல்லாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சவால் விட்டார் ''இந்த சவால்கள்தான் ஆட்சியாளர்களுக்கு ராமஜெயத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. மக்கள் நெருக்கம் மிக்க தில்லை நகர் பகுதியில் இருந்து ராமஜெயம் கடத்தப்பட்டதும், நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள்  இயங்காமல் இருந்தது. விசாரணை என்கிற பெயரில் காவல்துறை அதிகாரிகள் நேருவின் குடும்பத்தினரையே வட்டமிட்டனர்" என்று சொல்லும் ராமஜெயத்தின் ஆதவாளர்கள், ''இந்த கொலைக்கான எந்தத் துருப்பையும் கண்டுபிடிக்காமல் இருக்க, இந்தச் சவால் காரணமாக இருக்கலாம். இதன் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் மூளையாக செயல்பட்டிருக்கலாம்" என்கிறார்கள்.
 இதோ... ஸ்ரீரங்கத்தில் இடைத்தேர்தல் களைகட்டத் தொடங்கிவிட்டது. அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் படை களமிறங்கியிருக்கிறது. போட்டிக்கு பொதுவேட்பாளர் என்றெல்லாம் மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து சோர்ந்துபோன கருணாநிதி, 63 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு பட்டியலை அறிவித்தார்.

ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயிக்கணும் என அ.தி.மு.க.வினரும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அச்சாரம் ஸ்ரீரங்கம் தேர்தல்தான் என நினைக்கும் தி.மு.க.வினரும் ஓடியாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்தத் தேர்தலுக்கு திட்டம் தீட்டி வேலை செய்ய ராமஜெயம் இல்லாதது தி.மு.க.வினருக்கு மிகப்பெரிய மைனஸ்தான்.
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் கரைவேட்டி கட்டாத கட்சிக்காரராய் திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதியில் வலம் வந்தவர் ராமஜெயம். ''ஸ்ரீரங்கம் அ.தி.மு.க.வின் கோட்டை, அவர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதி என சொல்லவது தவறு. ஜெயலலிதா ஒன்றும் தோல்வியே அடையாதவர் இல்லை. ஜெயலலிதாவை நேரில் சந்திக்க ஆசைப்பட்டால் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்கூட அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிட்டுதான் பார்க்க வேண்டும். ஆனால், தி.மு.க. வேட்பாளர் அப்படிப்பட்டவர் இல்லை. நீங்கள் கூப்பிட்டக் குரலுக்கு ஓடி வருவார். சாதாரணமானவர். உங்களுக்காக ஓடி உழைக்கக்கூடியவர்.

ஜெயலலிதாவுக்கு பயந்துகொண்டு பத்திரிகைகளுக்கு போஸ் கொடுக்க, நாலைந்து இடத்தில் நோட்டீஸ் கொடுத்துவிட்டு கலைந்துசெல்கின்ற நிலை அங்கே இருக்கு. நாங்கள் அப்படியில்லை. கிராமம் கிராமமாக மக்களைத் தேடி செல்கின்றோம். மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் அதுதான் எங்களின் பலம்.

தி.மு.க. என்கிற கட்சியே இல்லாத அளவுக்கு அந்தக் கட்சியைத் தோற்கடிப்பேன் என தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதா சொல்லுறாங்க. அப்படிப்பட்ட ஜெயலலிதாவைத் தோற்கடிப்பதுதான் எனது லட்சியம். ஜெயலலிதாவை வீழ்த்த ஸ்ரீரங்கத்தில் நான் மேற்கொள்ளும் வேலை, வரலாற்று சிறப்பு மிக்க வேலை. நமது  வியூகம், 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்க வேண்டும். எந்த வழக்கு, அடக்குமுறை வந்தாலும் நான் துணையிருக்கிறேன். ராணுவ சிப்பாய்களைப்போல வேலை செய்யுங்கள்" என தி.மு.க.வினருக்கு கட்டளையிட்டார் ராமஜெயம்.

இந்த சவாலில் ராமஜெயம் தோற்றுபோனாலும், கடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரான ஜெயலலிதா, 41,848 ஓட்டுகள்தான் முன்னிலை பெற்றார். ஜெயலலிதாவின் வாக்குகள் வித்தியாசம் 50 ஆயிரத்தைக்கூட தாண்டாதற்கு ராமஜெயம் தடைக்கல்லாக இருந்தார். கடுமையாக உழைத்தார். சவால் விட்டார். 

''இந்த சவால்கள்தான் ஆட்சியாளர்களுக்கு ராமஜெயத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தியது. மக்கள் நெருக்கம் மிக்க தில்லை நகர் பகுதியில் இருந்து ராமஜெயம் கடத்தப்பட்டதும், நகரின் முக்கிய வீதிகளில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள்  இயங்காமல் இருந்தது. விசாரணை என்கிற பெயரில் காவல்துறை அதிகாரிகள் நேருவின் குடும்பத்தினரையே வட்டமிட்டனர்" என்று சொல்லும் ராமஜெயத்தின் ஆதவாளர்கள், ''இந்த கொலைக்கான எந்தத் துருப்பையும் கண்டுபிடிக்காமல் இருக்க, இந்தச் சவால் காரணமாக இருக்கலாம். இதன் பின்னணியில் சில காவல்துறை அதிகாரிகள் மூளையாக செயல்பட்டிருக்கலாம்" என்கிறார்கள்.
சி.பி.ஐ. கைகளுக்கு விசாரணை சென்றால்தான் இந்த மரணத்தின் மர்மங்கள் விலகும் என்பது அவர்களின் கருத்து.

ராமஜெயத்தை கொன்றவர்கள் விமானத்தில் வந்தார்களா... ராமஜெயம் கொலையில் வேறு என்னென்ன மர்மங்கள் உள்ளன? என்பதை நாளைப்  பார்க்கலாம்.

-சி.ஆனந்தகுமார் விகடன்.com

கருத்துகள் இல்லை: