புதன், 28 ஜனவரி, 2015

டெல்லி : ஆம் ஆத்மி முன்னணியில்! பாஜக கடும் போட்டி! காங்கிரஸ் பின்னடைவு ?


A pre-poll survey conducted by ABP News – Nielsen shows that the Aam Aadmi Party has managed to win back supporters in New Delhi
.புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜ, ஆம் ஆத்மி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது என்றும், தற்போதைய நிலவரப்படி பாஜவின் செல்வாக்கு சரிந்தும், ஆம் ஆத்மியின் செல்வாக்கு சற்று அதிகரித்துள்ளதாகவும் கருத்துக்கணிப்பு ஒன்று தெரிவிக்கிறது.டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 7ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்கள் தாக்கல் முடிவடைந்த நிலையில் பாஜ, காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பூத் கமிட்டி அமைப்பது, வீடுதோறும் சென்று பொதுமக்களை சந்திப்பது, கலை நிகழ்ச்சிகள் மூலம் வாக்காளர்களை கவர்வது போன்றவற்றை கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த தேர்தலில் அதிக இடங்களை பிடித்திருந்தபோதிலும் பாஜவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. இந்த முறை எப்படியாவது வெற்றிபெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் பாஜ தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகிறது. முதல்வர் வேட்பாளராக கிரண் பேடியை பாஜ அறிவித்தது. அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் இணைந்து செயல்பட்டவர் கிரண்பேடி. பாஜ, ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி நிலவி வரும் நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கிரண் பேடியை பாஜ களம் இறக்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிரண் பேடி தற்போது தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.   

லோக்பால் மசோதாவை நிறைவேற்ற முடியாததால் கெஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனால் ஆம் ஆத்மி அரசு 49 நாட்களில் முடிவுக்கு வந்தது. இந்த முறை ஆட்சியை பிடித்து விட வேண்டும் என முனைப்புடன் அக்கட்சி களம் இறங்கியுள்ளது. கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த காங்கிரஸ் இம்முறை கவுரமான இடங்களை பிடித்து விட வேண்டும் என்ற நோக்குடன் வாக்காளர்களை சந்தித்து வருகிறது. மூத்த தலைவரான அஜய் மக்கானை காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் முன்னிலைப்படுத்தி பிரசாரம் செய்து வருகிறது. மும்முனை போட்டி நிலவி வரும் நிலையில், பாஜ, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

கடந்த 24, 25ம் தேதிகளில் ஏபிபி நியூஸ்-நீல்சன் எடுத்த கருத்துக்கணிப்பின்படி, பாஜவை காட்டிலும் ஆம் ஆத்மிக்கு சற்று செல்வாக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 2,262 பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. இந்த மாதம் 2வது வாரத்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின்போது ஆம் ஆத்மி கட்சிக்கு 46 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். தற்போது அக்கட்சியின் செல்வாக்கு 4 சதவீதம் அதிகரித்துள்ளது.கடந்த முறை பாஜவுக்கு 45 சதவீதமாக இருந்த ஆதரவு இந்தமுறை 41 ஆக குறைந்துவிட்டது. ஆனாலும் இரு கட்சிகள் இடையே பலத்த போட்டி நிலவும் என கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது.

ஆம் ஆத்மிக்கு சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினரின் ஆதரவு அதிகமாக இருப்பதாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. முதல்வர் வேட்பாளரான கிரண்பேடியால் பாஜவின் செல்வாக்கு பெரிய அளவில் உயரவில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், அஜய் மாக்கன் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அடுத்தடுத்து பிரசார பொதுக்கூட்டங்களில் கலந்துகொள்ள உள்ளனர். எனவே, இந்தமுறை டெல்லி தேர்தலில் போட்டி கடுமையாக இருக்கும் என தெரிகிறது - tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: